Friday, October 11, 2019

கடகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


கடகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.



ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


கடகம்                                புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் வம்பு, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். முன் கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களும் எதிரிகளாக செயல்படுவதால் மன நிம்மதி குறையும். குரு பார்வை 2, 10, 12ஆம் வீடுகளுக்கு இருப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். தற்போது 6-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார் உறவினர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்  
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகவே செய்து முடிப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் மனநிம்மதியானது குறையக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மனைவி பிள்ளைகள் வழியில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை   
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தனகாரகன் குருபகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது.
கமிஷன் ஏஜென்ஸி 
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்போர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபாரத்தில் சில போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ளும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவுவதால் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உயர் பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் உண்டாகும்.
அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் பொருளாதார நிலையில் இடையூறுகள் உண்டாகும் என்றாலும் மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்க சற்று தாமதமாகும். கால்நடைகளால் லாபங்கள் கிடைத்தாலும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் குடும்பத்தில் சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்ப்பது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும், சேமிப்பு குறையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டு. விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். உல்லாச பயணங்களால் அனுகூலங்கள் உண்டு.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் குரு பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குரு பகவானுக்கு பரிகாரங்களை செய்து வருவதன் மூலம் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
ஜென்ம ராசிக்கு 6-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதால் சுப செலவுகள் ஏற்படும். சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிலருக்கு புத்திர வழியில் சிறு மனசஞ்சலம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
உங்கள் ராசிக்கு 6-ல் குரு பகவான் தன ஸ்தானாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். ஆறாம் வீட்டில் கேது சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 7-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். குருபகவான் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். மாணவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். அம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. 7-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடித்து உற்றார் உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து விட முடியும். கூட்டாளிகளிமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியான சுக்கிரன் நட்சத்திரத்தில் குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சந்தித்தாலும் வரும் 23-09-2020 முதல் சர்ப்பகிரகமான ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்றப் பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்-.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் சற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது நல்லது.

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. திருக்கணிதப்படி 24.01.2020 முதல் கண்டசனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது வெங்கடாசலபதி வழிபாடு மேற்கொள்வது நல்லது. 23.09.2020 முடிய சர்பகிரகமான ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9      நிறம் - வெள்ளை, சிவப்பு        கிழமை - திங்கள், வியாழன்
கல் -  முத்து           திசை - வடகிழக்கு                      தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: