Sunday, July 24, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் மகரம்


மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

உழைப்பையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பண்பு கொண்ட மகர ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சனி 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எந்த வித பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகி தடபுடலாக கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். சர்ப்ப கிரகங்களான கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளை வாங்கும் யோகமும் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 5-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புளை சமாளிக்கும் அமைப்பும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பொன், பொருள் சேரும். சேமிப்பு பெருகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகியபடிதான் இருக்கும் என்றாலும், பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட கடந்தகால மருத்துவச் செலவுகள் தற்போது குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் நிம்மதிக் குறைவு ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே வீண்வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாதிருப்பதும் நற்பலனை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சேமிப்பும் பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறையும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் அமையும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்தால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகள் கைக்கு கிடைக்கப் பெறும். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

பெண்கள்
உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர பாக்கியமும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

அரசியல்
பெயர் புகழுக்கு குறை ஏற்படாது என்றாலும் உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பணவரவுகளில் திருப்தியான நிலையிருப்பதால் கட்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் தடை உண்டாகாது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனை தடையின்றிப் பெற முடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலைப் பெருக்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

கலைஞர்கள்
நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ரசிகர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். படப்பிடிப்பிற்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலர் நவீன கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். நல்ல நட்புகளாகத் தேர்ந்தெடுத்துப் பழகுவது நற்பலனைத் தரும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனைகள் செய்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும் சர்ப்பகிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்க முடியும்.  பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். புத்திரபாக்கியம் கிட்டும்.  பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் பாக்கியஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சர்ப்பகிரகங்கள் சாதகமற்று இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றினாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப்பெறும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் துலா ராசியில் ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தொழில், வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.  பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும், சனி 11-ல் இருப்பதால் பெரிய கெடுதியில்லை.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை
குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் நன்மை- தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல்நிலையும் சுறுசுறுப்புடன் அமையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும் பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கடன்கள் குறைந்து கண்ணியமான வாழ்க்கை அமையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்
குரு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளும் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.

நட்சத்திரப்பலன்

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்
மகர ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பண விஷயத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவு உண்டாகும். கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

திருவோணம்
மகர ராசியில் சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரம் உயர்வடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணமாகும். புத்திர பாக்கியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். பண விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். உத்தியோ கஸ்தர்கள் விரும்பிய உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தடைப்பட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். சேமிப்புகள் பெருகும்.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
மகர ராசியில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடபுடலாகக் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். ஆரோக்கியம் சுமாராக இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். அசையும், அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். கௌரவான நிலைகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். கடன்கள் யாவும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         5, 6, 8, 14, 15, 17
கிழமை:     புதன், சனி
திசை:     மேற்கு
நிறம்     :    நீலம், பச்சை
கல்:         நீலக்கல்
தெய்வம்:     ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருவும் சனியும் சாதமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவது. ""ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ' என்ற பீஜ மந்திரத்தைக் கூறி வருவது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது, கேது மந்திரமான ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ'' என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

No comments: