Friday, April 13, 2012

உத்தியோகம் செய்யக்கூடிய அமைப்பும் அதில் உயர்வுகள் உண்டாகக்கூடிய காலமும்

உத்தியோகம் புருஷ லட்சணணம் என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்த சம்பாதிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கழுதை மேய்த்தாலும் அரசு துறையில் கழுதை மேய்ப்பவனுக்குத்தான் தன் பெண்ணைக் கொடுப்பேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிப்பார்கள். ஆனால், தற்போது சம்பாதிப்பதுக்கு ஏதுவாக தனியார் துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அரசு வேலையை அவ்வளவாக யாரும் எதிர்பார்ப்பதில்லை. மனிதனால் பிறந்த அனைவருக்குமே நிறைய சம்பாதிக்க வேண்டும், உயர்வான பதவிகளை வகிக்க வேண்டும், சமுதாயத்தில் நல்லதொரு வாய்ப்பினை பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். இப்படி உத்தியோக ரீதியாக  சம்பாதிக்கக்கூடிய யோகம் யாருக்கு உண்டாகும் என்று ஜோதிட ரீதியாக ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 10ம் இடமானது தொழில் உத்தியோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாக உள்ளது. 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 10ல் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தாலும், தொழில் செய்த சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே 10ல் ஒரு கிரகம் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 10 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் உத்தியோகம் செய்த சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
நல்ல உத்தியோகம் என்பது ஒருவருக்கு அமைய வேண்டுமென்றால் நவகிரகங்கள் பலமாக இருத்தல் அவசியம். நவகிரகங்களில் உத்தியோககாரகன் செவ்வாயாவார்.  செவ்வாய் பலம் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு  தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், உபய ஜய ஸ்தானம் என கூறக்கூடிய 3,6,10,11 ல் அமையப் பெற்று நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், உயர்ந்த உத்தியோகத்தில்  பணிபுரியக் கூடிய உன்னத நிலை ஏற்படும். நிர்வாக காரகனான செவ்வாய் 10ல் அமைந்தால் திக் பலம் பெறுவார். அப்படி செவ்வாயே திக் பலம் பெற்று  அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதாயத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரகமான குருவின்  பார்வையானது செவ்வாய்க்கோ, 10ம் வீட்டிற்கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் அரசனாக விளங்கக்கூடிய சூரியன் 10ம் அதிபதியாக இருந்தாலோ, 10ம் வீட்டில் அமைந்து குருபார்வை பெற்றாலோ, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும்.  ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் ஆதிக்கம் இருக்குமேயானால், பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். 10ம் அதிபதியுடன் 3,6,8,12 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 10ம் அதிபதியே 3,6,8,12 ல் மறைந்திருந்தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை மற்றும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் சொந்த தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து சம்பாதிப்பது சிறப்பு.

ஒருவருக்கு என்னதான் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோக அமைப்பு கொண்ட ஜாதகமாக இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய வயதில் வரக்கூடிய திசையானது சாதகமானதாக இருந்தால் மட்டுமே தொழில் செய்து  சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே, அந்த வயதில் நடைபெறக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,8,12 க்கு உரிய கிரகங்களின் திசையாகவோ ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசையாகவோ, பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகத்தின் திசையாகவோ, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவோ இருக்குமேயானால், முதலீடு செய்து தொழில் செய்வதை விட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்வதே நற்பலனைத் தரும். பொதுவாக, ஒருவருக்கு நடக்கக்கூடிய  திசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது போன்ற கிரகங்களின் திசையாக இருந்தால் பெரும்பாலும் உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும்.

அது போல ஒருவருக்கு நடக்கக்கூடிய திசையானது 3 வது திசையாக இருந்தாலும், உத்தியோக அமைப்பு உண்டாகிறது. உதாரணமாக, செவ்வாயின் நட்சத்திரங்களாகிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக குரு திசை வரும். குருவின் நட்சத்திரங்களாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3 வது திசையாக புதன் திசை வரும்.  இதுபோல 3வது வரும் காலங்களில் பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். சனி பார்வையானது 10ம் வீட்டிற்கு இருக்குமேயானால், அவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், கடினமாக உழைத்தாலும், தகுதிக்கு குறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும். அவ்வளவாக முன்னேற்றத்தை அடைய முடியாது.
பணிக்கு சென்றோம், வந்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் உத்தியோக ரீதியாக உயர்வுகளை பெறுவதே  முக்கியமானதாகும். சிலர் சாதாரண பதவிகளில்  இருந்தாலும், அவரின் திறமையால் படிப்படியாக முன்னேறி உயர்வான பதவிகளை அடைவார்கள். ஆனால், சிலருக்கு ஆரம்பத்திலேயே உயர் பதவியை வகிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக  உயர்வுகளை எப்பொழுது பெறமுடியம் என பார்க்கும் போது 10ம்  அதிபதியின் தசாபுக்தி காலங்களிலோ, 10ம் அமையப்பெற்ற  கிரகங்களின் தசா புக்திகளின் காலத்திலோ, 10ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்ற கிரகங்களின் தசா புக்திகளின் காலங்களிலோ, 10ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகளின் காலங்களிலோ, வலுப்பெற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் தசா புக்திகளின் காலங்களிலோ, உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு, 3,6,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும், ஆண்டு கோளான குரு பகவான், 2,5,7,9,11ல் சஞ்சரிக்கும் காலங்களிலும் உத்தியோக ரீதியாக உயர்வுகள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மைகள் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


No comments: