Friday, September 16, 2011

சந்திர திசை 12 பாவங்களின் பலன்கள்

வளர்பிறை சந்திரனாகி சந்திர பகவான் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று சுபகிரக சேர்க்கையாகி, ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று சுபகிரக சேர்க்கை பெற்று திசை நடைபெற்றால் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் அமைப்பு, புதிய ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் சேரும் அமைப்பு உண்டாகும். 

தாய் வழியில் மேன்மை வாழ்க்கைத் துணை புத்திரர்களால் சிறப்பான அனுகூலம் தன சேர்க்கை, அரசாங்கம் மூலம் அனுகூலம் உண்டாகும். விரும்பிய உணவு வகைகளை உண்பது ஜல தொடர்பானவை, மற்றும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அற்புதமான உயர்வு லாபம் உண்டாகும். கடல் கடந்து செல்லும் அமைப்பு கல்வியிலும் மேன்மை அமையும். பெண்களால் அதிக யோகம் உண்டாகும். திருமணம் பெண் குழந்தை, யோகம் போன்ற அமைப்புகளும் ஏற்படும்.

ஜெனன காலத்தில் சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக அமையப் பெற்று நீசம் பகையாகி பாவிகள் சேர்க்கை பார்வை பெற்று 6, 8, 12ல் மறைந்து காணப்பட்டாலும் திசா நாதனுக்கு 6, 8, 12ல் காணப்பட்டாலும், சந்திரன் தாய் ஸ்தானமான 4ல் இருந்து திசை நடைபெற்றாலும் தாய்க்கு தோஷமும் மரணத்திற்கு ஒப்பான கண்டமும் உண்டாகும். கலகம், பண விரயம், ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படத் தடை மனக்குழப்பம் சித்த பிரம்மை உண்டாகும். உணவு சரியாக சாப்பிட முடியாத நிலை வாந்தி பேதி, வயிறு வலி, கர்ப்ப கோளாறுகள், மனம் ஒரு நிலையில் இல்லாத நிலை யாவும் உண்டாகும். நீரினால் கண்டம் தரித்திரம் போன்றவை ஏற்படும்.

சந்திரன் லக்னத்தில் அமையப் பெற்று திசை நடைபெற்றால் சிறப்பான ஆரோக்கியம் உண்டாகும் நல்ல சுவையான உணவு வகைகளை சாப்பிடுவார்கள். நல்ல தூக்கம் அமையப் பெறும். நவீன ஆடை, ஆபரணம் சேரும். புகழ் பெருமை, செல்வம், செல்வாக்கு மேலோங்கும்.

சந்திரன் லக்னத்திற்கு 2ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் அதிகமான பண வரவுகள், சுகமான குடும்ப வாழ்வு, சொன்ன சொல்லை காப்பாற்றும் அமைப்பு உண்டாகும் நல்ல வார்த்தைகளை பேசுவதால் அனுகூலமும் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.

சந்திரன் லக்னத்திற்கு 3ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் நல்ல சுகம், தைரியம் உண்டாகும். சகோதர, சகோதரி யோகம், காதுக்கு நகை போட்டுக் கொள்ளும் அமைப்பு உண்டாகும்.

சந்திரன் லக்னத்திற்கு 4ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் வீடு, பூமி, மனை வண்டி வாகனம் அதிகமாகும். தன லாபமும் கிட்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வது உற்றார் உறவினர்களால் உதவி பெறுவது கல்வியில் மேன்மைகள் கிட்டும் என்றாலும் சந்திரன் பலமிழந்து திசை நடைபெற்றால் தாய்க்கு கண்டம் உடல்நிலை பாதிப் உண்டாகும்.

சந்திரன் 5ல் இருந்து திசை நடைபெற்றால் சுபகாரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் குழந்தைகளால் மேன்மைகளும், அனுகூலங்களும் உண்டாகும். ஆண் குழந்தை யோகம் தடைபடும். கைத்தொழில் மேற்கல்வியில் மேன்மை உண்டாகும். மனைவி வழியில் சிறப்பான அனுகூலம் தெய்வ பக்தி யாவும் உண்டாகும்.

சந்திரன் 6ல் இருந்து திசை நடைபெற்றால் ஜலத் தொடர்பான உடல் உபாதைகள் வாத நோய், தாயுடன் கோபப்படும் நிலை, புத்தியில் தடுமாற்றம், தாய்க்கு கண்டம் போன்றவைகள் உண்டாகும்.

சந்திரன் 7ல் இருந்து திசை நடைபெற்றால் மனைவி குழந்தைகள், நண்பர்கள் உற்றார் உறவினர்களுடன் சந்தோஷமாக அமையும் நிலைகள் உண்டாகும். ஆலயங்களுக்கு சென்று தெய்வ தரிசனம் செய்யும் அமைப்பு திருமண யோகம் யாவும் அமையப் பெறும்.

சந்திரன் 8ல் இருந்து திசை நடைபெற்றால் உடல்நலம் பாதிப்படையும் மனதிலும் குழப்பமான நிலை, எடுத்த காரியம் தடைபடும் அமைப்பு உண்டாகும். மனைவி, புத்திரர்களுடன் வீண் பிரச்சனைகள், ஜலத்தால் கண்டம், வயிற்று உபாதைகள், மருத்துவ செலவுகள் பண வரவுகளில் தடைகளும் உண்டாகும்.

சந்திரன் 9ல் இருந்து திசை நடைபெற்றால் அதிகமான தர்ம காரியங்களை செய்வார்கள் தோட்டம், நிலம் வாங்கும் அமைப்பு தெய்வங்களை தரிசிக்கும் யோகம் விவசாயத்தில் மேன்மை, ஜல தொடர்புள்ள தொழில்களில் அபிவிருத்தி போன்றவை உண்டாகும்.

சந்திரன் 10ல் இருந்து திசை நடைபெற்றால் அதிகமான பலவித வேலைகளை செய்வார்கள். உடல் நலமும் மிக சிறப்புடன் அமையும். யாகம் ஹோமம், போன்ற தெய்வ காரியத்தை மேற்கொள்வார்கள். எந்த ஒரு தொழிலிலும் மேன்மைகளும் லாபமும் அதிகரிக்கும்.

சந்திரன் 11ல் இருந்து திசை நடைபெற்றால் அதிகமான தன லாபம், புத்திரவிருத்தி உற்றார் உறவினர்களுடன் சிறப்பான உறவு அமையும், கௌரவம் கூடும். புதுமையான ஆடை, ஆபரணம் போன்றவை கிட்டும்.

சந்திரன் 12ல் இருந்து திசை நடைபெற்றால் உடலில் ஜலத் தொடர்பான உபாதை செய்யும் தொழிலில் காரியங்களில் தடை, பெண்களுக்கு உடல் உபாதைகள், வண்டி வாகனம் பழுது படும் சூழ்நிலை, வீடு பூமி மனை வழியில் சாதகமற்ற பலனும் உண்டாகும்.

சந்திர திசா நடைபெறும் காலங்களில் சந்திரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்று திசை நடைபெற்றால் அக்காலத்தில் ஸ்ரீவெங்கடாசலபதியை வழிபாடு செய்வதும், திருப்பதி சென்று வருவதும், பச்சரிசியை தானமாக வழங்குவதும் திங்கட்கிழமை விரதம் மேற்கொள்வதாலும் தீமைகள் நீங்கி நற்பலன்களை ஏற்படுத்தும்.
சந்திரதசா சந்திர புக்தி 10 மாதம்
சந்திர பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களிலும் வளர்பிறை சந்திரனாக இருந்து அவர் லாபஸ்தானத்தில் அமைந்திருந்தாலும் ஜென்ம லக்னத்திற்கு தன ஸ்தானத்தில் இருந்தாலும் நட்பு கிரக வீட்டில் அமையப் பெற்றாலும் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.அரசாங்கம் மூலம் அனுகூலம் அதிக புகழ், திருமணம் நடைபெறும் அமைப்பு குழந்தை பாக்கியம் உண்டாகும். சிறப்பானபூமி மனை, வண்டி, வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை போன்ற சிறப்பான பலன்களையும் ஏற்படுத்தும். குரு பார்வை பெற்ற சந்திரனாக இருந்தால் எதிலும் உயர்வும், லாபமும் உண்டாகும்.

சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து பகை நீசமாகி பாவிகளின் சேர்க்கை பெற்றோ, பாவிகளின் பார்வை பெற்றோ 6, 8, 12ல் மறைந்தோ, பாதக ஸ்தானத்தில் அமைந்து காணப்பட்டால் பண விரயம் ஏற்படும். இடம் விட்டு இடம் போகவும் நேரிடும். மனக்குழப்பம், தெளிவற்ற முடிவினால் தொல்லைகள் உண்டாகும். மனதிற்கு துக்கம் கவலை உடல்நலம் பாதிக்கும் அமைப்பு, நெருங்கியவர்களிடம் விரோதம், அரசாங்கம் மூலம் தொல்லைகளும் உண்டாகும்.

சந்திரனுக்கு பரிகாரம் செய்வது மூலம் நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசையில் செவ்வாய் புக்தி 7 மாதம்
செவ்வாய் பகவான் லக்னத்திற்கும் திசா நாதனுக்கும் கேந்திர கோணங்களில் அமையப் பெற்று, செவ்வாய் ஆட்சி உச்சம் நட்பு பெற்று பலமுடன் அமையப் பெற்றாலும் செயற்கரிய செயல்களை வீரமும், விவேகமும் கொண்டு செய்வதால் புகழ் உண்டாகும். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ள முடியும் பண வரவுகளால் குடும்பத்தில் வீடு மனை பூமி வண்டி வாகன அமைப்புகள் சேரும் சகோதர வகையில் ஒற்றுமையும் உதவியும் அனுகூலமும் உண்டாகும். நெருப்பு, மருந்து சம்பந்தமான தொழில்களில் உயர்வான வருமானமும் லாபமும் உண்டாகும். அரசாங்க வழியில் உயர் பதவிகள் அடைகின்ற யோகம் விருதுகள் பெறும் அமைப்பு உண்டாகும்.

செவ்வாய் பகை நீசமாகி, பாவிகள் சேர்க்கை பாவிகள் பெற்று 8, 12ல் மறைந்து அமையப் பெற்று திசை நடந்தாலும் திசா நாதனுக்கு 8, 12ல் அமையப் பெற்றாலும் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, உடலில் காயம் உண்டாகும் அமைப்பு, சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உண்டாகும். எதிரிகளால் தொல்லை மனதில் பயம், பண விரயம், வீடு மனை பூமி வழியில் வம்பு வழக்குகள் உண்டாகும். சகோதரர்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை பிரிவு, தீயால் சொத்துக்களுக்கு சேதம், தொழிலில் நலிவு அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை யாவும் உண்டாகும்.

கடுமையான வார்த்தைகளை பேசும் அமைப்பு, குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். இதற்கு பரிகாரமாக கந்தர் சஷ்டி கவசம் படிப்பதும் முருக வழிபாடு மேற்கொள்வதும், அன்னதானம் செய்வது போன்றவற்றை செய்வதால் கெடுதிகள் விலகும்.

சந்திர திசா ராகு புக்தி 1 வருடம் 6 மாதங்கள்
ராகுபகவான் லக்னத்திற்கு கேந்திர கோணங்களில் இருந்தாலும் சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றாலும் முற்பாதி காலம் சுகமான பலனும், பிற்பாதி காலம் உபாதைகளும் உண்டாகும். ராகு 3, 6, 11ம் இடங்களில் இருந்து சுப கிரக சம்பந்தம் பார்வை பெற்றால் வியாதி இல்லாத நிலை எதிர்ப்புகளை சமாளிக்கும் சூழ்நிலை எதிர்பாராத பெரிய பதவி கிடைத்து பெர் புகழ் பெறும் நிலை யாவும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் யாவும் ஜெயமாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம், வண்டி, வாகன யோகம், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும்.

ராகு பகவான் 2, 5, 8, போன்ற இடங்களிலும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றுக் காணப்பட்டாலும் 8 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் உடல்நிலையில் விஷத்தால் கண்டம் உண்கும். உணவே விஷமாகும் சூழ்நிலை, வயிறு கோளாறுகளும் உண்டாகும். ராகு சூரியன்சேர்க்கை ராகு சனி சேர்க்கை, ராகு செவ்வாய் சேர்க்கை ராகு சந்திரன் சேர்க்கை, பெற்று புக்தி நடைபெற்றால் மனதிற்கு துக்கம், தந்தை வழியில் பிரிவு, தாய்க்கு தோஷம் வியாதி, தவறான பழக்க வழக்கம். தோல் வியாதி, குடும்பம் வாழ்வில் பிரிவு, பிரச்சனை போன்ற சாதகமற்ற பலன்கள் நடைபெறும். வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்பு உண்டாகும்.

ராகு பகவான் சாதகமற்று புக்தி நடைபெறும் காலங்களில் செவ்வாய், வெள்ளி ஞாயிற்று கிழமைகளில் துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுவது செவ்வல்லி மலர்களால் துர்கைக்கும் அர்ச்சனை செய்வது, சர்பஸ்வரர், வழிபாடு, பாம்பு புற்றுக்கு பால் வைப்பது, திருகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் சென்று சர்ப சாந்தி செய்வதன் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசை, குரு பக்தி 1 வருடம் 6 மாதம்
குரு பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம் பலம் பெற்று இருந்தாலும் கேந்திர திரிகோணத்திலும் 2, 11லும் அமையப் பெற்றாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணங்களிலும் அமையப் பெற்று புக்தி நடைபெற்றால் பொன் பொருள் சேர்க்கை, அரசாங்கத்தில் உயர் பதவி, செல்வாக்கு உண்டாகும். புத்திர வகையில் அனுகூலம் புத்திரர் உண்டாகும். யோகம் உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகன அமைப்பு யாவும் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். மற்றவர்களுக்கு உபதேசிப்பார்கள்.

குரு பகவான் பலமிழந்து பகை நீசமாகி 6, 8, 12லும் திசா நாதனுக்கு 6, 8, 12ல் காணப்பட்டாலும் தன விரயம் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவு அவமானம் போன்றவை உண்டாகும். அரசாங்கம் மூலம் எதிர்ப்பு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி அமைய இடையூறுகள் தெய்வ காரியங்களில் ஈடுபாடு குறையும் நிலை யாவும் உண்டாகும். மனைவி உற்றார் உறவினர்களுடன் வீண் விவாதம், வீண் பழி, தீராத வியாதி, குடும்பத்தில் தரித்திரமும் உண்டாகும். 

புத்திர தோஷம் புத்திரர் உண்டாகத் தடை, இடையூறுகள் போன்ற சாதகமற்ற பலன்கள் நடைபெறும். இக்காலத்தில் குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் கொண்ட கடலை தானம், ஏழை பெரியவர்களுக்கு உதவி செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் அமையும். ஆலங்குடி சென்று வருவது உத்தமம். வியாழக் கிழமை விரதம் மேற்கொள்வதும் பிரதோஷ வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரங்களாகும்.
சந்திரதிசை சனி புக்தி 1 வருடம் 7 மாதங்கள்
சனி பகவான் லக்னத்திற்கு கேந்திர கோணங்களிலும் 3, 6, 11ம் இடங்களிலும் அமையப் பெற்று உச்சம், ஆட்சி, நட்பு போன்ற பலம் பெற்றுக் காணப்பட்டாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணம் 3, 6, 11ல் அமையப் பெற்றாலும் உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை உதவி உண்டாகும். தன சேர்க்கை வண்டி வாகனம் பெறும் அமைப்பு, சேமிப்புகள் பெருகும் நிலை யாவும் உண்டாகும். எடுக்கின்ற காரியங்களில் வெற்றிமேல் வெற்றி ஏற்படும். உடல்நிலை சிறப்பாக அமையும். கருமை நிறமான பொருட்களால் அதிக லாபம் உண்டாகும்.

சனி பகவான 8, 12,ம் இடங்களில், இருந்து புக்தி நடந்தாலும், திசா நாதனுக்கு 8, 12ல் இருந்து புக்தி நடைபெற்றாலும் சனி பகவான் நீசம் பகை பெற்று பாவ கிரக சேர்க்கை, பார்வை பெற்று திசா நடைபெற்றாலும் உடல்நிலை பாதிப்பு, உற்றார், உறவினர்களை எதிர்பாராமல் இழக்கும் நிலை, வண்டி, வாகனம் பழுதடையும் நிலை, உண்டாகும். குடும்பத்தில் கலகம் வேலையாட்களால் பிரச்சனை நெருக்கமானவர்களே துரோகம் செய்யும் நிலை இருக்கும். இடத்த மாற்ற வேண்டிய சூழ்நிலை உத்தியோக இழப்பு, கடின உழைப்பிற்கு ஆளாகும் நிலை, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை யாவும் உண்டாகும்.

சனி பகவான் சாதகமற்று அமையப் பெற்றால் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் சனி விரதம், சனீஸ்வரனுக்கு எள் முடிந்த திரியிட்ட விளக்கு ஏற்றுவதும் காக்கைக்கு அன்னம் வைப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது, சபரிமலை யாத்திரை சென்று வருவது, திருநள்ளாறு சென்று நளன் குளத்தில் நீராடி வருவது போன்ற பரிகாரங்களை செய்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசையில் புதன் புக்தி 1 வருடம் 7 மாதம்
புதன் பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, ஸ்தானத்தில் அமைந்து சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றும் கேந்திர கோணத்தில் 2, 11ம் இடங்களிலும் அமையப் பெற்றாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும் சிறப்பு மிக்க பலன்கள் உண்டாகும். சிறப்பான வாக்கு சாதுர்யத்தாலும், எழுத்து, பேச்சால் எவரையும் கவர்ந்து சம்பாதிக்கும் உயர்வான நிலை உண்டாகும். 

உற்றார் உறவினர்களுடன், தாய் வழி உறவினர்கள், நண்பர்கள், தாய் மாமன் வழியில் சிறப்பான அனுகூலம், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வியில் மேன்மை கற்ற கல்வியால் உயர்வான பதவிகளை வகிக்கும் அமைப்பு புக்தி கூர்மை, கலைத்துறை, கவிதையாற்றல், சிறந்த வித்தைகளை கற்கும் ஆற்றல் வளரும் வியாபாரத்தில் சிறப்பான லாபம், கணிதம், கம்ப்யூட்டரில் சாதனை செய்யும் அமைப்பு, அந்தஸ்து, பெருமைகளும் உண்டாகும். மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.

புதன் பகவான் நீசம், பகை, பாதக ஸ்தானம் பெற்று லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து திசா நாதனுக்கு 6, 8, 12ல் அமையப் பெற்று புக்தி நடந்தாலும் உற்றார், உறவினர்களிடமும் தாய் மாமன் வழியிலும் பகை விரோதம் உண்டாகும். 

கல்வியில் மந்தநிலை கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை வாய்ப்புகள் அமையும். வண்டி, வாகனம் பழுதாகும். வியாபாரம் தொழில் மந்தமான போக்கும், நரம்பு சம்பந்த வியாதி தலைவலி, ஞாபக சக்தி குறைவு புத்திர பாக்கியம் ஏற்பட தடை யாவும் உண்டாகும். இக்காலத்தில் விஷ்ணுவுக்கு வழிபாடு செய்வது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிப்பது பச்சைப்பயிறு தானம் செய்வது, சுதர்சன எந்திரம் வீட்டில் வைத்து பூனிப்பது, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் சென்று வருவது புதனுக்கு பச்சை துண்டு சாற்றுவது மூலம் கெடு பலன்கள் விலகி நற்பலனை ஏற்படுத்தும்.

சந்திரா திசா கேது புக்தி 7 மாதம்
கேது பகவான் சுபபலன் பெற்றிருந்தால் நல்ல தெய்வ பக்தி உண்டாகும். 11ம் வீட்டில் அமையப் பெற்று புக்தி நடைபெற்றாலும் விசேஷமான பலன்கள் உண்டாகும்.

பொருளாதார நிலையில் ஏற்றம் உயர்வு அசையா சொத்து சேர்க்கை விசேஷ தன லாபமும் கிட்டும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உயர்ந்த ஞானம் உண்டாகும். மருத்துவம் விஞ்ஞான துறையில் நாட்டம், சாதனை செய்யும் நிலை, மற்றவர்களால் மதிக்கப்படும் உயர்வான நிலை உண்டாகும்.

கேது பகவான் அசுப பலன் பெற்று புக்தி நடைபெற்றாலும் 7, 8ல் அமையப் பெற்று புக்தி நடைபெற்றாலும் விஷ பயம் அறியாமை, முட்டாள் தனத்தால் எதையும் இழக்கும் நிலை, வயிற்று வலி, தோல் நோய்கள், கணவன் மனைவி பிரிவு, இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை, புத்திர பாக்கியம் ஏற்பட தடை யாவும் உண்டாகும்.

உற்றார் உறவினர்களை வெறுக்கும் சுபாவம், சோம்பலாக செயல்படும் நிலை, சொத்து பணம், விரயமாகும் சூழ்நிலை, சரியான நேரத்தில் சாப்பிட முடியாத நிலை, எதிர்பாராத விபத்துக்கள் திருமணம் நடைபெறத் தடை, இடையூறுகள் அரசாங்க தண்டனை அடையும் நிலை வம்பு வழக்கு போன்ற சாதகமற்ற பலன்கள் ஏற்படும்.

இக்காலத்தில் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகர் வழிபாடு, பாம்பு புற்றுக்கு பால் வைப்பது வெள்ளியில் நாகர் செய்து தானமளிப்பது, சர்பேஸ்வரரை வழிபாடு செய்வது, கீழ்பெரும் பள்ளம், திருகாளஹஸ்தி, சென்று சர்ப்ப சாந்தி செய்வது, கொள் தானம் செய்வது உத்தமம். வைடூரிய கல் பதித்த மோதிரம் கூட அணியலாம்.

சந்திர திசை சுக்கிர புக்தி 1 வருடம், 8 மாதம்
சுக்கிர பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம் நட்பு பெற்று சுப கிரக சேர்க்கை, பார்வை பெற்றோ லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 11ம் வீட்டில் அமைந்து புக்தி நடைபெற்றாலும், திசா நாதனுக்கு கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் ஜாதகர் சிறப்பான மேன்மை மிகு பலனை அடைவார். பெண்கள் வகையில் ஆதரவு பெருகும். செல்வச் சேர்க்கை வீடு வாகனம், ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். 

திருமண சுபகாரியம் நடைபெறும். பெண் குழந்தை யோகம் நல்ல தூக்கம், கட்டில் சுகம், ஆடம்பர வாழ்வு அமையும். மனைவி, தாய், சகோதரி வழியில் மேன்மை உண்டாகும். குலத் தொழில், கலைத் துறைகளிலுமு மேன்மை, குடும்பம், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஜவுளி, ஆடம்பர பொருட்கள், ஆடை ஆபரணம் யாவிலும் சிறப்பான லாபமும் உயர்வும் உண்டாகும்.

சுக்கிர பகவான் நீசம் பகையாகி பலமிழந்து, பாதக ஸ்தானம் அஸ்தங்கம் அடைந்து 6, 8, 12ல் மறைவு பெற்று பாவிகள் சேர்க்கை, பாவிகள் பார்வையாகி புக்தி நடைபெற்றாலும் தகாத செயலில் ஈடுபட்டு குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் நிலை மனதில் உற்சாக குறைவு குழப்பம் போன்றவை உண்டாகும்.அதுமட்டுமின்றி இல்லற வாழ்வில் பிரச்சனை, கட்டில் சுகம் பாதிக்கப்படும் நிலை மர்ம ஸ்தானங்களில் பாலியல் தொடர்பான நோய், கண்களில் பாதிப்பு, தீய பழக்க வழக்கங்களும், பெண்களால் அவமானப்படும் சூழ்நிலைகளும் உண்டாகும்.

வண்டி வாகனத்தை இழக்கும் நிலை, கடன் வறுமை, விபத்துக்களையும் சந்திக்க நேரிடும். இதற்கு பரிகாரமாக லக்ஷ்மி பூஜை செய்வது வெள்ளி கிழமை விரதம் மேற்கொள்வது, திருவிளக்கு பூஜை செய்வது நெய் விளக்கு ஏற்றுவது, ஏழை சுமங்கலிகளுக்கு அன்னதானம் ஆடை தானம் அளிப்பது, பசுவுக்கு உணவு அளிப்பது ஸ்ரீரங்கம் சென்றுலக்ஷ்மியை தரிசிப்பதால் துன்பம் விலகும்.

சந்திர திசை சூரிய புக்தி 6 மாதம்
சூரிய பகவான் உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11ல் இருந்து திசை நடைபெற்றாலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று காணப்பட்டு புக்தி நடைபெற்றாலும் வீரம், விவேகம், கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் மேன்மை, உயர்வு, அனுகூலம் உண்டாகும். அரசாங்க வழியில் பதவிகள், பெருமைகள் தேடி வரும். புத்திர பாக்கியம் ஏற்படும்.

சூரிய பகவான் அசுப பலன் பெற்று பகை நீசமாகி பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்று காணப்பட்டாலும் லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து திசா நாதனுக்கு 6, 8, 12ல் மறைந்து காணப்பட்டாலும் ஜாதகருக்கு உஷ்ண நோய்கள், கண்களில் பாதிப்பு, இரு சுய கோளாறு, மூளை கோளாறு, எலும்புகளில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜீரத்தால் பாதிப்பு, உண்டாகும். தந்தைக்கு தோஷம் தந்தை வழி யில் அனுகூலமில்லாத நிலை இருக்கும். இடம் விட்டு இடம் போக வேண்டிய நிலை, வண்டி வாகன விபத்துக்கள், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் நிலை, பகைவர்களால் பயம் உண்டாகும். உடன்பிறறந்தவர்களுடன் பிச்சனை கெட்ட வார்த்தைகளை பேசுதல், கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவமானப்படும் நிலையும் உண்டாகும்.

இதற்கு பரிகாரமாக சூரிய நமஸ்காரம் செய்வது சிவ வழிபாடு, பிரதோஷ கால பூஜை செய்வது, ஆதித்ய ஹிருதயம் பிராயணம் செய்வது, ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை சக்கரை பொங்கல் செய்து வழிபட வேண்டும். சூரியனார் கோயில் ஆடுதுறையில் உள்ளது. அங்கு சென்று வருவதும் பரிகாரமாகும்.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Tuesday, September 13, 2011

சுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்

நவ கிரகங்களில் களத்திர காரகன் என வர்ணிக்கப்படும் சுக்கிரன் மன வாழ்வு அமைவதற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார். பொதுவாக திருமண வாழ்வு, ஆடை, ஆபரணம், கலை, சுக வாழ்வு, வண்டி வாகனம், பெண் தொடர்பு, உடல் உறவு, வீடு மற்றும் எண்ணற்ற விஷயங்களுக்கு காரகனான சுக்கிரன், ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் தான் சுக வாழ்வு, திருமண வாழ்வு, வசதி வாய்ப்பு உண்டாகும். 

சுக்கிரன் பலம் இழந்தால் ரகசிய நோய்கள், மண வாழ்வு உடல் உறவு போன்ற விஷயங்களில் பிரச்சனை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் சென்றால் அஸ்தங்கம் பெற்று பலம் இழப்பார். பொதுவாக சுக்கிரன் பலம் இழக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பெண் கிரகமான சுக்கிரன் ரிஷபம் துலாத்தில் ஆட்சியும், கன்னியில் நீசமும், மீனத்தில் உச்சமும் பெறுவார். 

அசுரர்களுக்கு தலைவனாக சுக்கிரனை வர்ணித்து அசுர குரு எனவும் அமைப்பார்கள். பொதுவாக சுக்கிரன் தனித்து இருப்பது 3ல் எத்தனை கிரக சேர்க்கை பெறுகிறதோ அத்தனை தாரம் உண்டாகும். சுக்கிரனுக்கு சனி புதன் ராகு நட்பு கிரகம். குரு செவ்வாய் நீசம், சூரியன் சந்திரன் பகைவர்.

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Sunday, September 4, 2011

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார். 

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். 

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.

குரு 2ல் இருந்தால்
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3ல் இருந்தால்
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.

குரு 4ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.

குரு 5ல் இருந்தால்
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர்  ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6ல் இருந்தால்
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
குரு 7ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

8ல் இருந்தால்
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.

9ல் இருந்தால்
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.

10ல் இருந்தால்
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

11ல் இருந்தால்
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12ல் இருந்தால்
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.

Thursday, September 1, 2011

சூரிய திசையால் ஏற்படும் பயன்கள்

நவகிரகங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஜெனன ஜாதகம் பலமாக இருந்தால் நமக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். பொதுவாக ஒரு ஜாதகத்தின் பலா பலன்கள் நிர்ணயம் செய்கின்ற போது தசா புக்தி பலன்கள் ஒருவகையிலும் கோட்சார பலன்கள் ஒரு வகையிலும் நம்மை வழி நடத்துகின்றன. ஒருவருக்கு தசா புக்தி பலன்களை பார்க்கின்றபோது ஒருவருக்கு தசாநாதன் சிறப்பாக அமையப் பெற்று விட்டால் அதன் பலா பலன்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அதுவே ஒரு கிரகம் பலவீனமாக இருந்து விட்டால் அக்கிரகத்தின் தசா புக்தி காலங்களில் சோதனைகள் பல உண்டாகும். 

ஒரு ஜாதகத்தில் யோகங்கள் ஏற்படுவது முக்கியமில்லை. யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் தான் அந்த யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். குறிப்பாக ஒரு ஜாதகம் மிகவும் பலமாக அமைந்து விட்டால் அக்கிரகத்தின் தன் காலத்தில் வேண்டிய அனைத்து செல்வஙகளையும் அடைந்து விடலாம். நல கிரகங்களில் ஒவ்வொரு திசையும் எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் எந்த திசை யாருக்கு சிறப்பான பலனை உண்டாக்கும் என்பதில் பற்றி விரிவாக பார்ப்போம்.

சூரிய திசை
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் பார்ப்வேறு விநோதங்களை உண்டாக்குகிறார். சூரிய திசை 6 வருடங்களாகும். மிக குறுகிய காலமாக திசை நடத்தும் கிரகம் சூரியன் மட்டும்தான். சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடத்தினாலும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் தனது திசா காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம். 

அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம். சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும். 

பொதுவாக சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன் செவ்வாய் குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும் அக்கிரகங்களின் சாரம் பெறுவதும் சிறப்பான பலனை உண்டாகும்.

சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும் மகரம் கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமையப் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப் பெற்றால் அனைத்து கிரகங்களையும் பலமிழக்க வைக்க கூடிய பலம் சூரியனுக்கு உண்டு. அதுவே சூரியன் ராகுவுக்கு அருகில் அமையப் பெற்றால் சூரியன் பலகீனம். அடைந்து விடுவார். அதனால் தான் சூரியன் ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கு மிக அருகில் அமையக் கூடாது. 

மேற்கூறியவாறு சூரிய பகவான் பலவீனமடைந்தாலும் சனி போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று சூரிய திசை நடைபெற்றால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு கண்களில் பாதிப்பு, இருதய நோய், அரசாங்க தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை, ஆண்மைக் கோளாறு, ஜீவன ரீதியாக பிரச்சனைகள் உண்டாகும். அதுபோல சூரியனின் திசை நடைபெற்றால் தந்தைக்கு கூட சோதனைகள் உண்டாகிறது. 

சூரியன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றால் தந்தை வழி உறவினர்களிடம் கூட கருத்து வேறுபாடுகள் வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

சூரிய திசை நடைபெறும் காலங்களில் மாணிக்கக் கல் மோதிரம் அணிவது, சிவ வழிபாடு பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001