Friday, July 15, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் (2016-2017)



ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)


ஆடம்பர வாழ்க்கையில் அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ஜென்மராசிக்கு 8, 11-க்கு அதிபதி குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து ஜென்ம ராசியைப் பார்வைசெய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருப்பதால் லாபம் பெருகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் இருக்காது. சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், கணவன், மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக்குறைவும் உண்டாகும் என்றாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் அதிகம் உண்டாகாது. குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு சுபிட்சமாக இருப்பார்கள். கை கால் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்றவை தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை
ணவன், மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கி சேர்ப்பீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். தாராள தனவரவுகளால் எல்லா கடன்களும் குறையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெற முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு, வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதாரம் மேம்படும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

உத்தியோகம்
பணியில் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

பெண்கள்
உடல் நிலை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அதிநவீன பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சேமிப்புகளும் பெருகும்.

அரசியல்
பெயர், புகழ், பதவி யாவும் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் பெருகும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கலைஞர்கள்
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் உங்கள் திறமைக்கு தீனி போட்டதுபோல இருக்கும். கனவுகள் யாவும் நனவாகும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் கிடைக்கப்பெறும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் திறம்படச் செயல்பட முடியும். பேச்சுப்போட்டி, எழுத்துப் போட்டி போன்றவற்றில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் பல நற்பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதி குரு சஞ்சாரம் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலம் ஏற்றத்தை அளிப்பதாகவே இருக்கும். கடந்த காலப் பிரச்சினைகள் யாவும் விலகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் நட்பு கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில், 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களே உண்டாகும். சொந்த பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பணவரவுகளும் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்பதவிகளை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் 7, 12-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில், ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்கள் ஏற்றம் அளிப்பதாகவே அமையும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் விலகும். கணவன், மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் ஏற்பட்டாலும் பிரிவு உண்டாகாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி தடபுடலாக கைகூடும்.  புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலையிருக்கும். செய்யும் பணிக்கு உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு களத்திர, விரய ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அதிசாரமாக 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் லாபங்களும் விரயங்களும் மாறி மாறி வரும். பொருளாதாரநிலை சுமாராகாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கணவன், மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் தட்டிச் செல்வதால் மனநிம்மதி குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடும். 

குரு பகவான் வக்ரகதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கவுள்ளதால் இக்காலங்களில் அனுகூலமான பலன்களைப் பெற முடியாது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் இடையூறுகளே ஏற்படும். கணவன், மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். புத்திரர்களாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் சந்திரனின் நட்சத்திரமாகிய அஸ்தத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பலருக்கு பல நல்ல காரியங்கள் செய்து நல்ல பெயரை எடுப்பீர்கள். பூமி, மனை போன்றவற்றை வாங்கும் யோகமும், சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் களத்திர, விரய ஸ்தானாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில், 5-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசு வழியில் ஆதாயங்களும் தேடி வரும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்சினைகள் கூட விலகி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள்.

நட்சத்திரப்பலன்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்
ரிஷப ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தாராள தனவரவுகளால் பொருளாதார மேன்மை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

ரோகிணி
ரிஷப ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு திரிகோண ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார மேன்மைகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்
ரிஷபராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். கணவன்- மனைவிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும்- அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்:       5, 6, 8, 14, 15, 17
நிறம்      : வெண்மை, நீலம்
கிழமை: வெள்ளி, சனி
கல்: வைரம்
திசை: தென்கிழக்கு
தெய்வம்: விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால், சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமனை வழிபடுவது. அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, சமையல் பாத்திரங்கள், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது, சனியின் பீஜ மந்திரமான ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே, சனைச்சராய க்லீம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது நல்லது. ராகு 4-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 

No comments: