Thursday, March 8, 2012

பூர்வீக சொத்தும்

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பார்கள். அவர்கள் சேர்த்து வைத்த புண்ணியங்கள் இன்றைய தலைமுறையினரைக் காப்பது போல, அவர்கள் செய்த பாவகாரியங்களும் நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நாம் வாழும் வாழ்க்கை சுகமானதாக இருக்க வேண்டும் என்பது போல, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் சுகமாக வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.

சிலர் தம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை வாழையடி வாழையாக காப்பாற்றி, பெருக்கிக் கொண்டே வந்து கோடீஸ்வரராகவும், குபேரராகவும் வாழ்கின்றனர். இப்படி பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. எப்படி முன்னோர் செய்த நற்செயல்கள் நமக்கு நல்ல வாழ்க்கையையும், பலனையும் தருகிறதோ அதுபோல, அவர்கள் செய்த பாவ காரியங்களால் பூர்வீக வழியில் அனுகூலப் பலனை அடையமுடியாமல் எத்தனையோ பேர் அவதிபடத்தான் செய்கிறார்கள்.

பூர்வீக வழியில் புண்ணியங்களை அடைய அவரவர்களின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் பாவமானது பலமானதாக அமைய வேண்டும். தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதைவிட உரிமை பேரன் பேத்திகளுக்கே அதிகமாக உள்ளது.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், பூர்வீகச் சொத்து கண்டிப்பாக இருக்கும். 5ம் வீட்டையும், 5ம் அதிபதியையும் குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வது மூலம் பூர்வீக வழியில் அனுகூலங்கள் அதிகரிக்கும். 5 ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ அமைந்திருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று தந்தை ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 9ம் இடமும் சாதகமாக அமையப் பெற்று, தந்தை காரகன் சூரியன் பலமாக அமையப் பெற்றால், தந்தை வழியில் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய உன்னதமான நிலை உண்டாகும். குறிப்பாக தந்தை காரகன் சூரியன் பலமிழந்தாலோ, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலோ, தந்தைக்கு தோஷத்தையும், தந்தை வழியில் பூர்வீக சொத்துக்களை அடைய தடைகளையும் ஏற்படுத்தும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் இடம் பலமாக இருந்த தாய் காரகன் சந்திரனும், தாய் தானமான 4ம் இடமும் வலுவாக இருந்தால், தாய் வழியில் பூர்வீக சொத்தை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 5ம் அதிபதி 10 அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால், மூதாதையர்கள் செய்த தொழிலை வம்சா வழியாக ஜாதகரும் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக தொழில் யோகமும், அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகமும் உண்டாகும்.

5ம் அதிபதி பலமாக அமையப்பெற்று 6ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றாலோ, 6ல் இருந்தாலோ சொத்துக்கள் தொடர்பாக வம்பு வழக்குகளை சந்தித்து வெற்றி பெற நேரிடும். அதுவே 5ம் அதிபதி பலஹீனமாக இருந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றால் சில தேவையற்ற வம்பு வழக்குகளை சந்தித்து, அதனால் பூர்வீக சொத்துக்களை இழக்க நேரிடும்.

ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றாலும் 6,8, 12 ல் அமைந்து பலஹீனமாக இருந்தாலும் பாதக ஸ்தானத்தில் அமைந்தாலும் பூர்வீக சொத்து வகையில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படாது.

அது போல சனி, ராகு போன்ற பாவிகள் 5ல் அமையப் பெற்றாலும், 5ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்காது. குறிப்பாக சனி 5ல் இருப்பது தோஷம் என்றாலும், சனி தன் சொந்த வீட்டிலிருந்து அது 5ம் பாவமாக இருந்தாலும், லக்னாதிபதியாகி 5ம் வீட்டை பார்வை செய்தாலும் கெடுதியை கொடுக்காமல் பூர்வீக வழியில் நற்பலனை தருவார்.

நவக்கிரகங்களில் சகலவிதமான தோஷங்களை விலக்கக்கூடிய குரு பகவானின் பார்வை 5ம் வீட்டிற்கோ, 5ம் அதிபதிக்கோ இருந்தால் பூர்வீக வழியில் சிறிதளவாவது அனுகூலங்கள் ஏற்படும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



No comments: