Thursday, December 14, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள் விருச்சிகம்




2018 புத்தாண்டுப் பலன்கள்   விருச்சிகம் 

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

ந்தவொரு காரியத்தையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதும், 11-10-2018 முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எதிலும் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூட தாமதநிலை ஏற்படும்.   தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபங்கள் கிட்டும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாதபடி இடையூறுகளை சந்திப்பீர்கள். 3-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியம்

ஏழரைச்சனி தொடருவதாலும் குரு சாதகமற்று சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு, கை, கால்களில் அசதி, எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட இயலாத நிலை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். மனைவி பிள்ளைகளுக்கும் எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  மனநிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். 

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுசரித்துச் செல்ல மாட்டார்கள். இந்த வருடம் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும் கேது முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட தாமதநிலை ஏற்படும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்றாலும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிட முடியும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மன நிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள் மீதிருந்த தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையிலேயே நடைபெறும் என்றாலும் கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்து செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள உதவும்.

பெண்களுக்கு

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். சில நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்று கூடும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டு முழுவதும் ஏழரைச்சனி தொடருவதாலும் குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு தகாரறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்கள் உங்களுக்கு கிடைத்து விடும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தங்களுக்கு தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. பத்திரிக்கைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியாத நிலை போன்றவை உண்டாகக் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களிலும் நிதானம் தேவை.

மாதப் பலன்கள்

ஜனவரி: ஜென்ம ராசிக்கு 12-ல் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3-ல் கேது, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-01-2018 காலை 04.27 மணி முதல் 03-01-2018 அதிகாலை 03.33 மணி வரை மற்றும் 28-01-2018 மதியம் 02.58 மணி முதல் 30-01-2018 மதியம் 03.00 மணி வரை. 

பிப்ரவரி: இம்மாதம் 3-ல் கேது, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றலாம். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களைப் பெற முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-02-2018 இரவு 10.45 மணி முதல் 27-02-2018 அதிகாலை 12.32 மணி வரை. 

மார்ச்: ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக் கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை. 

ஏப்ரல்: உங்கள் ராசிக்கு 3-ல் கேது, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.  

மே: ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன் 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை  அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்-.

சந்திராஷ்டமம்: 17-05-2018 மாலை 05.42 மணி முதல் 19-05-2018 மாலை 06.54 மணி வரை. 

ஜூன்: ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் கேது, செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தைப் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனைத் தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துகளால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப் பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களைச் தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018 அதிகாலை 03.23 மணி வரை. 

ஜூலை: உங்களுக்கு ஏழரைச்சனி தொடருவதும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 11-07-2018 மதியம் 02.03 மணி முதல் 13-07-2018 மதியம் 01.43 மணி வரை.  

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழிலில் ஓரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 07-08-2018 இரவு 11.50 மணி முதல் 10-08-2018 அதிகாலை 12.26 மணி வரை.  

செப்டம்பர்: இம்மாதம் மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும், 3-ல் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-09-2018 காலை 07.32 மணி முதல் 06-09-2018 காலை 09.46 மணி வரை.  

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு ஆகும். வரும் 11-ஆம் தேதி முதல் குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-10-2018 மதியம் 01.18 மணி முதல் 03-10-2018 மாலை 04.46 மணி வரை மற்றும் 28-10-2018 மாலை 06.51 மணி முதல் 30-10-2018 இரவு 10.11 மணி வரை. 

நவம்பர்: ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழிலில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினைப் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்நேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-11-2018 அதிகாலை 02.19 மணி முதல் 27-11-2018 அதிகாலை 04.17 மணி வரை. 

டிசம்பர்: ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் நிலை சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வரவேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். சிலருக்கு அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9, நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை  - செவ்வாய், வியாழன், திசை - தெற்கு, கல் - பவளம், தெய்வம் - முருகன்

No comments: