Thursday, April 12, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 மிதுனம்


விளம்பி வருட பலன்கள் 2018-2019
மிதுனம்       மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
                மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!  உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் முற்பாதியில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாகவும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். பணயங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களை பெற முடியும். சிலருக்கு அசையா சொத்துகளால் அனுகூலம், வண்டி வாகன சேர்க்கை போன்ற யாவும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சற்று தாமபட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும்.  புதிய  வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
                சனிபகவான் 7-ல் சஞ்சரிப்பதால் கண்ட சனி நடைபெறுவதும், ஜென்ம ராசிக்கு 2, 8-ல் ராகு, கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கண்ட சனி நடைபெற்றாலும் சனிபகவான் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார்.
                வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற விரயங்களை தவிர்க்க முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புரட்டாசி மாதம் முதல் சில எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் அற்புதமாக அமையும். சுப காரியங்கள் நடைபெறும். புரட்டாசி மாதம் முதல் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்களில் நல்ல லாபம் கிட்டும். பணபுழக்கம் சிறப்பாக இருக்கும். புரட்டாசி மாதம் முதல் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் முன்னேற்றமும் பெருகும். பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி உயர்வடையும். புரட்டாசி மாதம் முதல் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். வேலையாட்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். உங்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். புரட்டாசி மாதம் முதல் எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும்.
பெண்கள்
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க முடியும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.
அரசியல்
எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து ஏற்றம் பெற முடியும். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியுமென்றாலும், கட்சிக்காக செய்யும் செலவுகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புரட்டாசி மாதம் முதல் உடனிருப்பவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காமல் சிந்தித்து செயல்பட்டால் பதவிகளை சிறந்த முறையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான லாபம் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புரட்டாசி மாதம் முதல் புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
கலைஞர்கள்
பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். புரட்டாசி மாதம் முதல் முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வி பயிலுபவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆசிரியர்களையும் பெரியவர்களையும் மதித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

சித்திரை
ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.
வைகாசி
ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 11-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும்.  அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.
ஆனி
ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் மருத்துவ செலவுகளுக்குப் பின் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். முருகனை வழிபடுவது உத்தமம்.
ஆடி
ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை ¬ம்மனை வழிபடுவது நல்லது.
ஆவணி
இம்மாதம் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும்.
புரட்டாசி 
இம்மாதம் உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மேலோங்கும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஐப்பசி 
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
கார்த்திகை 
இம்மாதம் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
மார்கழி 
குடும்ப ஸ்தானமான 2-ல் ராகு, 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
தை
ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 6-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது உத்தமம்.
மாசி 
இம்மாதம்  9-ல் சூரியன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு அதிகரிக்கும்.  தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
பங்குனி
ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும்.  தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்  - 5,6,8,
நிறம்  - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல்   - மரகதம்
திசை  - வடக்கு
தெய்வம் - விஷ்ணு

No comments: