Saturday, October 12, 2019

விருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


விருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




விருச்சிகம்     விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, இதுநாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலிருந்த இடையூறுகள் விலகி நல்ல லாபம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். 
சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 8-லும், கேது 2-லும் சஞ்சரிப்பதாலும் தற்போது சனி பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி நடப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். குரு பார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் வலிமை நல்ல உடல் ஆரோக்கியம் கொடுக்கும்.
திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இதுநாள் வரை நடைபெற்ற ஏழரைச் சனி முழுமையாக முடிவதால் சகலவிதத்திலும் மேன்மை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள நெருக்கடிகள் விலகி லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். அவ்வப்போது கை கால்களில் வலி, உடல்சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். நெருங்கியவர்களுக்கு இருந்த உடல் நிலை  பாதிப்புகள் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை 
உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் தனகாரகன் குருபகவான் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். சர்ப்ப கிரக சஞ்சாரத்தால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும், ஆடை ஆபரணம் சேர்க்கைகளும் உண்டாகும்.
கமிஷன்- ஏஜென்ஸி 
கமிஷன் ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் துறையிலிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி பல மனிதர்களின் தொடர்பையும், நட்பையும் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வருவதால் லாபங்கள்  பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் தடையில்லாமல் லாபம் கிட்டும்.
உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட பதவி உயர்வுகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள்  கிடைத்து குடும்பத்துடன் இனைவார்கள். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
அரசியல்
அரசியல் வாதிகளுக்கு ஏற்றத்தை அளிக்கும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் தேடி வரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பல பெரிய மனிதர்களின் தொடர்பையும் மக்களின் ஆதரவையும் அமோகமாகப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் தாராளமாகவே இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கால்நடைகளால் லாபத்தை பெற முடியும். கூலியாட்களால் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் சமாளித்து அனைத்து வேலையையும் எளிதில் முடித்துவிடுவீர்கள்.
பெண்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். சிலருக்கு பூமி மனை யோகமும். ஆடை ஆபரண சேர்க்கைகளும் தாராளமாகவே இருக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். ஜென்ம ராசிக்கு 2-ல் சனி- கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் நலத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் சுபிட்சங்கள் அதிகரிக்கும். திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உடன்பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது. 

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபங்கள் கிடைக்கும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக 3-ல் சஞ்சரிக்க இருப்பது சுமாரான அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். சர்ப கிரகமான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சர்ப கிரகமான கேது 2-லும், ராகு 8-லும் சஞ்சரிப்பதாலும் முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின்பு அனுகூலப்பலன் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். குருபகவானையும் ராகு காலங்களில் துர்க்கையம்மனையும் வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசிக்கு 2-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 3-ல் சனி சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். சர்ப கிரகமான ராகு 7-லும் கேது ஜென்ம ராசியிலும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு 2-ல் குரு பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது எல்லாம் நடக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சர்ப கிரகமான ராகு 7-லும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 8-ல் ராகு 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                      நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம்,                  திசை - தெற்கு                                தெய்வம் - முருகன்

No comments: