Friday, July 21, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



கடகம்  
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்


எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்கும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 2-9-2017முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் 19-12-2017முதல் சனி 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதாரநிலையும் சிறப்பாகவே இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும். 

குரு 11-8-2018முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப் பிடிக்கும் யோகம் அமையும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திரபாக்கியம் அமையும். வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். 

பணம் கொடுக்கல்- வாங்கலில் நற்பலனை அடையமுடியும். கொடுத்த கடன்களைத் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வேலைப்பளுவும் குறையும். அரசியல்வாதிகள் மக்களின் அமோக ஆதரவினைப் பெறுவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். கலைஞர்களுக்கு விரும்பிய கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெறுவதால் உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல அமையும். மாணவர்கள் கல்விரீதியாக எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற்று கல்வியில் முன்னேற்றமடைவார்கள்.

உடல் ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். அஜீரணக் கோளாறு, தூக்கமின்மை, மன அமைதிக்குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும், வீண்விரயங்களும் உண்டாகும். மனைவிக்கு வயிற்றுக் கோளாறு, மாதவிடாய்ப் பிரச்சினைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல் அசதியும், அலைச்சலும் அதிகரிக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது மனஉளைச்சலைக் குறைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை 

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களால் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத வீண்செலவுகளும் அதிகரிக்கும். பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தையில் பிற்பாதியில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் தொடக்கத்தில் வீண்விரயம் ஏற்பட்டாலும் பின்பு எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றுவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்பட்டால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கமுடியும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். 

தொழில், வியாபாரம்  

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிட்டாலும் எதையும் எதிர்கொண்டு வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். நவீன கருவிகளையும் வாங்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் பொட்டாவது அனுகூலப்பலனைப் பெற்றுவிடுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றத்தால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக்கிட்டும். பிறர்செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள்.  உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வதமூலம் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். 

பெண்கள் 

உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதாரநிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது சிறப்பு. கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்.  தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். 

அரசியல்

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சற்று கடின முயற்சியினை மேற்கொள்ள வேண்டி இருக்கும். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அமைச்சர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதாரநிலையில் மறைமுக வருவாய்கள் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்

போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன்மூலம் அரசுவழியில்  மானியத் தொகையைப் பெறமுடியும்.

கலைஞர்கள்  

இருக்கும் வாய்ப்புகளை சரியாக முடித்துக்கொடுக்க சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை பாதிப்படையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவேண்டிய பாக்கித்தொகைகளில் சற்று இழுபறியான நிலை உண்டாகும் என்றாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். 

மாணவ- மாணவியர்

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.  சில தடைகளுக்குப்பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவினைப் பெற்றுவிடுவீர்கள். நல்ல நண்பர்களின் சகவாசம் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விளையாட்டுப்போட்டிகளில் சற்று கவனமாக செயல்பட்டால் பரிசுகளைத் தட்டிச்செல்ல முடியும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகுபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது 5,10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. குரு 2-9-2017முதல் ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக்குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருந்தால் வீண்பிரச் சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு பெருகுவதால் மகிழ்ச்சி ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 19-12-2017முதல் சனி ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறமுடியும். குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபடுவது, குருவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உடலநிலையில் பாதிப்புகள் ஏற்படும். பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நற்பலனைத் தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன்மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் -மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் சில மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் நிம்மதிக்குறைவு ஏற்படும். பணம் கொடுக்கல் -வாங்கலில் சிந்தித்துச்செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைப்பளுவும் குறையும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சூரியனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் சனி 6-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 4-10-2018முதல் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதாரரீதியான தடைகள் விலகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புத்திரவழியிலும் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகமும், பூர்வீகச் சொத்துகள்மூலம் அனுகூலமும் கிட்டும். எடுக்கும் காரியங்களை திறம்படச்செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது சூரியனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் சற்றுக் குறையும். கூட்டாளிகள் பகை உணர்வு மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குருவும், சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சில தடையின்றிக் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு வேலைப் பளுவை குறைக்க உதவும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றப்பலன்களை அடையலாம். கொடுக்கல் -வாங்கல் நல்லநிலையில் நடைபெறும். எல்லாவற்றிலும் சிறப்பான லாபங்களை அடையமுடியும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது, தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, 9 முக ருத்ராட்சம் அணிவது நல்லது. 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வேங்கடாசலபதி

No comments: