Monday, November 5, 2012

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்




     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தாறாவது இடத்தை பெறுவது உத்திரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மீன ராசிக்குரியதாகும். இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர்  வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் து, ஞ, ச, ஸ்ரீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் யா, ஞ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
   
உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

குடும்பம்;
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். அமையும் மனைவியிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவுப் பிரியர்களாக இருப்பார்கள்.  இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்.

தொழில்;
     
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

நோய்;
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடக்க திசை சனி திசை என்பதால் ஜல தொடர்புடைய பாதிப்பு அஜீரண கோளாறு, அடிபட்டு கைகால்களில் எலும்புகளில் அடிப்பட கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்லீரலில் பிரச்சனை, அதிக மருந்துகள் உண்பதால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உண்டாகும். குடிப்பழக்கமும் அதிகமிருக்கும். உடலின் கீழ்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

திசை பலன்கள்;
    
சனி திசை உத்திரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு முதல் திசையாக வரும். இது மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். சனி திசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடும் குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கையும் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
     
இரண்டாவதாக வரும் புதன் திசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் நல்ல  ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக  அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.
     
முன்றாவதாக வரும் கேது திசை சாதகமற்றதாக இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.

      நான்காவதாக வரும் சுக்கிர திசை இருபது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

விருட்சம்;
     
உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரமுள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிதல், வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குலம் கிணறு வெட்ட  இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருநங்கூர்;
      எம்பெருமான் நின்ற கோலத்தில் நிலமகள், திருமகளோடு புருஷோத்தம பெருமாள் என்ற பெயர் கொண்டு அருள் பாலிக்கிறார். ஸ்தலத்தின் வடக்கே உள்ள திருக்குளமே திருபாற் கடலாகும். தல விருட்சம் வேம்பு.

வைத்தீஸ்வரன் கோயில்;
      இந்த கோயிலும் உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களின் பரிகாரஸ்தலமாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
      ஓம் காமகா மாய வித்மஹே
      ஸர்வசித்யை ச தீமஹி
    தன்னோ தேனு ப்ரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்
      பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  


7 comments:

Tamil Newspaper said...

மிகவும் சுவாரஸ்யமான நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

Unknown said...

Confusion

Anonymous said...

🙏

Anonymous said...

சரியாக சொன்னிர்கள் 👌👍

Anonymous said...

Enaku uthiratathi kanavaruku bharani

Anonymous said...

🙏

Anonymous said...

Super👌👌👌👌 thanks🙏🙏