Saturday, October 12, 2019

மீனம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


மீனம்  - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


மீனம்                  பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்த குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். இது செய்யும் தொழில் உத்தியோக ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் ரீதியாக அலைச்சல் டென்ஷன், வேலையாட்களால் நிம்மதி குறைவு உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும், தேவையற்ற அவபெயர் ஏற்படலாம். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது.
தற்போது 10-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளை சந்தித்தாலும் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற்று விட முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் நிதானமாக செயல்படுவது நல்லது, எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன்கள் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 4-லும், கேது 10-லும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்-.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடி இருக்கும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் வேலைபளு அதிகரிப்பதால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளும், வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.
குடும்பம் பொருளாதார நிலை   
பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மிக சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சுபசெலவு ஏற்படும். சுகவாழ்விற்கு இடையூறு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
கமிஷன் ஏஜென்ஸி 
பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்பு தான் திரும்ப பெற முடியும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் அரசு வழி உதவிகளும் சற்று தாமதமாகும். தொழிலில் ஏற்படக்கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். குறித்த நேரத்தில் ஆடர்களை சப்ளை செய்ய இடையூறு ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சாதகமான பலன் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நவீன கருவிகள் பழுதடைவதால் வீண் விரயங்களும் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் வேலைபளு அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மன உளைச்சலை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பணவிஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
விவசாயிகள்
விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த கடனுதவிகளும் கிடைக்க தாமதம் ஆகும். குறித்த நேரத்திற்கு மழை பெய்யாததால் விளைச்சல் குறையும். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் மருத்துவ செலவினை எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும் என்பதால் சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்பானது சற்று தாமதமாகத் தான் அமையும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்ப்பதும் நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பல வெற்றிகளைப் பெறுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் 10-ல் கேது நட்சத்திரமான மூலத்தில் சனி- கேது சேர்க்கை பெற்று  சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். அதிக அலைச்சலால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்படும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட இடையூறு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் இருந்தால் ஏற்றத்தை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ளவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குரு பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
உங்கள் ராசிக்கு 10-ல் குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக எதிர் நீச்சல் போட வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு வரும் 24.01.2020 முதல் திருக்கணிதப்படி சனி 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அசையும் அசையா சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்யாதிருப்பது நல்லது. 4-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிக்கனமாக இருப்பது நல்லது. பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
ஜென்ம ராசிக்கு 10-ல் குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சில நெருக்கடிகளை சந்தித்தாலும் பொருளாதார மேன்மை உண்டாகும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி எளிதில் அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் லாபங்கள் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் 10-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களையும் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறு உண்டாகும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சனி 11-ல் சஞ்சரிப்பதாலும், சர்ப கிரகமான ராகு 3-ல் வரும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
ஜென்ம ராசிக்கு 10-ல் குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலை நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். குரு பகவானை வழிபடுவது நல்லது.

பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.
உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9             கிழமை - வியாழன், ஞாயிறு        திசை - வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம்          நிறம் - மஞ்சள், சிவப்பு             தெய்வம் -  தட்சிணாமூர்த்தி



No comments: