Friday, December 14, 2018

வார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை


வார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை  
மார்கழி 1 முதல் 7 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சந்தி



செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி
சூரிய குரு புதன்
சுக்கி

கிரக மாற்றம் 
16-12-2018 தனுசு சூரியன் காலை 09.09 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                  15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.
மேஷம்             18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.
ரிஷபம்              20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.
மிதுனம்            22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் இதுவரை 8-ல் சஞ்சரித்த சூரியன் 16-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வத்துடன் படிப்பார்கள். அம்மன் வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -18, 19, 22.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        16, 17, 20, 21.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் ராகு, 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்றே தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனையும் குரு பகவானையும் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -- 16, 17, 18, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 21.     

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 6-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஓரளவிற்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்த வரை வீண் பேச்சுகளை தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        20, 21, 22.
சந்திராஷ்டமம் -         15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகி வலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடும் மேற்கொள்ளலாம்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17, 22.
சந்திராஷ்டமம் -         18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாக இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். விநாயகர் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17, 18, 19.
சந்திராஷ்டமம் -         20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் -         22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        20, 21, 22.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வளமும் கூடும். தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களும் அனுலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுக கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரையும் முருக கடவுளையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17, 22.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 9-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கடன்களும் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும், உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை, சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விநாயக பெருமானையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால் செல்வ நிலை பெருகும்.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு, புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம் செல்வாக்கு மேலோங்கும் நிலை, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை உண்டானாலும் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17, 20, 21.

No comments: