Thursday, April 6, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் தனுசு

தமிழ் புத்தாண்டு பலன்கள் 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடிய கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் ராசியாதிபதி குரு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் கேது 3ல் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் மட்டுமே நற்பலனை பெற முடியும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆண்டின் முற்பாதியில் பல்வேறு நெருக்கடிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரும் ஆவணி மாதம் 27ம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு லாபஸ்தானமான 11ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும். கடன் பிரச்சனைகள் சற்றே விலகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பாதியில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொண்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். உங்கள் ராசிக்கு 3,9ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்கள் ஆவணி 2ம் தேதி முதல் 2ல் கேது, 8ல் ராகு என சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, இரவு பயணங்கள், தூர பயணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும் பிற்பாதியில் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும்.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலை சிறுசிறு பாதிப்புகள் உஷ்ண சம்மந்தப்பட்ட கோளாறுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களை கஷ்டப்பட்டாவது முடித்து விடுவீர்கள். தேவையற்ற பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
உத்தியோகம்
பணியில் சிறுபிரச்சனைகள் குழப்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்கு பிறகு ஏற்றமிகுப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்கு பின்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைக்க முடியும். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் ஆவணி மாதத்திற்கு பிறகு நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் ஏற்படாது. லாபமும் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். ஆவணி மாதத்திற்கு பிறகு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். போட்டி, பொறாமைகள் இருக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லதுஆவணி மாதத்திற்கு பிறகு எல்லா வகையிலும் மேன்மையான பலன் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். கொடுத்த நடன்கள் தடையின்றி வசூலாகும்.
அரசியல்
அரசியல்வாதிகள் ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும் பிற்பாதியில் ஏற்றம் மிகுந்த நற்பலனை அடைவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் கடின போராட்டத்திற்கு பின்பு நற்பலனை அடைவீர்கள்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல், காய் மற்றும் பழ வகைகளின் சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருக்கேற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டு.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆவணி மாதத்திற்குப் பிறகு எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் நடித்து கொடுப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக அடையும்வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் ஆவணி மாதத்திற்கு பிறகு கைகூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிடைக்கும்குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும்.
மாணவ மாணவியர்
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்ற நிலையை அடைய முடியும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு துறைகளிலும் திறம்பட செயல்படுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் ; 1,2,3,9
நிறம் ; மஞ்சள், பச்சை
கிழமை ; திங்கள், வியாழன்
கல் ; புஷ்ப ராகம்
திசை ; வடகிழக்கு
தெய்வம் ; தட்சிணாமூர்த்தி


No comments: