Monday, July 27, 2015

ஜனன நேரத்தை ஜோதிடர் நிர்ணயிக்கலாமா?

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "



                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

ஜனன நேரத்தை ஜோதிடர் நிர்ணயிக்கலாமா?
                                                    
     ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெண்களுக்கு மறு பிறவியாகும். மழை பெய்வதும் குழந்தை பிறப்பதும் அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். விஞ்ஞானம் வளராத அந்த காலத்தில் கிராமத்து மருத்துவச்சிகள் வீட்டிற்கு வந்து பிரசவம் பார்த்து எந்த வித பிரச்சினையும் இன்றி தாயையும் சேயையும் நல்ல படியாக பிரித்தெடுப்பார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் பிரசவ நேரம் குறிக்கும் ஜோதிடர்கள், பெற்றோர்களே உஷார் என்ற தலைப்பில் செய்தியன்றை படித்தேன். இதற்கு விளக்கமளிக்கவே இக்கட்டுரையை எழுதுகிறேன். விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடம் என்ற கலை வளர்ந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
     நெல் அறுத்து, நாத்து நட்டு, வீட்டிற்கு வந்து நெல்லை உரலில் இட்டு இடித்து தவிடையும் அரிசியையும் தனியாக பிரித்து அரிசி சோறு சாப்பிடுவது என்பது அக்காலங்களில் விஷேச வழக்கமான ஒன்று. தினமும் கேழ்வரகு கூழும்  கம்பங்களியும் சாப்பிட்டாலும் உழைப்பு என்ற ஒன்று கடினமாக இருந்தது. இதனால் பெண்களுக்கு பிரசவமும் எளிதானதாக இருந்தது.
     காலங்கள் மாற மாற எல்லாவற்றிற்கும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றத்தை எட்டிவிட்ட நிலையில் எல்லா நவீன பொருட்களும் வந்து விட்டதால் உழைப்பின் ஆற்றலும் குறைந்து விட்டது.
     கர்ப்பிணி பெண்களுக்கு மாதா  மாதம் செக்கப் ஸ்கேன் என்ற எல்லா வசதிகளும் வந்து விட்ட போதும் பெண் முதலில் தனக்கு மாத விடாய் நின்ற காலத்தை கூறினால் தான் மருத்துவர்கள் அதிலிருந்து 9 மாதம் 10 நாட்கள் கூட்டி குழந்தை பிறக்கும் நாளை குறிக்கிறார்கள். அந்தப் பெண் சரியாக தான் கூறியிருக்கிறாளா என்பது மருத்துவருக்கு தெரியாது. இப்பொழுதெல்லாம் 100க்கு 80% ஆபரேஷன் கேஸ் தான் என்றால் அதை நம்பி தான் ஆக வேண்டும்.
     மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு பிரசவவலி ஏற்படாவிட்டால் உடனே பெரிய உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று பயம் வேறு. வலி எடுத்து தானாக பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஜோதிடர்கள் தேவையில்லை.  ஆனால் மருத்துவர்கள் குறித்து கொடுக்கும் தேதிகளுக்கு மட்டுமே பிறக்கும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஜோதிடர்களை நாடி செல்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. குழந்தையே பிறக்காது என்று நினைப்பவர்கள் கூட செலவு செய்தால் டெஸ்ட் டியூப் பேபி முறையில் 2 லட்சம் 3 லட்சம் வரை செலவு செய்து குழந்தை பெற்று கொள்ளவில்லையா? நகர்ப்பு-றங்களில் நல்ல அரசு மருத்துவமனைகள் இருப்பதால் எவ்வளவு சீரியஸ் கேஸாக இருந்தாலும் உரிய முறையில் செலவின்றி தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்கள்.
     ஆனால் கிராமப்புறங்களில் நல்ல அரசு மருத்துவமனைகள் இல்லாததால் வயலில் கூலி வேலை செய்பவர் கூட தன் மனைவியின் பிரசவ செலவிற்காக தனியார் மருத்துவமனையில் நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவழிக்கிறார் தெரியுமா?
     ஜோதிடர்கள் வசூல் செய்கிறார்கள் என்று கூறியது போல் மருத்துவர்கள் வசூல் வேட்டையே நடத்துகிறார்கள் என்று கூறி விட முடியுமா-?
     நகர்ப்புற தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்வோர் பெண்ணின் பிரசவ காலத்திற்காக அட்மிட் செய்யும் போது How much I have pay  என அழகான ஆங்கிலத்தில் கேட்டு பில்லை கவுண்டரில் கட்டி விட்டு பின்னர் பிறக்கும் குழந்தையின் முகத்தை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
     ஆனால் கிராமப்புறங்களில் காதில் மூக்கில் இருப்பதையெல்லாம் கழற்றி கடையில் வைத்து பணம் திரட்டி, ஐயோ எம் புள்ளைக்கு ஆபரேஷனாமே காளியாத்தா, மாரியாத்தா தாயையும் சேயையும் தனித்தனியா நல்ல படி பிரித்து கொடு என கடவுளிடம் மன்றாடி விட்டு பணத்தையும் கட்டி பின்னர் குழந்தையையும் தாயையும் பார்த்து பூரித்து போகிறார்கள்.
     நான் மறுபடியும் சொல்கிறேன். மழை வருவதும், குழந்தை பிறப்பதும் கடவுளின் கையில் தான், அதை நிர்ணயிக்க யாருக்கும் உரிமையில்லை என்றாலும் குறித்து கொடுத்த நாளில் எந்த நேரத்தில், எந்த ஸ்தானம் வரும். எந்த லக்னத்தில் பிறந்தால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம், பெற்றோர்களுக்கு உண்டாகக் கூடிய நன்மை, தீமை, குழந்தையின் கல்வி, எதிர்காலம், மண வாழ்க்கை போன்ற யாவும் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஜோதிடரை தேடி வந்து குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என பார்த்து சொல்ல சொல்கிறார்கள்.
     பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்றாலும் ஜோதிடம் என்ற கால கண்ணாடியின் மூலம் வரக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தையின் பிறப்பை ஜோதிடர் நிர்ணயிப்பதும் ஆண்டவனின் திருவிளையாடலாக கூட இருக்கலாம் அல்லவா.
     ஜோதிடமே பொய் என்று கூறிக்கொண்டு நவரத்தினங்களை கலர் கலராக மாட்டிக் கொண்டு இருப்பவர்களையும், ராசியான கலர்களை ஆடையாக உபயோகிப்பவர்களையும் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.
     அறிஞர் ஆம்ஸ்டர்டம் எதிர்காலத்தில் இன்னன்ன நடக்கும் என்று முன்கூட்டியே யூகித்து உரைத்த விஷயங்களை தான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவர் எப்படி அனுமானித்தார் என்ற விஞ்ஞானிகளே வியந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் யார் வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம். எதிர் காலத்தை பற்றி கணிக்கின்ற ஆற்றல் ஜோதிடத்திற்கு மட்டுமே உண்டு. பூலோகத்தை பிரதிபலிக்கும் வானியல் விஞ்ஞானம் தான் இந்த ஜோதிடம்.
     ஜோதிட கலையானது கடல் போன்றது. இதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது எல்லாராலும் இயலாத காரியம். இதில் தொன்று தொட்டு வாழையடி வாழையாக வரும் வம்ச வழியினரால் மட்டுமே முடியும். கற்றது கையளவு என்றால் கல்லாதது கடலளவு. ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் எல்லா ராசிகளும் நல்ல  ராசிகள் தான். 27 நட்சத்திரங்களில் எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் தான். ஒரு பெண்ணிற்கு பிரசவ நாளை டாக்டர்கள் குறித்து கொடுக்கும் போது தான் ஜோதிடர் அந்த நாளில் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என கணித்து கூறுகிறார்கள்.
     குறிப்பாக ஒரு குழந்தையின் லக்னமும் 8ஆம் வீடும் பலமாக இருந்தால் அக்குழந்தைக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்க 4ஆம் வீடு பலமாக இருக்க வேண்டும்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய  7ம் வீடு வலுவுடன் அமைய வேண்டும். இவற்றையெல்லாம் சிந்தித்து எல்லாவற்றையும் சீர்படுத்த முடியா விட்டாலும் அந்த நாளில் எந்த நேரத்தில் இருக்கக்கூடிய லக்னத்தில் குழந்தை பிறந்தால் பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை ஆராய்கிறார்கள்.
     ஒரு சில நேரங்களில் மருத்துவர்கள் குறித்து கொடுக்கும் நாட்களில் ஒரே வீட்டில் 4,5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்றிருக்கும் பொதுவாக இப்படி கூட்டு கிரக சேர்க்கையுடன் குழந்தை பிறப்பது நல்லதல்ல என்பது மக்களின் கருத்து. ஆனால் அப்படி கூட்டு கிரகம் அமைந்தால் நல்லது எது, கெட்டது எது என பிரித்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் 4ஆம் வீட்டில் பல கிரக சேர்க்கைகள் இருந்தால் வீடு மனை அசையும் அசையா சொத்துக்கள் யாவும் அதிகமாக இருக்கும்.
     ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிலும் பல கிரக சேர்க்கை இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் உத்தியோகம் செய்யக்கூடிய யோகம் அமையும்.
     ஆனால் 7ஆம் வீட்டில் மட்டும் 4,5 கூட்டு கிரக சேர்க்கை அமைவது மண வாழ்க்கையையே கெடுத்து விடும். எனவே தான் ஜோதிடர்கள் பொதுவான லக்னங்கள் குறிப்பது மட்டுமின்றி இப்படி 4,5 கிரக சேர்க்கைகள் வரும் போதும் குழந்தை குறிப்பிட்ட நாளில் காலை பிறப்பது நல்லதா மாலையில் பிறப்பது நல்லதா, இரவில் பிறப்பது நல்லதா என ஆராய்ந்து முடிவெடுத்து மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் எல்லா மக்களுக்கு ஜோதிடம் புரியுமா அறியுமா என்பதை விட எங்களை நாடி வரும் ஜோதிட அபிமானிகளுக்கு மட்டுமே நேரத்தை கணித்து கொடுக்கிறோம் என்பது தான் உண்மை.



No comments: