Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் கும்பம்




2018 புத்தாண்டுப் பலன்கள் கும்பம்  

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார் உறவினர்களின் உபசரணையோ உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப்பகிரகமான ராகு  ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் யாவும் குறையும். வரும் 11.10.2018-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 10-ஆம் வீட்டுக்குச் செல்ல இருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பது, தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றி செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கும் உடல் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சனி 11-ல் சஞ்சரிப்பதாலும் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கௌரமான உயர்பதவிகள், பலரை வழி நடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். செய்யும் பணியாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்பவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபமும் பெருகும்.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டில் தன காரகன் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழும், செல்வம் செல்வாக்கும் உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவிற்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தன வரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பு மூலம் நற்பலனை அடைவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.

மாதப் பலன்கள்

ஜனவரி: உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் குரு, 11-ல் சூரியன்- சனி சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். விநாயகரை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்: 07-01-2018 காலை 07.15 மணி முதல் 09-01-2018 மதியம் 02.23 மணி வரை.  

பிப்ரவரி: உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் குரு, 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை. 

மார்ச்: இம்மாதம் 9-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதாலும், 7-ம் தேதி முதல் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக்கொள்ள முடியும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். பணவரவுகளில் மிகச் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருக்கும். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.  

சந்திராஷ்டமம்: 03-03-2018 அதிகாலை 03.49 மணி முதல் 05-03-2018 காலை 08.13 மணி வரை 30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை. 

ஏப்ரல்: ஜென்ம ராசிக்கு 11-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத  உதவிகளும் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.  

மே: மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், 11-ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-05-2018 அதிகாலை 01.52 மணி முதல் 26-05-2018 காலை 08.16 மணி வரை.  

ஜூன்: ஜென்ம ராசிக்கு 12-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் என்றாலும் 6-ல் ராகு, 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், சோர்வு, மந்தநிலை போன்றவையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பதால் கடன்களைக் குறைக்க முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை. 

ஜூலை: இம்மாதம் 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவீர்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 17-07-2018 மதியம் 03.09 மணி முதல் 19-07-2018 இரவு 07.56 மணி வரை.   

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன்- ராகு, 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-08-2018 அதிகாலை 12.41 மணி முதல் 16-08-2018 அதிகாலை 03.55 மணி வரை.

செப்டம்பர்: மாதக் கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்தாலும், 9-ல் குரு, சுக்கிரன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.  

அக்டோபர்: உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் 9-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். 11-ஆம் தேதி முதல் குரு 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-10-2018 இரவு 08.52 மணி முதல் 09-10-2018 இரவு 11.28 மணி வரை. 

நவம்பர்: மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும், 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.  குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-11-2018 அதிகாலை 04.27 மணி முதல் 06-11-2018 காலை 08.12 மணி வரை. 

டிசம்பர்: மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும், 9-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை மற்றும் 28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5, 6, 7, 8, கிழமை - வெள்ளி, சனி, திசை  - மேற்கு, நிறம் - வெள்ளை, நீலம், கல்   - நீலக்கல், தெய்வம் - ஐயப்பன்.

No comments: