Thursday, April 12, 2018

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்


கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடத்தின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றக்கூடிய குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக உயர்வான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் சிறப்பான மணவாழ்க்கை அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், இருக்கும் வீட்டை புதுப்பிக்கும் அமைப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகி பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இது மட்டுமின்றி ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சிறப்பான நற்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இடம் விட்டு இடம் மாறக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி 4-ல் சஞ்சரித்து உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் ராசியாதி புதனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். வரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. குரு மாற்றத்திற்கு பிறகு தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள், பணவரவில் தடைகள், குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் போன்றவை ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். ஆண்டின் முற்பாதியில் சாதகமானப் பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டு சில மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமாக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மன நிம்மதி குறையும். பயணங்களாலும் அலைச்சல் டென்ஷன் உடல் சோர்வு உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் ஆண்டின் முற்பாதியில் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் வாழ்வில் நற்பலனை அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டு முற்பாதியில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் நற்பலன் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பிறரை நம்பி பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் முன்னெச்சரிக்கை தேவை. கொடுத்த கடனை வசூலிப்பதில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தொழில் வியாபாரம்
எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் அபிவிருத்தி குறையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.
உத்தியோகம்
எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் சற்றே அலைச்சல் டென்ஷன் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை சற்றுக் குறைத்து கொள்ளலாம்.
பெண்கள்
மணவயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்ற பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
அரசியல்
மக்களின் ஆதரவுகளை பெற அவர்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சிரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிகாக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் பதவிகளை காப்பாற்றி கொள்ள முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். புதிய நவீன முறைகளை பயன்படுத்தும் முயற்சிகளில் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வேலையாட்களின் உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். அரசு வழியில் கடனுதவி கிட்டும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் இந்த ஆண்டு முற்பாதியில் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பயணங்களின் போது கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.

சித்திரை
ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பிரதோஷ கால வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
வைகாசி 
ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 9-ல் சூரியன், 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் வரவுகள் மகிழ்ச்சியை  அளிக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
ஆனி
ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் ராகு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் இக்காலங்களில் பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதனால் அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி 
இம்மாதம் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் சூரியன், புதன், ராகு சஞ்சாரம் அற்புதமான அமைப்பு என்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தன வரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். பொருளாதார மேன்மைகளால் கடன்கள் நிவர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளையும் வாங்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். ஆஞ்நேயரை வழிபடுவது நல்லது.
ஆவணி
ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் புதன், ராகு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவையற்ற நெருக்கடிகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். அலைச்சல்கள் அதிகரித்தாலும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
புரட்டாசி 
இம்மாதம் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி 
ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எதிர்பார்க்கும் நற்பலன்களை சிறுசிறு தடைகளுக்குப் பின் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை 
இம்மாதம் உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
மார்கழி 
ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலை இருக்கும். பிள்ளைகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிவ பெருமானை வழிபபாடு செய்வது நல்லது.
தை
இம்மாதம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
மாசி
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும்.  குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாகக் செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் கேது 4-ல் ராகு 10-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
பங்குனி
ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகளும் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்    -  5,6,7,8
நிறம்    -  பச்சை, நீலம்
கிழமை  - புதன், சனி
கல்     -  மரகத பச்சை
திசை   - வடக்கு
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: