Wednesday, August 31, 2011

சனி பகவான் கொடுப்பாரா கெடுப்பாரா?

ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். பொதுவாக நாம் அன்றாடம் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும் பலன்கள் அனைத்தும் கோட்சார ரீதியாக கூறப்படும் பொதுப் பலன்களே ஆகும்.

கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமாக சனி பகவானே இருக்கிறார். சனி என்ற பெயரைக் கேட்டாலே எல்லோர் மனதிலும் ஒரு பய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். 

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை, 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனி பகவான் 3, 6, 11ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை, உடல் நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்ம ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி, என்றும் கூறுவார்கள். 

இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சனைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

சனி 4ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.

சனி 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சனைகள், விரயங்கள் உண்டாகும்.

சனி 8ல் சஞ்சரிக்கும் போது, அஷ்டம சனி உண்டாகிறது. இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். 

குறிப்பாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரிக்கும் போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.

பொதுவாக மேற்கூறிய ஸ்தானங்களில் சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.

9.9.2009 அன்று திருக்கணிதப்படியும், 26.9.2009 அன்று வாக்கியப்படியும் ஏற்பட்ட சனி மாற்றத்தால் சனி பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் சிம்ம ராசியும், துலாத்திற்கு விரய சனியும், மிதுன ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் கும்பத்திற்கு அஷ்டம சனியும் மீன ராசிக்கு கண்ட சனியும், தனுசுவிற்கு ஜீவன சனியும் உண்டாகும். இதனால் இந்த ராசி நேயர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

கன்னியில் சனி சஞ்சரிப்பதால் மேஷம், கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு இரண்டரை வருட காலங்கள் பொற்காலங்களாக அமைந்து நற்பலனை உண்டாக்கும்.

சனியால் பாதிக்கப்படும் நேயர்கள் சனிக்கு உகந்த பரிகாரங்களை செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு சனிக்கு பரிகாரம் செய்யலாம். முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும் சென்று பரிகாரம் செய்யலாம்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Sunday, August 28, 2011

சுய முயற்சியால் யாரெல்லாம் சாதனை செய்ய முடியும்?

3ம் பாவத்தின் சிறப்பு
பொதுவாக ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை தெளிவாக நிர்ணயம் செய்யலாம். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் உண்டு. தற்போது 3ம் பாவத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கு தெளிவாகப் பார்க்கலாம். 

ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவத்தைக் கொண்டு ஒருவரது முயற்சி, தம்பி, தங்கை யோகம், காது, தோள்பட்டை, இசை ஞானம், வேலையாட்கள் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.

3ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை 3ம் வீட்டிற்கு இந்தாலும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், பொருளாதார மேன்மை உண்டாகும். 3ல் சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்கள் அமையப் பெற்றால் ஆண் உடன் பிறப்பும் சுக்கிரன் சந்திரன் அமையப் பெற்றால் தங்கை யோகமும் உண்டாகும். 3ல் குரு அமைந்திருந்தாலும் 3ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தாலும் உடன் பிறந்தவர்கள் வசதி வசய்ப்புடன் வாழக்கூடிய அமைப்பு உண்டாகும். 

3ல் சனி அமையப் பெற்று செவ்வாய் பார்த்தால் சகோதர வழியில் இழப்புகள் ஏற்படும். 3ம் வீட்டில் சனி, ராகு அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷமாகும். இளைய உடன் பிறப்புகள் ஏற்படாது. 

சகோதர காரகன் செவ்வாய் பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் உடன் பிறந்தவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 3ல் சுக்கிரன் அமையப் பெற்று அதனை சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தால் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தோஷமாகும்.

3ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் இணைந்து அமையப் பெற்றாலும், 3ம் வீடு சுக்கிரன் சந்திரன் வீடாக இருந்து, சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை பெற்றோ ஆட்சி, உச்சம் பெற்றோ இருந்தாலும் கலை, இசை போன்றவற்றிலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டாகும்.

3ல் பாவ கிரகங்கள் பலமாக அமைய பெற்று சுபர் பார்வை ஏற்பட்டிருந்தால் எடுக்கின்ற முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும் அமைப்பு, சுய முயற்சியால் பல்வேறு சாதனைகளை செய்யும் அமைப்பு உண்டாகும்.

3ல் சனி ராகு இணைந்திருந்தால் நகத்தில் பாதிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி 3, 11ல் சனி ராகு அமையப் பெற்று புதன் பலமிழந்தால் காதுகளில் பாதிப்பு உண்டாகும். சூரியன் செவ்வாய் 3ல் இருந்து பாவ கிரகங்கள் பார்வை பெற்றால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. 

அதுபோல 3ல் செவ்வாயை பாவகிரகங்கள் பலமாக பார்வை செய்தாலும், பாவ கிரக சேர்க்கை பெற்றாலும் கையில் ஏதாவது ஒரு ஆயுதத்தால் அடிபடக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 

அதுமட்டுமின்றி 3ல் பாவ கிரகங்கள், பலமாக அமையப் பெற்று சுபர்பார்வையின்றி இருந்தால் கை கால் வலி, வாத நோய் உண்டாகும். குறிப்பாக 3, 9ல் பாவ கிரகங்கள் இருப்பதன் மூலம் கை கால்களில் முட்டிகளில் வீக்கம் உண்டாகும். 3ல் கிரகங்கள் பலமிழந்திருந்தாலும், சனி பகவான் பலமிழந்து பாவகிரக சேர்க்கைப் பெற்றாலும் வேலையாட்களால் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Thursday, August 25, 2011

தட்டுப்பாடற்ற தன வரவு யாருக்கு?

இன்றைய சமுதாயத்தில் எல்லோரும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதையே விரும்புகிறார்கள். தாராளமான பண நடமாட்டம் இருந்தால் தான் அன்றாடம் எல்லாவிதமான செலவுகளையும் சமாளிக்க முடியும். பணம் என்பது சிலருக்கு  சொந்த உழைப்பால் உண்டாகிறது. சிலருக்கோ மற்றவர்களின் உதவியால் கிடைக்கிறது. சிலருக்கு நேர்மையான வழியிலும் சிலருக்கோ தவறான வழியிலும் தன வரவுகள் உண்டாகிறது. 

பொதுவாக பண நடமாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஜாதக ரீதியாக சிறப்பான தன யோகம் இருந்தால் மட்டுமே தாராள தன வரவு உண்டாகிறது. தாராளமான தன வரவு யாருக்கு உண்டாகிறது யாரால் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.

தன யோகம்
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11ம் வீடு லாபஸ்தானம் ஆகம். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10ம் வீடு தொழில் ஸ்தானமாகும். 

பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11க்கு அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும் 11ம் அதிபதி 1, 2, 4 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும்.

பொதுவாக தனாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுகிறதோ, எந்த பாவாதிபதியுடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அக்கிரகம் யாரை குறிக்கிறதோ அவர்கள் மூலம் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

தந்தை
ஜென்ம லக்னத்திற்கு 9ம் வீடு தந்தை ஸ்தானம்.  தந்தை காரகன் சூரியன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 2, 9க்கு அதிபதி பலம் பெற்று இருந்தாலும் 2, 9க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று உடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் 2, 9ல் பாவ கிரகங்கள் அமையாமல் சூரியன் பாவிகள் சேர்க்கை பெறாமலும் இருந்தால் தந்தை மூலமாக தாராள தன வரவு உண்டாகும். குறிப்பாக 9ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று 2, 4க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் தந்தை மூலமாக தாராள தன வரவுகள் உண்டாகும்.

தாய்
ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீடு தாய் ஸ்தானம் ஆகும். 2ம் அதிபதியும் 4ம் அதிபதியும் இணைந்திருந்தாலோ, பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். 

அதுபோல தாய் காரகன் சந்திரன் 2, 4க்கு அதிபதிகளுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றால் தாய் வழியில் நல்ல அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும்.

சகோதரன்
ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவம் இளைய சகோதர ஸ்தானம் ஆகும். 11ம் வீடு மூத்த சகோதர ஸ்தானம் ஆகும். சகோதர காரகன் செவ்வாய் ஆவார். பொதுவாக 1, 3க்கு அதிபதிகள் குரு போன்ற சுப கிரக சேர்க்கைப் பெற்று 2ல் அமையப் பெற்றாலும் 3ம் அதிபதி 2ல் அமையப் பெற்று குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றாலும் 2, 3க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் பலம் பெற்றாலும் 3ம் அதிபதி செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ பெற்று 2ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 3, 11க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள் ஏற்றங்கள் உண்டாகும். 

3ம் அதிபதி உச்சம் பெற்று ஆண் கிரகப் பார்வை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ உடன் செவ்வாய் இருந்தாலும், 3, 10க்கு அதிபதிகள் சேர்க்கைப் பெற்றோ, பார்வை பெற்றோ இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், அசையா சொத்து யோகம், கூட்டுத் தொழில் யோகம், தாராள தன சேர்க்கை உண்டாகும்.

மனைவி
ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவம் மனைவி ஸ்தானம் ஆகும. மனைவிக்கு காரகன் சுக்கிரன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும் 7ம் வீட்டு அதிபதியும் பலமாக இருந்தால் மனைவி மூலமாக தாராளமான தன வரவுகள் உண்டாகும். 

குறிப்பாக 7ம் அதிபதி 2, 4, 5, 9, 11க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் கேந்திர திரிகோணாதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் மனைவி மூலமாக அசையா சொத்து சேர்க்கை அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரனும் பலம் பெற்று விட்டால் தாராளமான தன வரவுகள் மனைவி மூலம் யோகங்கள் ஏற்றங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி 7, 10க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்து தாராளமான தன வரவினை அடையும் அமைப்பு உண்டாகும்.
பூர்வீகம்
ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையாமல் 5ம் அதிபதி 2, 9, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்கள் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

குறிப்பாக 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், 4, 5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும்,  வலுவாக அமையப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்களை அடையும் யோகமும் அதன் மூலம் தாராள தன வரவும் உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Sunday, August 21, 2011

உபத்திரம் உண்டாக்கும் களத்திர தோஷம்

இன்றைய சமுதாயத்தில் நிம்மதியான வாழ்க்கை அமைய வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும், மண வாழ்வில் நிம்மதியும் இருக்க வேண்டும். ஜனன ஜாதக அமைப்பில் சிறப்பாக கிரக அமைப்பு இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், மங்களகரமாகவும் இருக்கும். அதுவே தோஷங்கள் அமைந்து விட்டால் மண வாழ்க்கை நிம்மதியற்றதாக ஆகிவிடும். 

பொதுவாக 7ம் வீடு களத்திர ஸ்தானம் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடும், சுக ஸ்தானமான 4ம் வீடும் காதல் மற்றும் புத்திர ஸ்தானமான 5ம் வீடும் மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீடும், கட்டில் சுக ஸ்தானமான 12ம் வீடும் மண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும், மண வாழ்விற்கு காரகனாக விளங்குகிறார்கள். ஒவ்வொருவரின் மண வாழ்க்கையும்அவரவர் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பிற்கேற்ப உண்டாகிறது. 7ம் வீடும் அதனை பார்க்கும் கிரகங்களும் மணவழ்விற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 7ல் அமையும் கிரகங்களின் இயல்பிற்கேற்ப மண வாழ்க்கை அமைகிறது. அதனால் ஜென்ம லக்னாதிபதியும், 7ம் அதிபதியும் 7ல் அமையும் கிரகமும் நட்பு கிரகமாக இருப்பதும் மிகவும் உத்தமம். பகை கிரகங்களாக இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உதாரணமாக சிம்ம லக்னம், கும்பலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி 7ம் அதிபதி பகை கிரகம் என்பதால் அவ்வளவு எளிதில் மண வாழ்வில் ஒற்றுமை உண்டாவதில்லை.

மண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட 7ம் அதிபதியும் 7லிலும் களத்திர காரகனும் சுபர் சேர்க்கை மற்றும் பார்வையுடன் இருப்பது நல்லது. அதுவே 7ம் அதிபதியும் சுக்கிரனும் சனி செவ்வாய் ராகு கேது சூரியன் போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும். செவ்வாய் கேதுவால் தோஷம் உண்டானால் மற்றவர் மீது (வாழ்க்கை துணை) கோபப்படும் நிலை, முன்கோபம், சண்டை சச்சரவு, விபத்து, போன்றவற்றால் வாழ்வில் பிரிவு உண்டாகும். 

ராகு தோஷம் உண்டானால் கலப்பு திருமணம், வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கையில்லாத நிலை, ஏமாற்றுதல், போன்றவை மூலமாக பிரிவு உண்டாகும். சனியால் ஒருவருக்கு களத்திர தோஷம் உண்டானால் வாழ்க்கை தாமதமாக அமைவது மட்டுமின்றி ஒரு பற்று பாசமற்ற நிலை இருக்கும். பொதுவாக 7ல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கை ஏறுபட்டாலோ, 7ம் வீட்டை பாவிகள் பார்த்தாலும் மண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும்.

7ம் அதிபதி 6, 8, 12ல் அமைந்து அது ஆட்சி வீடு அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக மனைவிக்கு நோயினை உண்டாக்கும். சுக்கிரன் பாவிகளுக்கிடையே சேர்க்கை பெற்று இருந்தால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். ஜென்ம லக்னத்தில் 2, 7ல் பாவிகள் அமையப் பெற்றால் மனைவியை இழக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு காதல் திருமணத்தைப் பற்றி குறிக்கும் ஸ்தானமாகும். 9ம் வீடு தந்தை ஸ்தானம் மட்டுமின்றி நமது முன்னோர்களையும், குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்கும் ஸ்தானமாகும். பொதுவாக செவ்வாய் சுக்கிரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 5, 9ல் அமையப் பெற்றாலும் 5, 9ம் பாவங்களில் பலமான பாவ கிரகம் அமையப் பெற்றாலும் கடுமையான களத்திர தோஷம் உண்டாகி கலப்பு திருமணம், காதல் திருமணம் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 

அதுபோல சந்திரன் பலமிழந்து 7ல் அமையப் பெற்று பாவகிரக சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனை பாதிக்கப்பட்ட நபரை மணமுடிக்கக் கூடிய சூழ்நிலை, உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Saturday, August 20, 2011

பிரபல ஜோதிடர் கணித்த சனி பெயர்ச்சி பலன்கள்

பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் கணித்த சனி பெயர்ச்சி பலன்கள் இங்கே கிளிக் செய்யவும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001



Friday, August 19, 2011

திருமண பொருத்தம் - பாகம் 6

வேதை பொருத்தம் 
 
வேதை என்பது பாதிப்பு   எனப் பொருள்படும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும்.

அஸ்வினி -     கேட்டை
பரணி -     அனுஷம்
கார்த்திகை  -   விசாகம்
ரோகிணி   -  சுவாதி
திருவாதிரைக்கு   -   திருவோணம்
புனர்பூசம்   -   உத்திராடம்
பூசத்திற்கு   -   பூராடம்
ஆயில்யம்   -   மூலம்
மகம்  -    ரேவதி
பூரம் -    உத்திரட்டாதி
அஸ்தம்  -   சதயம்
உத்திரம்  -    பூரட்டாதி

இவை ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை, வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக்கூடாது.  ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் இந்த 4 லும் ஆண் நட்சத்திரமானால் திருமணத்தில் தோஷம் இல்லை. பெண் நட்சத்திரமானால் தோஷம் உண்டு.

பெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு தோஷம். ஆயில்யம், மாமியாருக்கும், கேட்டை, மூத்த மைத்துனருக்கும், விசாகம், இளைய மைத்துனருக்கும் தோஷமாகும்.

பொதுவாக ஜென்ம ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் இதில் எந்த சுபகாரியங்களையும் செய்ய கூடாது.

நட்சத்திரத்தில் பொருத்தத்தில் விதி விலக்குகள்
 
ராசி பொருத்தம், அல்லது ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் ஸ்திர தீர்க்க பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் தவறில்லை.

ஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சம சப்தம் ராசிகளில், இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை.

பெண்ணின் ராசி ஒற்றை படை ராசியாக அமைந்து அதற்கு 6 அல்லது 8ம் ராசியாக ஆணின் ராசி அமைவது நல்லது.

பெண் ஆண் இருவருக்கும் ஒரே திசை, புக்தி நடக்கக் கூடாது. அது தசா சந்தியாகும். தவிர்ப்பது. மிகவும் நல்லது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றால் 3 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

பொதுவாக ஜனன லக்னம், ராசி அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12ம் வீடுகளில் அசுப கிரகங்கள் இருப்பது, தோஷமாகும். குறிப்பாக செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷ அமைப்பு என்கிறோம்.

ஆண், பெண் இருவருக்கும் 1, 7, 2, 8 போன்ற இடங்களில் ராகு கேது அமைவதும் எல்லா கிரகங்களும், ராகு கேது பிடிக்குள் இருப்பதும் சர்பதோஷ அமைப்பாகும்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அமையப் பெற்றவருக்கும் அதே போல தோஷங்கள் உள்ள வரையே திருமணம் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு லக்னத்திற்குள் 2, 7 மற்றும் 11ம் வீடுகளில் உள்ள கிரகங்களின் திசை புக்தி 7ம் வீட்டு நட்சத்திர அதிபதியின் திசை புக்தி காலம் 7ம் வீட்டை பார்க்கும் கிரகங்களின் திசை புக்தி காலம், சுக்கிரன் நின்ற வீட்டதிபதியின் திசை புக்தி காலம் போன்றவற்றில் திருமணம் நடைபெறும்.

கோட்சார ரீதியாக ஜெனன ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் திருமணம் நடைபெறும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

திருமண பொருத்தம் - பாகம் 5

வசியப் பொருத்தம்
வசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.

ராசிகள்   -  வசிய ராசிகள்
 
மேஷம்  -   சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்  -   கடகம், துலாம்
மிதுனம்  -   கன்னி
கடகம்    - விருச்சிகம், தனுசு
சிம்மம் -   துலாம்
கன்னி  -  ரிஷபம், மீனம்
துலாம்  -  மகரம்
விருச்சிகம்   -  கடகம், கன்னி
தனுசு  -   மீனம்
மகரம்   - மேஷம், கும்பம்
கும்பம்  -  மீனம்
மீனம் -    மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.

ரஜ்ஜீ பொருத்தம்
 
பத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜீ பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருக சீரிஷம் என நட்சத்தரிங்களை ஏறு முகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ் நோக்கி வருபவை அவரோகணம் என்றும் கூறப்படும்.

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி இந்த 6ம் பாத ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி இந்த 6ம் தொடை ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

விசாகம், கிருத்திகை, உத்திராடம், புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி இந்த 6ம் வயிறு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

சதயம், அஸ்தம், சுவாதி, ரோகிணி, திருவோணம், திருவாதிரை, இந்த 6ம் கழுத்து ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த 3ம் சிரசு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.
சிரசு ரஜ்ஜீவில் கூடினால் கணவன் மரணம்.

கழுத்தில் கூடினால் பெண் மரணம், வயிறு கூடினால் சந்ததியில்லை. தொடை ரஜ்ஜீவானால் தன விரயம். பாத ரஜ்ஜீ என்றால் பல இடங்களில் சுற்றி திரியக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் ஒரே ரஜ்ஜீவானால் ஆகாது.


-பொருத்தங்கள் தொடரும் 
முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Friday, August 12, 2011

திருமண பொருத்தம் பாகம் -4

இராசி பொருத்தம்

தம்பதிகளுக்குள் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அறிய உதவும் விதிகள்
ஆண் பெண் இருவரும் ஒரே ராசியாக இருத்தல் நலம்.

இருவர் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7ம் இராசியாக இருக்கலாம். ஆனால், இருவர் ராசிகளும், கடகம் மகரமாகவோ, அல்லது சிம்மம் கும்பமாகவோ இருக்கக் கூடாது.

பெண் ராசிக்கு 2ம் ராசியாக ஆண் ராசி வரக்கூடாது. வாழ்க்கை பாதிக்கும். பெண் ஒற்றை ராசிகளில் பிறந்திருந்தால் நல்லது.

3ம் இராசியில் ஆண் அமைந்தால் மகிழ்ச்சி இருக்காது. 4ல் இருந்தால் சோகமான வாழ்க்கை அமையும்.

5ம் இராசியில் ஆண் அமைந்தால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நிகழும். ஆனால், பெண் மேஷம் அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

6ம் இராசியில் ஆண் அமைந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை தரும். பெண் ஒற்றை ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைதல் சிறப்பு.

மேஷத்துடன் கன்னிக்கும், தனுசுடன் ரிஷபத்திற்கும் துலாத்துடன் மீனத்திற்கும், கும்பத்துடன் கடகத்திற்கும் மிதுனத்துடன் விருச்சிகத்திற்கும் சஷ்டாஷ்டம் (6, 8) தோஷம இல்லை.

இராசி அதிபதி பொருத்தம்

ஆண், பெண் இருவரின் ராசியாதிபதிகள் நட்பாக வந்தால் உத்தமம். சமமாக வந்தால் மத்திமம். பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி பகையாக வந்தால் பொருந்தாது.
 
-பொருத்தங்கள் தொடரும் 
முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

திருமண பொருத்தம் - பாகம் 3

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது

குதிரை  - அசுவனி, சதயம்

யானை  - பரணி, ரேவதி

ஆடு  - கார்த்திகை, பூசம்

நாகம்  - ரோகினி, மிருக சீரிஷம்

நாய்  - திருவாதிரை, மூலம்

பூனை - புனர்பூசம் ஆயில்யம்

எலி  - மகம், பூரம்

பசு - உத்திரம், உத்திரட்டாதி

எருமை-  அஸ்தம், சுவாதி

புலி - சித்திரை, விசாகம்

மான் - அனுஷம், கேட்டை

குரங்கு - பூராடம், திருவோணம்

கீரி-  உத்திராடம்

சிங்கம் - அவிட்டம், பூரட்டாதி

பலனறிதல்

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதேபோல் யானை சிங்கம் ஆடு குரங்கும், நாகமும் கீரியும், நாயும் மானும், பூனை எலியும், புலி பசுவும், ஒன்றுக்கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக் கூடாது.

இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கும் அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

(குதிரை) அசுவினி, சதயம் - அஸ்தம், சுவாதி (எருமை)

(யானை) பரணி, ரேவதி - அவிட்டம் பூரட்டாதி (சிங்கம்)

(ஆடு) கார்த்திகை பூசம் - பூராடம், திருவோணம் (குதிரை)

(நாகம்) ரோகிணி, மிருக சீரிஷம் - உத்திராடம் (கீரி)

(நாய்) திருவாதிரை, மூலம் - அனுஷம் கேட்டை (மான்)

(பூனை) புனர்பூசம், ஆயில்யம் - மகம், பூரம் (எலி)

(பசு) உத்திரம், உத்திரட்டாதி - சித்திரை, விசாகம் (புலி)

-பொருத்தங்கள் தொடரும் 
முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001



Tuesday, August 9, 2011

திருமண பொருத்தம் பாகம் -2

கணப்பொருத்தம்

கணம் குணமென பொருள்படும். கணப்பொருத்தம், தம்பதிகளுக்குள் தாம்பத்ய திருப்தியையும், மனம் மற்றும் குண ஒற்றுமையையும் வழங்கும்.

தேவகணம் : அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

இராட்சஷ கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே கணத்தில்அமைவது உத்தமம்.

பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவகணத்திலும் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருப்பது தவறு.

பெண் ராட்சஷ கணத்திலும் ஆண் தேவ அல்லது மனுஷ கணத்திலும் இருப்பது தவறு.

விதி விலக்குகள் :

பெண் இராட்சஷ கணத்தில் இருந்தாலும் ஆண் நட்சத்திரத்திற்கு 14ம் நட்சத்திரத்திற்கு மேல் பெண் நட்சத்திரம் இருப்பதும் நல்லது.

கணப் பொருத்தம் இல்லாத நிலையிலும் ஆண், பெண் இருவரும் ஒரே இராசியில் பிறந்திருத்தல் இராசி அதிபதிகள் நட்பாக இருத்தல் அல்லது 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற அமைப்புகள் பரிகாரமாகும்.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும் குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 19, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக பெண் நட்சத்திரம் வரவேண்டும். 4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது. 1, 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திரம் இல்லை.

ஸ்திரி தீர்கம் :

ஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும் செல்வம் செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். பெண் ந ட்சத்திரத்திற்கு 13ம் நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைவது உத்தமமாகும். 7க்கு மேல் மத்திமானது.

-முருகு பாலமுருகன்
Mobile:0091-7200163001

Monday, August 8, 2011

திருமண பொருத்தம் - பாகம் -1


திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கேற்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி பல நூல்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போல பத்து பொருத்தங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாய் தந்தையரையோ, உற்றார் உறவினர்களையோ தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை நமக்கில்லை. ஆனால், நமக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்டு. தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய காதல் திருமணங்கள் நடைபெறுகிறது. என்றாலும் அதற்கு கூட இப்பொழுதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறர்கள். மன ஒற்றுமை எப்படியிருக்கும். சண்டை சச்சரவில்லாத வாழ்க்கை அமையுமா? உடலுறவில் இன்பம் நீடிக்குமா? வம்ச விருத்தி எப்படியிருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் உண்டா, மாங்கல்ய பலம் எப்படி என்பதையெல்லாம் பறறி தெரிந்து கொள்ள பலவித பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. 

 மண வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷமாகவும் மாங்கல்ய பலத்துடனும் செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உண்டா, ராகு கேது தோஷம் உண்டா என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தான் செய்கின்றனர். இதற்கு பரிகரங்களும் செய்ய முடியுமா, எந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதற்கான அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிட ரீதியாக அறியலாம். குறிப்பாக இருவருக்கும் நடைபெறக் கூடிய திசா புக்திகள் என்னென்ன? தசா சாந்தி உள்ளதா என்பதைப் பற்றியும் அறியலாம்.

திருமண ஜோடிகளுக்கு ஒரே திசையோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திருமண பொருத்தங்கள் பற்றி பல பழங்கால ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் புகழ் பெற்ற புத்தகமான காலவிதானத்தில் திருமண பொருத்தங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இனி தெளிவாகப் பார்ப்போம்.


காலவிதானம் என்ற புத்தகத்தில் 10 திருமணப் பொருத்தங்கள் பற்றி கூறியிருப்பதாவது :

பத்து பொருத்தங்கள் இருவரின் நட்சத்திரத்தை கெண்டு தசா பொருத்தத்தை தீர்மானிககிறோம். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜீ, வேதை என்பனவாகும்.

தினப்பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 வரை வருவது 1வது பரியாயம் 10 முதல் 18 வரை வருவது 2 வது பரியாயம் 19 முதல் 27 வரை வருவது 3வது பரியாயம் 1, 2வது பரியாயத்தில் 3, 5, 7 யும் 3வது பரியாயத்தில் 7 மட்டும் அதாவது 25வது நட்சத்திரத்தை மட்டும் தவிர்ப்பது உத்தமம். 3வது பரியாயத்தில் 3, 5 அதாவது 21, 23 வது நட்சத்திரம் தோஷமில்லை. 27வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் நல்லதல்ல. ஒரே ராசியானால் உத்தமம்.

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 1வது என்றால் ஜென்மம். கலகம், 2வது சம்பத்தை உண்டாக்கும். 3வது விபத்து, 4 ஷேமம், 5. காரியத்தடை, 6. அனுகூலம், 7 வதை வேதனை, 8 சுபம், 9. மிகவும் சுபம். இவைதான் தினப் பொருத்தத்தின் பலன்கள். தினப் பொருத்த ரீதியாக பார்க்கும்போது சில பெண் ந ட்சத்திரத்திற்கும் சில ஆண் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் சரிவர வருவதில்லை.

கிருத்திகைக்கு ஆயில்யமும், சுவாதிக்கு சித்திரையும், பூராடத்திற்கு அனுஷமும், அவிட்டத்திற்கு பரணியும், சதயத்திற்கு கிருத்திகையும் வந்தால் தவிர்ப்பது உத்தமம். அப்படி வரும் பட்சத்தில் தம்பதிகளுக்கு கண்டம் உண்டாகும். மிருக சீரிஷத்திற்கு பூசமும், அஸ்தத்திற்கு மூலமும் தரித்திரமாகும்.

அஸ்வினிக்கு புனர்பூசம், சுவாதிக்கு உத்திராடமும் வந்தால் பெண் குழந்தை உண்டாகும். வதை தோஷம் குறைவு. உத்திராடத்திற்கு ரேவதியும் மூலத்திற்கு பூரட்டாதியும், பூராடத்திற்கு உத்திரட்டாதியும் பரணிக்கு பூசமும் ஆக வந்தால் தோஷம் இல்லை. 7வது நட்சத்திரம் எனறால் திருமணம் செய்யலாம்.

மகத்திற்கு விசாகம் என்றால் புத்திர பாக்கியம் இல்லை. விசாகத்திற்கு திருவோணம் என்றால் சக்களத்தி வருவாள். திருவோணத்திற்கு அஸ்வினி என்றால் பிரிவு. உத்திரத்திற்கு மிருக சீரிஷம் என்றால் பிரச்சனை ஏற்படும்.

ஏக நட்சத்திரம்

தினப்பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாகி, ரோகிணி, மகம், திருவாதிரை, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி என்றால் ஏக நட்சத்திர ரீதியாக பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், புனர்பூசம், பூசம், சித்திரை அஸ்வினி, கிருத்திகை, உத்திராடம், அனுஷமாக இருந்தால் மத்திமம். மன பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஆண்,பெண் இருவரும் பரணி, சுவாதி கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம் பூரட்டாதியாக வந்தால் திருமணம் செய்வது நல்லதல்ல.

ஏக நட்சத்திரமாக வரும் பட்சத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரண்டு ராசியில் வரும்போது ஆண் நட்சத்திரம் பாதம் முன்னும், பெண் நட்சத்திர பாதம் பின்பும் சுபம். பெண் நட்சத்திரப் பாதம் முன்னும் ஆண் நட்சத்திர பாதம் பின்னும் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கும்போது ஒரே ராசியில் பரணியும் கிருத்திகையும், பூசமும் ஆயில்யமும் அவிட்டமும் சதயமுமாக வந்து ஆண் நட்சத்திரம் முன் நட்சத்திரமாக வந்தாலும் தவிர்ப்பது நல்லது.

பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரில் ஒருவரின் நட்சத்திரம் மகம், மிருக சீரிஷம், சுவாதி மற்றும் அனுஷமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என ஒரு விதி உண்டு.

அஸ்வினி, கிருத்திகை, மகம், ரோகிணி, அஸ்தம் சுவாதி, பூராடம், சதயம் ஆகிய 8 நட்சத்திரமும் ஏக நட்சத்திரமாக வந்து பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

தின பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வளமான வாழ்க்கை பற்றி அறியலாம்.

-பொருத்தங்கள் தொடரும்
-முருகு பாலமுருகன்
Mobile:0091-7200163001

Sunday, August 7, 2011

நீங்களும் அம்பானி ஆகலாம்

உழைத்தால் மட்டும் போதாது. அதற்கான அதிர்ஷ்டமும் வேண்டும். குறிப்பாக ஒருவர் தொழில் வியாபாரம் செய்து முன்னேற வேண்டும் என்றால் ஜாதகரின் தன ஸ்தானமான 2மிடம், கூட்டு தொழில்  ஸ்தானமான 7ம் இடம், தொழில் ஸ்தானமான 10ம் இடம் ஆகிய ஸ்தானாதிபதிகளும் வியாபாரம் ஆரம்பிக்கின்ற நேரம் ஜாதகருக்கு யோகம் தரக்கூடிய காலமாக இருக்க வேண்டும்.


குறிப்பாக ஜாதகர் தொழில் தொடங்குகின்ற நேரத்தில் ஏழரை சனியோ பாதகம் தரக்கூடிய கிரகங்களின் திசா புக்தியோ, நடைபெறக் கூடாது. குறிப்பாக சுக்கிரனும், சனி பகவானும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வண்டும். சாதகமற்ற காலத்தில் தொழில் தொடங்கினால் கடன், வழக்கு, எதிரிகளின் தொல்லையால் கூட ஜாதகருக்கு வியாபாரம் நஷ்டத்தில் இயங்கும் அவல நிலை உண்டாகும்.

சிலருக்கு வேலையாட்களே துரோகம் செய்யும் நிலை உண்டாகலாம். குறிப்பாக ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணினால் அவரின் ஜாதகத்தை நன்கு ஆராய வேண்டும். சாதகமான நேரத்தில் சுப முகூர்த்தத்தில் தொழில் தொடங்கினால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடைய நேரிடும். வியாபாரம் செய்வோர் நல்ல நேரம் பார்ப்பது மட்டுமின்றி சில கிரகம் சார்ந்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களது வாழ்க்கையானது தொழிலில் வெற்றியினை அடைய வைக்கும்.



குறிப்பாக வார நாட்களில் வெள்ளிக் கிழமை போன்ற நாளில் சாம்பிராணி போடுவது மங்கள பூஜைகளை மேற்கொள்வது வாய்ப்புக் கிடைத்தால் கோமயம் வியாபார ஸ்தலத்தில் தெளித்து பூஜிப்பதன் மூலம் வியாபார ஸ்தலத்தில் துர்தேவதைகள் விலகி மகாலக்ஷ்மி கடாட்சமும் உண்டாகி ஏற்றங்கள் ஏற்படும்.

சனி, சுக்கிரன் வலிமை ஒருவருக்கு இருந்தால் வியாபாரத்தில் பல்வேறு ஏற்றங்களை எளிதில் அடையலாம். குறிப்பாக சனீஸ்வர பகவானை மாதம் ஒரு சனிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து மாதம் ஒரு வெள்ளியன்று வெள்ளை நிற புஷ்பத்தால் சுக்கிர பகவானை பூஜிப்பது மூலம் நவ கிரக அருள் பெற்று வியாபாரத்தில் ஏற்றங்களை அடையலாம். குறிப்பாக சிலர் எதிர்பாராத நஷ்டங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் வியாபார ஸ்தலத்தில் சுதர்சன ஹோமம் மேற்கொண்டால் கஷ்டங்கள் விலகி உயர்வு உண்டாகும்.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

திடீர் பணக்கார யோகம்

இன்றைய உலகில் பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இன்றைய சூழ்நிலையாகும். பணம் என்பது குறிப்பிட்ட சிலருக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. குறிப்பிட்டு பார்த்தால் பலருக்கு அவ்வளவு எளிதில் பண வரவு ஏற்படுவதில்லை. ஜோதிட ரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கிறது? திடீர் பணக்காரனாகும் யோகம் யாருக்கு உண்டாகும் என்பதனை பற்றி இங்கு தெள்ளத் தெளிவாக பார்ப்போம்.

பொதுவாக பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். ஜெனன ஜாதகம் சாதகமாக இருபபது மட்டுமின்றி கோட்சார கிரக சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும். அதைவிட மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒரு ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமில்லை யோகத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் தசா புக்தி நடக்க வேண்டும். தசா புக்தி நடப்பது கூட முக்கியமில்லை. அந்த தசா புக்தி பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கக் கூடிய தசா புக்தியாக இருக்க வேண்டும். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.


ஜனன ஜாதகமும் தன யோகமும்
ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தனஸ்தானமாகும். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11ம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு வாகன யோகத்தையும் அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழி வகுக்கக் கூடிய ஸ்தானமாக 4ம் வீடு அமைகிறது. அதுபோல 5ம் வீடு பலம் பெற்றிருந்தால் பூர்வ புண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடைய முடியும். நவகிரகங்களில் தன காரகன் என வர்ணிக்கப்படக் கூடியவர் குரு பகவானாவார். குரு ஒருவர் ஜாதகத்தில் பலமாக அமையப் பெற்றால் பொருளாதார மேன்மைகள் எளிதில் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் மேற்கூறியவாறு 2, 9, 10, 11 ஆகிய பாங்கள் பலம் பெறுவது முக்கியம். அதுமட்டுமின்றி இவர்கள் 6, 8, 12ல் மறையாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

2, 9, 10, 11க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவதும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும். குறிப்பாக 4, 7, 10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 1, 5, 9 ஆகிய ஸ்தானங்கள் திரிகோண ஸ்தானங்களாகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை அடைய முடியும்.


பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக் கூடிய அளவிற்கு ஏற்றம் உயர்வினை என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அடைவார்கள். 4ம் அதிபதி பலமாக அமையப் பெற்றால் கிடைத்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும்.

அதுபோல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடைய நேரிடும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 9ம் பாவம் பலம் பெற்றிருந்தால் தந்தை மூலமாகவும் 7ம் பாவம் பலம் பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத் தொழில் மூலமாகவும், 4ம் பாவம் பலம் பெற்றால் தாய் வழியிலும் 3, 11ம் பாவங்களும் செவ்வாயும் பலம் பெற்றால் உடன்பிறந்தவர்கள் மூலமும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருளாதார மேன்மைகளையும் அடைய முடியும்.

கோட்சாரமும் தன யோகம்
கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு பகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் போது பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதுபோல ஒரு ராசியில் அதிககாலம் தங்கும் சனி பகவான் 3, 6, 11, ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்ற போது பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகிறது.

தசா புக்தியும் தன யோகமும்
ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தனயோகமாக கருத முடியாது. சம்பாதிப்பென்பது அவர்களது அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற்பட்டு அபரிமிதமாக அதிகப்படியாக சேரும் பணமே தன யோகமாகும். அப்படிப்பட்ட சேர்க்கையானது தசா புக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில் தான் ஏற்படுகிறது.

குறிப்பாக எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடைய வைக்க தசா புக்தி ரீதியாக சில கிரகங்கள் தான் மிகவும் உதவியாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய திசைகள் தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்குகிறார்கள். குறிப்பாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய திசைகள் நடக்கின்ற போது தன வருவாய் ஆனது ஒரு சீரான தாக இருக்கின்றது அதுமட்டுமின்றி நேர்மையான வழியிலும் நல்வழியிலும் பல பொது காரியங்கள் செய்வதற்கும் வழி வகுக்கும், திசையாகவே விளங்குகிறது. ஆனால், ஒருவருக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், சனி ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப் பெற்று அந்த திசையானது நடைமுறையில் நடைபெற்றால் திடீர் செல்வந்தராகக் கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொதுவாக 3வது திசை பெரிய யோகத்தினை ஏற்படுத்துவதில்லை.


உதாரணமாக சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக சுக்கிர திசையாக வருவதால் சுக்கிரன் பலம் பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர திசையில் அடைய முடியும்.

அதுபோல புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை 3வது திசை என்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.
சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை 3வது திசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம்பெற்றிருந்தால் காலம் கடந்து வர கூடிய சனி திசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001


Friday, August 5, 2011

ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சம்

ஜோதிடம் என்பது மிகச் சிறந்த காலக் கண்ணாடி ஆகும். ஜனன ஜாதகத்தைக் கொண்டு ஒருவரது வாழ்க்கையைப் பற்றி தெளிவாக அறியலாம்.

ஜனன ஜாதகத்தில் 1ம் வீடு என வர்ணிக்கப்படும் ஜென்ம லக்னத்தின் சிறப்பம்சத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பொதுவாக ஒரு பாவத்தைப் பற்றி ஆராய்கின்ற போது அதன் அதிபதியும் அதிலுள்ள கிரகமும் அதனை பார்வை செய்யும் கிரகமும் அதன் காரகனும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பொதுவாக ஒரு பாவத்தை அதன் அதிபதி பார்வை செய்வது மூலம் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலன் தரும்? பொதுவாக ஜென்ம லக்னத்தை எவ்வளவு கிரகங்கள் பார்வை செய்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு யோகம் ஆகும். சுப கிரகங்கள் லக்னத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். பாவ கிரகங்கள் லக்னத்தில் இருப்து கிரகங்களின் இயல்பிற்கேற்ப சோதனையைத் தரும்.

எப்பொழுதுமே லக்னாதிபதி ஜாதகருக்கு அனுகூலத்தை தருவார். லக்னாதிபதி பாவியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு முழு ஆபராகத் தான் விளங்குவார். ஜென்ம லக்னத்தைக் கொண்டு ஒருவரது தோற்றம், உடலமைப்பு, இயல்பு, சந்தோஷம், பழக்க வழக்கங்கள், தலை, தலை சார்ந்த பகுதி, உடம்பு, தாயின் தந்தை தந்தையின் தாய் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.


ஜென்ம லக்னத்திற்கு 6, 7, 8ல் தொடர்ந்து சுப கிரகங்கள் அமைவதும், அற்புதமான அமைப்பாகும். இதன் மூலம் பலமான லக்னாதிபதி யோகம் உண்டாகும்.  குறிப்பாக, 6, 7, 8ல் குரு, புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

குறிப்பாக , 6, 7, 8ல் தொடர்ந்து சுபகிரகங்கள் அமைந்தாலும், 7, 8, 6, 8ல்  அமைந்தாலும் அனுகூல பலனை உண்டாக்கும். ஜென்ம லகக்னத்தில் ஒரு சுப கிரகம் பலமாக அமையப் பெற்றால் நல்ல உடலமைப்பு உண்டாகும்.


பாவ கிரகம் பலமாக அமையப் பெற்றால் கெடுதிகள் ஏற்படும். குறிப்பாக லக்னத்தின் முற்பாதியில் அமைந்தால் தலையில்இடது பாகத்தில் பாதிப்பும் பிற்பாதியில் பாவ கிரகம் பலமாக அமைந்தால் தலையின் வலது பாகத்தில் பாதிப்பும் உண்டாகும். லக்னத்தில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் தலையில் ஒரு தழும்பு உண்டாகும்.

 ஜென்ம லக்னத்தில் சந்திரன் அமையப் பெற்றால் ஜலத்தால் கண்டம் உண்டாகும். லக்னாதிபதி செவ்வாயாக இருந்தால் என்றும் இளைஞராக அதாவது முதுமையிலும் இளமை தோற்றம் உண்டாகும். புதன் லக்னத்தில் அமையப் பெற்றால் குழந்தை தனம் அதிகம் இருக்கும். நல்ல அறிவாளியாக இருப்பார். குரு லக்னத்தில் அமையப் பெற்றால் நல்ல உடல் அமைபபும், மற்றவர்களிடம் பழகும்போது இனிமையாக பேசும் சுபாவமும் இருக்கும். இனிமையாகப் பேசும் சுபாவமும் இருக்கும். சுக்கிரன் லக்னத்தில் அமையப் பெற்றால் ஆடம்பரப் பிரியராகவும் கவர்ச்சியான உடல் அமைப்பும் இருக்கும்.

ஜென்ம லக்னத்தில் சூரியன் செவ்வாய் அமையப் பெற்றாலம் செவ்வாய் சனி அமையப் பெற்றாலும் முரட்டு தனம், பிடிவாத குணம் இருக்கும் போது மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்பும் உடம்பில் ஏதாவது ஒரு இடுத்தில் சிகப்பு நிற தழும்பு உண்டாகும்.

சனி ராகு லக்னத்தில் அமையப் பெற்றால் கருப்பு நிற தழும்பு உண்டாகும். ஜென்ம லக்னத்தில் சுபர் பலம் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். அதுவே பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் சுபர் பார்வை செய்தால் கெடுதி இல்லை.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Thursday, August 4, 2011

பொறியியல் நிபுணராக ஜோதிட நெறிகள்

இன்றைய சமுதாயத்தில் பரபரப்பாக பேசக் கூடிய கல்வியாக பொறியியல் கல்வி விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொறியியல் கல்வியில் சேர்வதென்பது எட்டாக் கனியாக இருந்தது. ஆனால், தற்போது பொறியியல் கல்வி என்பது சாதாரண மக்கள் கூட சேர்ந்து படிக்கக் கூடிய கல்வியாக மாறி விட்டது. பொதுவாக பட்ட கல்வி, உயர் கல்வி படிப்பதெற்கெல்லாம், ஜாதக அமைப்பு பலமாக இருந்தால் கல்வியில் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகிறது. எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் பொறியியல் கல்வி கற்கக் கூடிய அமைப்பு உண்டாகும் என்பதனை இங்கு தெளிவாக பார்ப்போம்.

கல்வி காரகன் புதன் பகவான் பலமாக இருப்பதும், ஜென்ம லக்னத்திற்கு நட்பு வீட்டிற்கு அதிபதியாக இருப்பதும் மிகவுமு நல்லது. சூரியன் புதன் சேர்க்கை ஏற்பட்டு கேந்திர திரிகோணங்களில் அமைவதும், 3, 11 ஆகிய பாவங்களில் அமைவதுமு சிறப்பான அமைப்பாகும். கேந்திர ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகம் அமைவதும் சிறப்பான யோகமாகும். அது போல சனி செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், இணைந்திருப்பதுமு சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன் சனி சேர்க்கை ஏற்படுவதும், இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும், சிறப்பான அமைப்பாகும். அதுபோல ராகு பகவான் பலமாக இருப்பது நவீனகரமான கல்வியில் ஈடுபாடு கொடுக்கும்.செவ்வாய் பலமாக அமையப் பெற்றால் சிறப்பான நிர்வாகத் திறமையை உண்டாக்கும். சிலகிரக அ மைப்புகள் வாழ்வில் சாதனை செய்யும் அமைப்புகளை உண்டாக்குகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவம் கல்வி ஸ்தானம் என்பது போல ஜீவன பாவமான 10ம் பாவம் தொழில் ஸ்தானமாகும்.

சூரியன் புதன்பலமாக சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்திரன் குரு புதன்பலமாக சேர்க்கை பெற்றிருந்தாலும் மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.

சூரியன் புதன் பலமாக சேர்க்கைப் பெற்று சனி பார்வை பெற்றால் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும். சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றாலும் ராகு பலமாக அமையப் பெற்றாலும் எலக்ட்ரானிக் எஞ்னியர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.

புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கெமிக்கல், எலக்ட்ரிக்கல் தொடர்புடைய துறையும், செவ்வாய் புதன் சனி சேர்க்கை பெற்றால் தொழில் நுட்ப கல்வியிலும், சந்திரன் புதன் சேர்க்கை பெற்றால் டெக்ஸ்டைல் துறையிலும் சந்திரன் செவ்வாய் புதன் சேர்க்கை பெற்றால் கப்பல் துறையிலும், சந்திரன், சனி, புதன் அல்லது செவ்வாய் சேர்க்கை பெற்றால நிலக்கரி துறையிலும் செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை கட்டிடத் துறை, சுக்கிரன் பலமாக இருந்தால் கட்டிட வரைபட நிபுணர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.

அதுபோல சூரியன் செவ்வாய் சனி அல்லது சுக்கிரன் சேர்க்கை பெற்றாலோ, செவ்வாய் புதன் சேர்க்கை, புதன் சனி சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை உண்டானால், வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தொடர்புத் துறை போன்றவற்றில் பொறியாளர் ஆகக் கூடிய அமைப்பு உண்டாகும்.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001