Saturday, November 28, 2015

மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) 2016 ஆண்டு பலன்கள்

கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 




மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

டுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல்கொண்ட மேஷ ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்புகிரகமான பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக உயர்வான நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுமட்டுமின்றி 08-01-2016 முதல் கேது பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும் என்றாலும் இந்த ஆண்டுமுழுவதிலும் சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களை வாரிவழங்கும் குரு பகவான் வரும் 02-08-2016 முதல் ருண ரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல், டென்ஷன், தொழில், உத்தியோகரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும்.  எனவே 2016-ஆம் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவிலும் நெருக்கடிகள் நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பயணங்க ளாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் வெகுசிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே வாழ்வில் நற்பலனை அடையமுடியும்.

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் தடைப்பட்ட ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறும். சற்றே அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளுவை சற்றுக் குறைத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் அதிக கவனமுடன் நடந்துகொண்டால் வீண் பழிச் சொல்லை தவிர்க்கலாம்.

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு நல்ல லாபத்தினை ஏற்படுத்தும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். கடன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த கடனை வசூலிக்கமுடியாது. 

அரசியல்

மக்களின் ஆதரவுகளைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிக்காக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டியிருக்கும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களாலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடையும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்கநேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெறமுடியும். நவீன முறைகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்

ஆண்டின் முற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிபெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின்போது கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.


மாதப்பலன்



ஜனவரி 

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 05-01-2016 இரவு 12.56 மணி முதல் 08-01-2016 காலை 09.46 மணி வரை

பிப்ரவரி 

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-02-2016 காலை 09.40 மணி முதல் 04-02-2016 இரவு 07.17 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 29-02-2016 மாலை 05.37 மணி முதல் 03-03-2016 காலை 04.19 மணி வரை மற்றும் 27-03-2016 இரவு 12.22 மணி முதல் 30-03-2016 பகல் 11.48 மணி வரை.

ஏப்ரல் 

அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாயும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயத்தில் யாருக்கும் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 24-04-2016 காலை 06.24 மணி முதல் 26-04-2016 மாலை 05.53 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் சூரியனும் 8-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் கடினமான முயற்சிகள் மேற்கொண்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற டென்ஷன்களை ஏற்படுத்துவார்கள். திருமணம்போன்ற சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் நிலவும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 21-05-2016 மதியம் 12.30 மணி முதல் 23-05-2016 இரவு 11.36 மணி வரை.

ஜூன்

குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் போன்ற யாவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 17-06-2016 இரவு 07.18 மணி முதல் 20-06-2016 மாலை 06.04 மணி வரை.

ஜூலை 

ஜென்ம ராசிக்கு 3-ல்  சூரியனும், 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-07-2016 அதிகாலை 02.56 மணி முதல் 17-07-2016 மதியம் 01.44 மணி வரை.

ஆகஸ்ட் 

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த நேரிடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்களும் கைகூடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரித்து வேலைப் பளு கூடும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-08-2016 மதியம் 11.01 மணி முதல் 13-08-2016 இரவு 10.18 மணி வரை.

செப்டம்பர் 

லாப ஸ்தானமான 11-ல் கேதுவும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-09-2016 மாலை 06.52 மணி முதல் 10-09-2016 காலை 06.51 மணி வரை.

அக்டோபர் 

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகப் பலனை பெறமுடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-10-2016 அதிகாலை 01.57 மணி முதல் 07-10-2016 மதியம் 02.24 மணி வரை

நவம்பர்

அஷ்டமச் சனி நடைபெறுவதும் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-11-2016 காலை 08.15 மணி முதல் 03-11-2016 இரவு 08.45 மணி வரை மற்றும் 28-11-2016 மதியம் 02.19 மணி முதல் 01-12-2016 அதிகாலை 02.36 மணி வரை.

டிசம்பர் 

அட்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-12-2016 இரவு 08.52 மணி முதல் 28-12-2016 காலை 09.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9.

நிறம் : ஆழ்சிவப்பு.

கிழமை : செவ்வாய்.

கல் : பவளம்.        

திசை : தெற்கு. 

தெய்வம் : முருகன்.

No comments: