Saturday, October 12, 2019

கன்னி - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


கன்னி - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020
குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


கன்னி                                உத்திரம் 2,3,4ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதங்கள்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியும் தன காரகனுமான குரு பகவான் இதுநாள் வரை 3-ல் சஞ்சரித்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்த உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள மாற்றதால் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 முடிய சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் கடந்த காலங்களில் இருந்த முன்னேற்ற தடை விலகி எடுக்கும் முயற்சியில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு சொகுசு வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ராகு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருந்தாலும் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் சாதகப்பலன் ஏற்படும்.
குரு பார்வை 8, 10, 12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும் நிலை, சமுக நலப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். அசையா சொத்துக்களால் இருந்த வம்பு வழக்குகள் விலகி நிம்மதி ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்குத்தான் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை, சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படும். சுகவாழ்வில் இடையூறுகள் உண்டாகும். மனைவி, பிள்ளைகளால், ஒரளவுக்கு மன நிம்மதி ஏற்படும். பயணங்களால் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை   
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்து கடன்களின்றி சமாளித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
கமிஷன் ஏஜென்ஸி 
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சலை எதிர்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்டி செல்ல நேர்ந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பயனடைவது நல்லது. கூட்டாளிகளையும் உடன் பணிபுரியும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது மிகவும் உத்தமம்.
உத்தியோகம்
பணியில் ஓரளவுக்கு நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடையும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் வேலைபளுவை குறைக்க உதவும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அரசியல்
எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும் என்றாலும் பணவரவுகளில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தோடு சேர்ந்திருக்க முடியாத நிலை, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் மகசூல் கிடைத்தாலும் அதற்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும். லாபமும் சுமாராகவே இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் உடல் நிலையானது மந்தமாகவே இருக்கும். மருத்துவ செலவுகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பதால் அவர்கள் மூலம் சற்று ஆதாயப் பலனை பெற முடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்தநிலை ஞாபகமறதி போன்றவை ஏற்படுவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் குறையும். உடல்நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் குரு ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சனி- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் சில வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் சுப செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்களுக்கு கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியையும், விநாயகப் பெருமானையும் வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் நட்சத்திரத்தில் குரு பகவான் 4-ம் வீட்டில் சஞ்சரிப்பதால்  பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களை பெறுவீர்கள். பண வரவுகளில் நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். அம்மன் வழிபாடு துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது, துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
ஜென்ம ராசிக்கு 4-ல் குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். சர்ப கிரகமான கேது 3-ல் வரும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்களில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். அனுமனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு 4-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சர்ப கிரகமான கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். ஆடை, ஆபரணம் சேரும். 5-ல் சனி சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது உபயோகிப்பது நல்லது.
23.09.2020 முடிய சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8                      நிறம் - பச்சை, நீலம்   கிழமை - புதன், சனி
கல் -  மரகத பச்சை     திசை - வடக்கு               தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: