ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகினால் இந்த பெண் வந்த நேரம் நல்ல நேரம். இவள் மகாலஷ்மி என எல்லோரும் போற்றுவார்கள். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் கூட மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்களும் தேடி வரும். வாழ்க்கைத் தரமும் உயரும், குப்பை மேட்டிலிருந்தவர்களும் கோபுரத்திற்கு வருவார்கள். மனைவி வந்த பின் தான் வாழ்க்கையில் மாற்றங்களும் உண்டாகும். பொன் 'பொருள்' வரவு, தொழிலில் உயர்வு, சுக வாழ்வு, சொகுசாக அமையும்.
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடானது களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திர காரகனாவார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தால் திருமணத்திற்கு பின் அவர் வாழ்வில் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 2ம் இடம் தனஸ்தானம் ஆகும். 11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 2,11 க்கு அதிபதிகள் 7ம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம் பெற்றிருந்தாலும், 7ம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவம் வீடு, வாகன யோகத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். ஜாதகத்தில் 4ம் அதிபதியும், 7ம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தால் 4,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்கு பின் சொந்த பூமி மனை, வீடு,யோகம், வண்டி,வாகன வசதிகள் போன்றயாவும் சிறப்பாக அமையும். 4,7 க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி உச்சம் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ, பலமாக இருந்தால், சிறப்பாக தொழில் யோகம் உண்டாகி நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் 10ம் அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொழில் செய்து வாழ்வில் உயரக்கூடிய யோகம் உண்டாகும்.
7,10 க்கு அதிபதிகளுடன் சுக்கிரனின் சம்மதமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மன¬வி இணைந்து தொழில் மூலம் சம்பாதித்து ஏற்றங்கள், உயர்வுகளை அடைய முடியும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7,10 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெற்றிருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களை கூட்டாளிகளாகச் சேர்க்காமல் மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்வது மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனென்றால் உபயலக்னகார்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் 10 ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் 7ம் அதிபதி அதிபலம் பெற்றிருந்தால் தங்கள் பெயரில் தொழில் செய்வதை விட அவர்களின் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையமுடியும்.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001
Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001
No comments:
Post a Comment