Friday, April 13, 2018

விளம்பி வருட பலன்கள் 2018-2019 தனுசு


விளம்பி வருட பலன்கள் 2018-2019
தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எதையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து அறியும் திறமை கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அழகான புத்திர பாக்கியம் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும்.
சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருகிறது. இதனால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் தான் வெற்றியினை அடைய முடியும். இது மட்டுமின்றி 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதும், வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் கடன்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய தேவையற்ற வாக்கு வாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு அதிக மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குருபகவான் ஆண்டின் பிற்பாதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதியாகி தனக்கு நட்பு வீடான செவ்வாய் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் தோன்றினாலும், சில மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்களால் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கை கூடும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் சாதகப்பலனைப் பெறலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. 
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலை இருக்கும். பெரிய அளவில் லாபத்தைப் பெறமுடியா விட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. புரட்டாசி மாதம் முதல் சற்று பணவரவுகளில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. மற்றவர்களிடம் அவப்பெயர் ஏற்படும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக பொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 
தொழில் வியாபாரம்
இந்த ஆண்டின் முற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களாலும் ஒரளவுக்கு நற்பலனை பெறமுடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடி வந்து லாபம் தரும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடன் இருக்கும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் லாபம் குறையும். 
உத்தியோகம்
ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைபளு குறையும். புரட்டாசி மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பெண்கள்
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் புரட்டாசி மாதத்திற்குப் பின் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
அரசியல்
ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பிறரின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு செவி சாய்க்காமல், தங்கள் காரியங்களில் கருத்துடன் செயல்படுவது நல்லது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு நீங்கள் கண்டிப்பாக மேடைப் பேச்சுகளிலும், மற்றவர்களிடமும் பேசும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரும் தவறான செய்திகளால் மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். வாய்கால் வரப்பு பிரச்சினைகளால் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும்.
கலைஞர்கள்
கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, சரியான நேரத்தில் படபிடிப்பில் கலந்து கொள்வது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் சற்றே அலைச்சல் அதனால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும்.
மாணவ மாணவியர்
கல்வி பயிலுபவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஞாபகமறதி, கவனக்குறைவு போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மனநிம்மதி அளிப்பதாக அமையும். பயணங்களில் கவனம் தேவை. தகுதியற்ற நண்பர்களின் சேர்க்கையானது உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.

சித்திரை 
ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன் 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை உண்டாகும். பொன், பொருள், வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.
ஆனி
ஜென்ம ராசிக்கு 7-ல் புதன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது
ஆடி 
ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் சிலவற்றை பெற முடியும். பல பொது நலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.
ஆவணி 
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான  நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
புரட்டாசி 
ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. 
ஐப்பசி 
ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மூலம் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர் தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
கார்த்திகை 
இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்கு 2-ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.
மார்கழி 
இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
தை
குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மாசி
ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன், சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை தரும் அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  - 1,2,3,9
கிழமை - வியாழன், திங்கள்,
திசை  -  வடகிழக்கு,
நிறம்  - மஞ்சள், சிகப்பு,
கல்   - புஷ்ப ராகம்,
தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: