Friday, April 20, 2012

ஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் லாபங்களை அடையும் ஜாதக அமைப்புகள்

வாழ்க்கையானது இன்ப, துன்பங்கள் நிறைந்தது. பொருளாதார நிலையானது ஒருவருக்கு சிறப்பானதாக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் வண்டிச் சக்கரத்தை தடையின்றி ஓட்ட முடியும். தொழில், வியாபாரம் செய்து பிழைப்பவர்களின் நிலையானது ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் நூறு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளுக்கு சில நேரங்களில் ஐம்பது ரூபாய் மட்டும் கிடைக்கப் பெற்று நஷ்டமடைய நேரிடும்.  அது போலத்தான் ஷேர் மார்க்கெட் என்பதும், பலர் தங்களின் சேமிப்பு பணத்தை லாபகரமான விஷயங்களில் முதலீடு செய்து முன்னேற்றமடைய விரும்புகிறார்கள். சிலர் தங்கம் போன்றவற்றிலும், சிலர் ஷேர் மார்க்கெட் போன்றவற்றிலும் முதலீடு செய்கிறார்கள். ஆனாலும் விலை ஏறும் போது இவற்றில் லாபமும், விலை குறையும் போது நஷ்டமும் அடைய நேரிடுகிறது.

வியாபாரம் செய்பவர்களும் அரிசி, பருப்பு, தானிய வகைகள் போன்றவற்றை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டு அதன் விலை ஏறும்போது விற்ற லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டே  செயல்படுவார்கள். இருப்பில் வைத்துக்கொண்டு  விலை ஏறும்போது எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், அந்தப் பொருளின் விலை சட்டென சரியும் போது வாங்கிய விலையே வந்தால்  போதுமென் அவசரமாக விற்பனை செய்து விடுவார்கள். இப்படி நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்து ஒருவரால் லாபத்தை அடைய முடியுமா அல்லது நஷ்டம்  உண்டாகுமா என ஜோதிட ரீதியாக பார்ப்போம்.

எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை எப்படி உண்டாகிறது? என ஒருவரின் ஜாதக ரீதியாக பார்த்தோமானால், உபஜய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3, 6, 10, 11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது எதிர்பாராத திடீர் தன யோகம் உண்டாகி வாழ்க்கை முன்னேற்றமடைகிறது. அதிலும் குறிப்பாகப் பார்த்தோமானால் 6,11 ம் வீடுகள் பலம் பெறுகின்றபோது திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வருகிறது. உபஜய ஸ்தானத்தில் பாவகிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் போன்றவை நட்பு நிலையுடன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நவகிரகங்களில் யூகிக்க முடியாத அளவிற்கு திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவர் ராகு பகவானாவார். இந்த ராகு பகவான் உபஜய ஸ்தானங்களில் அமையப் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெறுவாரேயானால் எதிர்பாராத தனவரவுகள் மூலம் வாழ்க்கைத் தரமானது திடீரென்று உயரும்.

அதுபோல ஒருவர் ஜாதகத்தில் 6,11 க்கு அதிபதிகள் பலம் பெறுவதும், பரிவர்த்தனைப் பெறுவதும் நல்ல அமைப்பாகும். திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றி பார்க்கின்ற போது, தன ஸ்தானமான 2ம் வீடு மற்றும் 5,9 ம் வீடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2,5,9,11 க்கு அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனைப் பெற்றாலும், இணைந்து பலம் பெற்றிருந்தாலும் திடீர் தனச்சேர்க்கையானது அமையும்.



சூரியன் 6 அல்லது 11ம் வீட்டில் பலம் பெற்று 5,9ம் வீடுகள் சாதகமாக இருந்தால் தந்தை, மூதாதையர்கள் மற்றும் அரசு வழியில் திடீர் தனயோகம், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஜாதகரைத் தேடி வரும்.

சந்திரனானவர் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் உணவு தானியங்கள், தண்ணீர், பயணங்கள் மூல மாகவும் எதிர்பாராத லாபங்கள், தனச்சேர்க்கைகள் உண்டாகும்.

செவ்வாய் பகவான் 6 அல்லது 11 ல் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை மூலமாக எதிர்பாராத யோகம், கௌரவ பதவிகள் தேடி வந்து வாழ்க்கை தரமானது உயரக்கூடிய வாய்ப்பு கிட்டும்.

புதன் குரு 6,11 ம் வீடுகளில் பலம் பெற்றிருந்தால் பங்குச் சந்தை, வணிகம், பயணத்தால் அனுகூலங்கள், முதலீடுகள் மூலமாக லாபங்கள் உண்டாகும்.
சுக்கிர பகவான் பலம் பெற்று 6,11 ம் வீடுகளும் பலம் பெற்று அமைந்தால் கலை, சினிமா, ஆடை, ஆபரணங்கள், ரியல் எஸ்டேட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி 6,11 ல் அமையப் பெற்றால், சில சட்ட விரோதமான சட்ட சிக்கல்கள் நிறைந்த செயல்கள் மூலமாக எதிர்பாராத தனச் சேர்க்கையினை அடைவார்கள்.

அதுவே 6,11 க்கு அதிபதிகள் விரையாதிபதி சேர்க்கைப் பெறுவதும், பாதகாதிபதி சேர்க்கைப் பெறுவதும், விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமையப் பெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், எதிர்பாராத தனவரவுகள் உண்டாவதற்கு தடை ஏற்படும். நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்ன காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் இடம் பாதக ஸ்தானம் என்பதனால்  பங்குச் சந்தை, லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

ஒருவர் ஜாதகத்தில் 8,12 ம் வீடுகள் கெடுதியான ஸ்தானம் என்றாலும் 3,6,8,12 க்கு அதிபதிகள் இடம் மாறி மாறியிருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. இதனால் இந்த வீட்டில் அமைந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் எதிர்பாராத தன வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கை முன்னேற்றமடையும்.

தன  யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் கோட்சார ரீதியாக கிரக நிலைகளின் சஞ்சாரமும் சாதகமாக இருந்தால், எடுத்துக்காட்டாக சனி, 3,6,11லும் குரு 2,5,7,9,11 லும் சஞ்சாரிக்குமேயானால் அந்த யோகத்தின் பலன் பலமானதாக அமைந்து சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் அதுவே அஷ்டமச் சனி, ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும் அந்த யோகத்தின் பலமானது குறைந்து லாபம் தடைபடும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


No comments: