சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
நன்மையையும் தீமையையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு தன் சொந்த முயற்சியால் முன்னேறக் கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜென்மராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலிலிருந்த இடையூறுகள் விலகி லாபம் அமையும். பொன், பொருள் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்மராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். சனி பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உங்களுடைய அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல். டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக் கடிகள் ஏற்படும் என்றாலும் லாபம் தடைப்படாது. கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். குரு பார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் வலிமை, நல்ல உடல் ஆரோக்கியம் யாவும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்உடல்நிலை சிறப்பாக இருக்கும். எப்பொழுதாவது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். சுபிட்சமான நிலை இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
குடும்பம், பொருளாதாரநிலைகணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தன வரவுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்வார்கள். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிடைக்கப்பெற்று கடன்கள் குறையும்.
கொடுக்கல்- வாங்கல்குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் உண்டாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும்.
தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபம் பெற முடியும். வெளியூர். வெளிநாடு தொடர்புடையவற்றாலும் சாதகப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
உத்தியோகம்பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.
பெண்கள்உடல் ஆரோக்கியம் மந்தமாக இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் கிட்டும். சிலருக்கு சொந்த பூமி, மனை போன்ற வற்றை வாங்கும் யோகம் உண்டாகும். என்றாலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
அரசியல்மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர் புகழுக்குப் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் ஏற்படும். மறைமுக வருவாய்களும் பெருகும். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
விவசாயிகள்பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களும் கைக்கு வந்து சேரும்.
கலைஞர்கள்எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத் தொகைகளும் தாராளமாகக் கிடைப்பதால் பொருளாதார நிலையும் உயரும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், அதன்மூலம் அனுகூலமும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மாணவ- மாணவியர்கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்க முடியும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தடையின்றிக் கிட்டும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்குரு பகவான் உங்கள் ராசியாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் சற்றே அதிகரிக்கும் என்றாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். கல்வி பயிலுபவர்களுக்கு சற்று மந்தநிலை, ஞாபகமறதி போன்றவை உண்டாகும் என்பதால் கல்வியில் கவனத்தைச் செலுத்துவது மிகவும் நற்பலனை தரும்.
குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்குரு ஜென்ம ராசிக்கு 2-ல் தனக்கு நட்பு கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலத்தில் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தூரப் பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தாராள தன வரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரத் திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். உத்தியோகத்திலும் உயர்வடைய முடியும். தடைப்பட்ட பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.
குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் கன்னி ராசியில் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்றமான பலன்களையே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை குறையாமல் இருக்கும். சிலருக்கு பூமி, மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கல்வி பயிலுபவர்கள் சற்று முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்றே சாதக நிலை ஏற்படும். பல்வேறு பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் நற்பலன்கள் உண்டாகும்.
குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் இக்காலங்களில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்தாலும், அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீடான துலா ராசியில் சஞ்சாரம் செய்யவிருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லையென்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் அதிகமாக இருக்கும். உடல்நிலை சற்றே சோர்வடையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். உடல் நிலையில் சோர்வு, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை தோன்றி மறையும். என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். வேலையாட்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உடல்நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும், உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிக்க முடியும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்தமான நிலை இருக்கும் என்பதால் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் இக்காலங்களில் சந்திரனின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகளும் தாராளமாக அமையும். கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பொன், பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவும், தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் உண்டாகும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்பட முடியும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாராத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.
குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சிறப்பான நற்பலன்களை அடைய முடியும். சனி ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைச் செய்ய முடியும். வீடு, வாகனம் போன்றவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 27-07-2017ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை மேலும் பெருக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவதோடு உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிக்கும்.
நட்சத்திரப்பலன்
மகம்சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபங்கள் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
பூரம்சிம்ம ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் கிட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும்.
உத்திரம் 1-ஆம் பாதம்சிம்ம ராசியில் ராசியாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களும் கைகூடும். பொன், பொருள் சேரும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அபிவிருத்தி பெருகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவைஎண் : 1, 2, 3, 9, 10, 11, 12, 18நிறம் : வெள்ளை, சிவப்புகிழமை : ஞாயிறு, திங்கள்கல் : மாணிக்கம்திசை : கிழக்குதெய்வம் : சிவன்
பரிகாரம்சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும் சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ" என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஜென்மராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, அனுமனை வழிபடுவது, அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. சனியின் பீஜ மந்திரமான, ""ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே சனைச்சராய க்லிம் இம் சஹ ஸ்வாஹா"" என ஜெபிப்பது உத்தமம்.
No comments:
Post a Comment