Saturday, February 4, 2012

திருமண வாழ்க்கை இல்லாத நிலை


பிறக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் வளரும் நாம் பள்ளிக்கு செல்லும் வயதில் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவோடு வளர்கிறோம். திருமண வயது என்ற ஒன்று வந்தவுடன் நமக்கென  அமையும் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்து விடுகிறது. என்ன தான் பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு என்ற ஒன்று வரும் போது தான் மனிதன் முழுமையடைகிறான்.

மற்ற எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒரு அடிதள்ளிச் செல்ல நேரிடுகிறது. அதிலும் வரக்கூடிய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டானால் அந்த வாழ்க்கையே இன்பமயமாகிறது. ஆனால் சிலருக்கு இந்த  திருமண உறவு என்பது எட்டாக்கனியாகவே  மாறிவிடுகிறது. சிலருக்கு திருமணம் என்று நடந்தாலும் இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்றது. சிலருக்கு வாழ்க்கை துணையாலேயே பாதிப்புகள் உண்டாகிறது. இதில் ஜோதிட ரீதியாக வாழ்க்கை துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்ககூடிய 2,4,7,12 ஆகிய வீடுகளும், களத்திர காரகன் சுக்கிரனும் வலு இழந்து பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையே இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக ஒருவரது  ஜாதகத்தில் 4க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாச வாழ்க்கையை ஏற்படுத்தும். அது போல செவ்வாய், சூரியன், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன்  ஆகியவை  பாவகிரகங்கள் என்பதால் இவற்றில் 4 அல்லது  5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் சேர்ந்திருக்குமேயானால்  மணவாழ்க்கை ஏற்படாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரக சேர்க்கைகளானது 7ம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7ம்  அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்நியாச வாழ்க்கை வாழ நேரிடம்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் 2 க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்து 7ம் வீடு பாவிகள் வீடாக அமைந்து, சுபர் பார்வையின்றி இருந்தாலும், தேய்பிறை சந்திரனானவர் இருபாவிகள் சேர்க்கை பெற்று 7ம் வீட்டில் அமைந்தாலும்,  சந்திரன் சுக்கிரன் இணைந்து சனி, செவ்வாய்க்கு 7ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 12ம் வீட்டில் சந்திரன் பாவிகள்  சேர்க்கை பெற்றிருந்தாலும் திருமண வாழ்க்கை அமைந்தாலும் நிலைக்காத நிலை உண்டாகும்.  களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் ராக பகவான் இருபாவிகள் சேர்க்கை பெற்று சுபர் சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும் சனி சந்திரன் இணைந்து 7 ல் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், சுக்கிரன், சந்திரன் பலவீனமாக இருந்து 7,12 ல் பாவிகள இருந்தாலும் மண வாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அப்படியே அமைந்தாலும் பிரச்சினைகள் பிரிவுகள் உண்டாகும்.

நவகிரகங்களில் அலிகிரகம் என வர்ணிக்கப்படுவது சனி, ராகு, புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், சனி பகவான் ராக சேர்க்கை பெற்று, 1,7 ல் இருந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், ஜென்ம லக்னத்தை சனி, ராகு, புதன் போன்ற கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும், 8ல் சனி, ராகு, புதன் அமைந்து  7,8 ம் வீட்டிற்கு சுபர் பார்வையின்றி இருந்தாலும், 8ம் வீடு புதன் வீடாக இருந்து சனி, ராகு 8ம் வீட்டைப் பார்த்தாலும், புதன், சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும். மேற்கூறிய கிரக அமைப்புகள் பெண்கள் ஜாதகத்தில் இருக்குமேயானால் மணவாழ்க்கை சிறப்பாக அமையப்பெறாத நிலை ஏற்படுகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

No comments: