Saturday, June 15, 2019

வார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை


வார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை 
ஆனி 1 முதல் 7 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




சூரிய சுக்கி
செவ் ராகு புதன்

திருக்கணித கிரக நிலை


 

கேது சனி(வ)
குரு(வ)
சந்தி



கிரக மாற்றம்
21-06-2019 கடகத்தில் புதன் அதிகாலை 02.26 மணிக்கு
22-06-2019 கடகத்தில் செவ்வாய் இரவு 11.22 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம்  15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.
தனுசு       17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.
மகரம்             19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.
கும்பம்      22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.06.2019 ஆனி 05 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த உயர்வை பெற்று விட முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் மங்கள செய்திகள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 22.
சந்திராஷ்டமம் -   15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் திருப்பதிகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  16, 22.
சந்திராஷ்டமம் -   17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதாலும் 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் சனிக் கவசம் படிப்பதாலும் மனகவலைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  16, 17, 18, 19.      
சந்திராஷ்டமம் -   19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் செய்து வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -- 17, 18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் -   22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே. உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தொல்லைகள் நீங்கும். செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் -  20, 21, 22.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த லாபம் காண முடியும். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். நவகிரகங்களில் குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் -  16, 17, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நெருங்கியவர்களின் ஆதரவால் சிறப்பான வளர்ச்சியினை அடைவீர்கள். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். வெள்ளியன்று மகா லட்சுமி தேவியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரமாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்படகூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். ராகு காலத்தில் துர்கையம்மன் வழிபாடு செய்வதும், பௌர்ணமியன்று சிவ வழிபாடு செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  16, 17, 20, 21.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதும் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். திருமண சுப காரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சஷ்டியன்று முருக கடவுளை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19, 22.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைவரையும் அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின உழைப்பு தேவை. சனி பகவானையும் விநாயகரையும் வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  16, 17, 20, 21.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பது லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சனி, கேது சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  18, 19, 22.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 9-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துகளால் வீண் அலைச்சல் இருந்தாலும் ஓரளவு அனுகூலப்பலன் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பௌர்ணமியன்று சிவ வழிபாடு செய்வதும், கிரிவலம் சென்று வருவதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  17, 18, 19, 20, 21.



No comments: