Monday, January 20, 2020

மேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023

மேஷம் - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவன¤க்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்த சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். ஜீவன ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். பண வரவுகள் சற்று சாதகமாக இருந்தாலும் அதிகம் உழைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். அதிகப்படியான அலைச்சலால் நிம்மதி குறையும். புதிய முயற்சிகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் சற்று குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்தி குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எவ்வாளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களால் வேலைபளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குருபகவான் 05-11-2019 முதல் 20-11-2020 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 20-11-2021 முதல் 13-04-2022 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். திருமண போன்ற சுப காரியங்கள் கைகூடும். தொழில் உத்தியோகத்தில் வலமான பலனை பெற முடியும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது 3, 9-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய 2, 8-ல் சஞ்சரிக்க இருப்பது அதன் பின் 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற ஒற்றுமை குறைவு ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றமான பலனை அடைய முடியும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளிப்பீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் மன நிம்மதி குறையும். எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஒரளவுக்கு அனுகூலங்களும் உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான நற்பலனை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திளிப்பதாக அமையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் அடைய முடியும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் உதவி உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
தொழில், வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் தாமதமாகும். இதனால் அபிவிருத்தி சற்று குறையும் என்றாலும் பொருளாதார நிலையில் சற்று சாதகமாக இருக்கும். வேலையாட்கள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வாங்கிய வங்கி கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முழு மனநிறைவற்ற நிலை உண்டாகும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உடல் நிலையில் உண்டாகக் கூடிய சிறுசிறு பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் செய்யும் கெடு பிடிகளால் மனநிலையில் நிம்மதிக் குறைவு ஏற்படும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த நிலுவை தொகைகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடனிருபவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல்கள் சுமாராக இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசு வழியில் வரவிருந்த மானிய உதவிகள் தாமதப்படும். சேமிப்பு குறையும். பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும்
கலைஞர்கள்
வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாக பார்த்து கொள்வது நல்லது. நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். அதிக அலைச்சலால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.
பெண்கள்
உடல்நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.
மாணவ- மாணவியர்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். அரசு வழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் கவனம் தேவை. பயணங்களின் போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் நிதானமுடன் இருக்கவும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் மகர ராசியில் உங்கள் ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் சிறிது நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குரு 9-லும், ராகு 3-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உடல்நிலை அற்புதமாக அமைந்து எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத வகையில் பண வரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டுத் தொடர்புகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் அமையும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனமான இருப்பது நல்லது. சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும் என்றாலும் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்தித்தாலும் தேக்கமடையாமல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்கள் டென்ஷன் மற்றும் அசையா சொத்து வகையில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் அதிபதி சூரியன் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதும், ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் முடிந்தவரை தேவையற்ற பயணங்கள் தவிர்ப்பதும் நேரத்திற்கு உணவு உண்பதும் நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வாழ்வில் முன்னேற்றி விடுவீர்கள். தனகாரகன் குரு 9-ஆம் வீட்டில் 20-11-2020 முடிய சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானமாக செயல்படுவது பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க உதவும். துர்க்கையம்மன் வழிபாடு, அஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் மகர ராசியில் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக 06-04-2021 முதல் 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது மூலம் வீண் விரயங்கள் குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம். அசையா சொத்து வகையில் சுப செலவுகள் ஏற்படும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். ஆஞ்சநேயர் வழிபாடு, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சர்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான நிலை இருந்தாலும் வரும் 20-11-2021 முதல் தன காரகன் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் லாபமும் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் நெருக்கடிகள் குறையும். ஆஞ்சநேயரையும் சர்பேஸ்வரையும் வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் 10-ல் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைந்து விடுவீர்கள். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். சாய கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் சற்று அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களும் வேலைபளுவும் குறையும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் அதிசாரமாக ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் எளிதில் கிடைக்கும். சக நண்பர்களிடம் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். வேலையாட்களால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்படையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களை பெறலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் சிறுசிறு தடைக்கு பின் உயர்வுகளை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். செல்வம் செல்வாக்கு பெருகும். வீடு மனை வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் 12-ல் குரு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது, 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் பண வரவை காட்டிலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லதுஉத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைப்படும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் நிலவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு                                 கிழமை - செவ்வாய்
கல் - பவளம்               திசை - தெற்கு                           தெய்வம் - முருகன்

No comments: