Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 விருச்சிகம்




விருச்சிகம்  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் உங்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அளிப்பதாகவே இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாதசனி தொடருகிறது. இதுமட்டுமின்றி ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் குரு உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்த்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதால் தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது.
கேது பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் வீண் செலவுகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த பணத்தொகைகளை வசூலிப்பதில் இழுபறியான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான முன்னேற்றத்ததை அடைவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் தொழிளாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியம்;
தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவற்றால், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் அவ்வப்போது சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை;
கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களால் கடன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலப் பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எந்தவொரு புதிய முயற்சியிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் போன்றவை யாவும் உண்டாகும் என்றாலும் நண்பர்கள் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெற முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக எதிர்பார்க்கும் கடனுதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். 
உத்தியோகம்
மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். நிறைய நேரம் உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் தடை தாமதங்களுக்குப் பின்பே கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகளும் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும்.
அரசியல்
கட்சி பணிக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய நேரிடும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியை பெற முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவிகள் தாமதப்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதமாக கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெற முடியாமல் போகும்.
கலைஞர்கள்
கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நிறைய பிரச்சினைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளுக்கு தீனி போடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்களை பிறர் தட்டி செல்வதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். பொருளாதார நிலை எற்ற இறக்கமாக இருக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூட முடியும். நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

சித்திரை
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 19-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். விண் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ஆனி
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளித்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி வீண் அலைச்சல்கள் ஏற்படும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.
ஆடி
முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே நற்பலன் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி
இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபாடு செய்யவும்.
புரட்டாசி 
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் குறைத்து கண்ணியமான வாழ்க்கை அமையும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க உள்ளதால் ஒரளவுக்கு நற்பலன் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
ஐப்பசி 
ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் சிறுசிறு தடைகளுக்குப்பின் வந்து சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை 
ஜென்ம ராசியில் குரு, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி 
ஜென்ம ராசியில் குரு, 2-ல் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழிலில் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
தை 
தன ஸ்தானமான 2-ல் புதன், 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
மாசி 
ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 3-ல் கேது, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் சற்று கவனம் இருப்பது நல்லது. குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
பங்குனி 
இம்மாதம் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்    - 1,2,3,9,
நிறம்    - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை  - செவ்வாய், வியாழன்
திசை   - தெற்கு
கல்     - பவளம்
தெய்வம் - முருகன்


No comments: