Tuesday, February 14, 2012

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்
என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.

இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது  காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான  அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.
கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.
முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும்  காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

No comments: