Wednesday, April 18, 2012

வெளியூர், வெளிநாடு யோகம்


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். சிலர் என்னதான் பிறந்த ஊரில் படித்து வளர்ந்தாலும் ஜீவன ரீதியாக சம்பாதிப்பதற்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். பிறந்த நாட்டை விட அந்நிய நாடுகளில்தான் அதிக சம்பளம் கொடுப்பதாக மக்கள் நம்புவதே இதற்கு காரணமாகும். சொந்த ஊரில் மாசம் 10,000 ரூபாய்க்கு 12 மணி நேரம் மாடாய் உழைப்பவர்கள், அதே 12 மணி நேர வேலைக்கு அயல்நாடுகளில் 40, 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்ற ஆசையில் செல்கிறார்கள். 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இங்கே சேமிக்க முடியாத பணத்தை இரண்டே வருடங்களில் அயல்நாடுகளுக்குச் செல்பவர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்.

இது மட்டுமின்றி என் கணவர் அயல்நாட்டில் பணிபுரிகிறார் என்பதை மனைவி மார்கள் சொல்லிக் கொள்வதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் உயர்வடையும் குடும்பத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழவும், வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு பணம் அனுப்புவோர்களில் எத்தனை பேர் தங்கள் சுகங்களை தொலைத்திருக்கிறார்கள் என்று அவர்களை கேட்டால்தான் தெரியும். ஒருபுறம் ஏற்றத்தை கொடுக்கும் அயல்நாட்டு வாழ்க்கையானது, ஒரு புறம் இறக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறினால் மிகையாகாது.

வெளிநாடு சென்று பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சம்பாதிக்கும் ஆசையில் செல்லும் சிலர் எந்தவித பலனையும் அடையாமலேயே வெருங்கையுடன் ஊர் திரும்பினால் போதும் என்ற நினைப்பில் வந்துவிடுகிறார்கள். ஜோதிட ரீதியாக அயல்நாடுகளுகுகுச் சென்று சம்பாதிக்கும் யோகம் யாருக்கு அமையும் என்று பார்த்தோமானால், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 9.12 க்கு அதிபதிகள் பலம் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ, ஒருவருக்கொருவர் பார்வை செய்தோ அமைந்திருந்தாலும் 9,12 க்கு  அதிபதிகள் இணைந்து 9 அல்லது 12 ல் அமைந்திருந்தாலும் அவருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று  சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பயணங்களுக்கு காரகனான சந்திரன் பலம் பெற்று 9, 12 க்கு அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு  சென்று வரும் அமைப்பு, பயணங்களால் அனுகூலம், அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமின்றி 9,12 க்கு அதிபதிகளுடன் 10 ம் அதிபதி இணைவது அற்புதமான ராஜ யோகமாகும். இதனால் ஜாதகருக்கு வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். 9,12 க்கு அதிபதிகள் இணைந்து ஜல ராசிகள் என கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 9,12  க்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்து 9 அல்லது 12 ல் சனி அல்லது ராகு அமையப் பெற்று, அதன் திசை நடைபெற்றாலும் 9,12 க்கு அதிபதிகளுடன் சனி அல்லது ராகு இணைந்து திசை நடைபெற்றாலும் கடல் கடந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு, வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் 2க்கு  மேற்பட்ட கிரகங்கள் 9,12 ல் பலமாக அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் செய்யும் வாய்ப்பும் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

ஒருவருக்கு 9,12 ம் ஸ்தானங்கள் பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டாவதைப் போல 3ம் அதிபதியும் பலம் பெற்றிருந்தால் குறுகிய கால பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, அடிக்கடி பயணங்கள் ஏற்படும் அமைப்பு உண்டாகும். குறிப்பாக, ஒருவருக்கு சந்திரனுடைய திசை அல்லது புக்தி நடைபெற்றால் அடிக்கடி தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது முக்கியமானதாகும். இந்த தசாபுக்தி காலங்களில் கோட்சார ரீதியாகவும் குரு, சனி போன்ற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். அதுவே, சாதகமான தசாபுக்தி நடைபெறும் காலங்களில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெற்றாலும் குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் தடைபடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


No comments: