Tuesday, July 19, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி



கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


எதிலும் நிதானமுடன் செயல்பட்டு வெற்றிக்கொடியினை நாட்டக் கூடிய ஆற்றல் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசியிலேயே குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமாக நிலையே இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் மனசஞ்சலங்கள் ஏற்படும் என்றாலும் சனி முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொதுநல காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிறைய ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து லாபத்தினைப் பெற்றுவிட கூடிய ஆற்றல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய ஊயர்வுகள் தாமதப்பட்டாலும், பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியுடன் பணிபுரிய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். 

உடல்ஆரோக்கியம்
உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு,  உடல் சோர்வு போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய காலம் என்பதால் எதிலும் விட்டுக்கொடுத்து செயல்படுவது உத்தமம். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில்  நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தடைகள் ஏற்படாது.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே இருக்கும். என்றாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

உத்தியோகம்
உத்தியோகத்தில் ஓரளவுக்கு நிம்மதியுடன் செயல்பட முடியும். சில நேரங்களில் பணியில் வீண் பழிச்சொற்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து முன்னேற முடியும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையலாம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

அரசியல்
பெயர், புகழுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெற சற்று எதிர்நீச்சல் போடவேண்டி வரும். பணவரவுகளும் சுமாராகத் தானிருக்கும். புதிய பூமி, மனை போன்றவற்றால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவீர்கள்.

கலைஞர்கள்
கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதால் படிப்பில் நாட்டம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் வெளியாட்களின் உதவிகள் எதிர்பாராமல் கிடைக்கப் பெறும். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் அவ்வளவு சிறப்பான பலன்களை அடைய முடியாது. என்றாலும் சனி 3-ஆம் வீட்டில் இருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறமுடியும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜென்ம ராசியில் லாபாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, கை கால்வலி, உடல் சோர்வு போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். சனி 3-ல், கேது 6-ல் சஞ்சாரம் செய்வதா எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடமும் அன்யோன்யமான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயர்வுக்கு வழிவகுக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு ஜென்ம ராசியில் 3, 8-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்பந்தப்பட்ட  பாதிப்புகள் உண்டாகும். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். என்றாலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பிக் கொடுக்காமலிருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற்றுவிட முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பயணங்களால் ஓரளவுக்கு நற்பலன் அமையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் அதிசாரமாக துலா ராசியில் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இக்காலங்களில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனியும் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் திருப்திகரமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். கொடுக்கல், வாங்கலும் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நற்பலனை உண்டாக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடமுடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு வக்ர கதியிலிருப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படுவதால் நல்ல வரன்கள் தட்டிப்போகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகளும், பிள்ளைகளால் மன சஞ்சலங்களும் தோன்றும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பல பெரிய மனிதர்களின் நட்புகளும் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க இருந்த உயர்வுகள் தாமதப்படும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் லாபாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தி லுள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிக்கவும். நீங்கள் நல்லதாக நினைத்துப் பேசும் வார்த்தைகளும் பிறர் மனதைப் புண்படுத்திவிடும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதும் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதும் நல்லது.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜென்ம ராசியில் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுமாரான நிலையே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் நிலையில் சோர்வு, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் சற்றே தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் சற்று கவனம் எடுத்து கொள்வது தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். 27-7-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் ராகு 11-க்கு மாறவிருப்பது நல்ல அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளுவும் குறைந்தே காணப்படும்.

நட்சத்திரப்பலன்

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்
கன்னி ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகிவிடும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.

அஸ்தம்
கன்னி ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால், உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமையுடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
கன்னி ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப்பின் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோ கஸ்தர்கள் உயர்வடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்:        4, 5, 6, 7, 8
நிறம்: பச்சை, நீலம்
கிழமை: புதன், சனி
கல்: மரகதப் பச்சை
திசை: வடக்கு
தெய்வம்: ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம் 

கன்னி ராசியில் பிறந்த நீங்கள், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்துவருவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் (வியாழக் கிழமைகளில்) மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, ஐந்து முக ருத்ராட்சம் அணிவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது, சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பது, ருத்ராபிஷேகம் செய்வது, அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிறப் பூக்களை அணிவது நல்லது. ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. 

No comments: