Friday, May 31, 2019

2019-ஜுன் மாத ராசிப்பலன்


2019-ஜுன் மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சுக்கி
சூரிய புதன்
ராகு செவ்

திருக்கணித கிரக நிலை




கேது சனி (வ)
குரு (வ)
 


கிரக   மாற்றம்
02-06-2019 மிதுனத்தில் புதன் அதிகாலை 00.17 மணிக்கு
04-06-2019 ரிஷபத்தில் சுக்கிரன் பகல் 11.20 மணிக்கு
15-06-2019 மிதுனத்தில் சூரியன் மாலை 05.38 மணிக்கு
21-06-2019 கடகத்தில் புதன் அதிகாலை 02.27 மணிக்கு
22-06-2019 கடகத்தில் செவ்வாய் இரவு 11.23 மணிக்கு
29-06-2019 மிதுனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.34 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.
பரிகாரம் -  வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்           -15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் வரும் 22-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம்.
பரிகாரம் -  சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்           -17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, வீண் விரயங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாகவும் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம் -  சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிகவசங்கள் படிப்பதாலும் நன்மைகள் உண்டாகும். ஒருமுறை திருநள்ளாரு சென்று வருவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்           -19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
பரிகாரம் -  செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்வதாலும், கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதாலும் சிறப்பான பலன்களை அடையலாம். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்           -22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் ராசியதிபதி சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.
பரிகாரம் - குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்           -24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 9,10-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணதேவைகளை சமாளிக்க முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் மருத்துவ செலவு ஏற்படும்.
பரிகாரம் -  சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வது, கருப்பு வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்           -30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை மற்றும் 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே இம்மாதம் முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு நெருக்கடிகளை தரும் அமைப்பு என்றாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம் -  விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது நல்லது. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் இனிய செய்து இல்லம் தேடி வரும்.
சந்திராஷ்டமம்           -02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வீண் வாக்குவாதங்கள் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது, உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்களும் பண விரயங்களும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் -  பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம்           -04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம் -  சனி பகவானை வழிபடுவாலும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்           -06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். தாராள தனவரவுகள் உண்டாகி தேவைகள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறையும். குரு 11-ல் இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும்.
பரிகாரம் -  வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி வழிபாடு செய்வதாலும் தேவி துதிப்பாடல்களை படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்           -08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக பயணத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் விரும்புவோர்களுக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
பரிகாரம் - சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.
சந்திராஷ்டமம்           -10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி, சகல விதத்திலும் ஏற்றங்கள் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். சிறப்பான பண வரவால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.
சந்திராஷ்டமம்           -12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

06.06.2019 வைகாசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

13.06.2019 வைகாசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

14.06.2019 வைகாசி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

20.06.2019 ஆனி 05 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

27.06.2019 ஆனி 12 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

28.06.2019 ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

No comments: