Thursday, April 12, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 - மேஷம்



 விளம்பி வருட பலன்கள் 2018-2019 - மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
                எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்பட கூடிய குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் எதிலும் லாபங்களை அடையக் கூடிய யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்பட்டு அனுகூலமானப் பலனைப் ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 
                சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலனை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும்.
                உங்கள் ராசிக்கு 4, 10-ல் ராகு, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் ( 11.10.2018 ) குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், முன்னேற்றத்திற்கு இடையூறுகளும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் தேக ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலை சற்றே சோர்வடையும். எடுக்கும் காரியங்களில் சிறப்பான அனுகூலங்களை பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கைகள் அமையும். புரட்டாசி மாதத்திற்கு பின் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான முன்னேற்றங்களை அடைய முடியும். கொடுத்த தொகைகளும் தடையின்றி வசூலாகும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும், புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் கடனுதவிகள் கிட்டும்.
உத்தியோகம்
உங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகைகள் தடையின்றி வந்து சேரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்றாலும் சற்றே அலைச்சலும் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
பெண்கள்
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார், உறவினர்களின்  ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிக்கலாம்.
அரசியல்
எல்லா வகையிலும் முன்னேற்றங்களையும், பதவி உயர்வுகளையும் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மேடை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளை பொருளுக்கேற்ற  விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். விளை நிலங்களை வாங்க முடியும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் ஓரளவுக்கு தடையின்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் நல்ல விளம்பரம் கிட்டும். படபிடிப்புகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனது அலைபாயக் கூடிய காலம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.

சித்திரை
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 9, 10-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், தன ஸ்தானாதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சனைகள் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் மேலும் பல நன்மைகளை அடைய முடியும்.
வைகாசி 
குருபகவான் 7-ல் சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சாரம் செய்வதும், நல்ல அமைப்பு என்பதால் இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொன், பொருள், சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர் பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஆனி
மாதக்கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும்.  திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தினமும் விநாயகரை வழிபடவும்.
ஆடி
உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடன்கள் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ஆவணி
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றமை பலப்படும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சனிபகவானை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களை பெற முடியும்.
புரட்டாசி
ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், 7-ல் குரு, சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபடவும்.
ஐப்பசி
ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 7-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலமான பலனை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
கார்த்திகை
களத்திர ஸ்தானமான 7-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.
மார்கழி
ஜென்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
தை
பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், 10-ல் மாத கோளான சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவில் இருந்த தடைகள் விலகி பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
மாசி
பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், சனி, 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
பங்குனி 
ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். புத்திர வழியில் மன சஞ்சலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சனைகள் ஏற்படகூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்       -              1,2,3,9
நிறம்   -               ஆழ்சிவப்பு
கிழமை  -           செவ்வாய்
கல்         -              பவளம்
திசை   -               தெற்கு
தெய்வம் -         முருகன்

No comments: