Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 மகரம்




விளம்பி வருட பலன்கள் 2018-2019
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுகிறது. ஆண்டின் முற்பாதியில் ஆண்டு கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம் செய்பவர்களும் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் புரட்டாசி மாதம் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் ஒரளவுக்கு சாதகமானப் பலன்களை அடைய முடியும். குடும்பத்தில் இருக்க கூடிய மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி அளிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர் கொண்டாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு எதிலும் மேன்மையான பலன்களை பெற முடியும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களை பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் சாதகப்பலன்கள் கிடைக்கும்.
உத்தியோகம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெற முடியும். பணியில் திறம்பட செயல்படுவதால் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.  வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும்.
பெண்கள்
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை.
அரசியல்
ஆண்டின் தொடக்கத்தில் பலவித சோதனைகளை சந்திக்க நேர்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது மிகவும் நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, நவீன கருவிகள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். கடன்கள் குறையும்.
கலைஞர்கள்
தேவையற்ற பிரச்சினைகளால் பெயர், புகழ் மங்க கூடிய சூழ்நிலைகள் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு நல்ல வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். பொருளாதாரநிலை சிறப்படையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகி உடல் நலம் பாதிப்படையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் கடும் முயற்சிகளை மேற்கொள்வது நல்வது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.

சித்திரை 
உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.
வைகாசி 
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. முருகப் பெருமானை வழிபடவும்.
ஆனி 
உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு  என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்-- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.
ஆடி 
ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி
ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளுவும் குறையும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
புரட்டாசி 
ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் முன்னேற்றங்கள் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
ஐப்பசி 
ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை 
இம்மாதம் ராசிக்கு 11-ல் குரு, சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி 
ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
தை 
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
மாசி 
தன ஸ்தானமான 2-ல் புதன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி 
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தினமும் வினாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்  - 5,6,7,8
கிழமை - சனி, புதன்
திசை  - மேற்கு
நிறம்  - நீலம், பச்சை
கல்   - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்


No comments: