Thursday, April 12, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 சிம்மம்


விளம்பி வருட பலன்கள் 2018-2019
சிம்மம்     மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களை எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டியிருக்கும். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்னே நற்பலன் கிடைக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிட்டும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
கேது பகவான் ருண ரோகஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத உயர்வுகளையும், லாபங்களையும் பெற முடியும். வேலையாட்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். வேலைபளு அதிகரிக்கும் என்பதால் பணியில் கவனமுடன் நடந்து கொள்வது, உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், சோர்வு, மந்தநிலை போன்றவை தோன்றும். சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த வருடம் முழுவதும் தனக்காரகன் குருபகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறுசி-று பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும், அஜீரண கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றியும் ஓரளவுக்கு லாபமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சுமாரான நிலையில் இருக்கும். இதுவரை இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக உங்களுக்கு அமையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.
உத்தியோகம்
இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது, உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.
பெண்கள்
கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.
அரசியல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும் என்பதால் அவர்களின் ஆதரவினைப் பெறுவீர்கள். பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மேடை பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சி பணிக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
கலைஞர்கள்
தேவையற்ற எதிர்ப்புகள் மறைவதால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். வரவேண்டிய பணத்தொகைகள் கைக்கு கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நிலவும். பள்ளி கல்லூரி வாயிலாக இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். புதிய நண்பர்களின் நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

சித்திரை
ராசியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடனிருப்பது உத்தமம். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது. புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது ராசியாதிபதி சூரியன் 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பது  நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் சாதகமாக அமைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ஆனி
உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்யவது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தின் மகிழ்ச்சி சிறப்பாகவே இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களை பெற முடியும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.
ஆடி 
ஜென்ம ராசியில் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டானாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
ஆவணி 
தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரதோஷ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
புரட்டாசி 
ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்  குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ஐப்பசி 
ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்லது நடக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
கார்த்திகை
ராசியாதிபதி சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 7-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். பணம் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி 
ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை பெற முடியும். 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.
தை
ஜென்ம ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் எதிலும் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடை விலகி நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது
மாசி 
சுக ஸ்தானமான 4-ல் குரு சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சூரியன் 7-ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றர் உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நற்பலனை தரும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, சஞ்சரிப்பதும் ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  - 1,2,3,9
நிறம்  - வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல்   - மாணிக்கம்
திசை  - கிழக்கு
தெய்வம் - சிவன்

No comments: