Thursday, January 23, 2020

கும்ப ராசி - திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


கும்ப ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறி தலையிடாத நற்குணமும் கொண்ட கும்பராசி நேயர்களே, இதுநாள் வரை லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரித்து வந்த உங்கள் ராசியாதிபதி சனி திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை விரய ஸ்தானமான 12-ல் மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயசனி தொடங்கி உள்ளது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி ராசியாதிபதி என்பதால் அதிக கெடுபலன்களை ஏற்படுத்த மாட்டார். உடல்நிலையில் சோர்வு, கை, கால் அசதி போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் செயல்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை தவிர்க்க முடியும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். குடும்பத்தில் உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் மன நிம்மதியற்ற நிலை உண்டாகும். நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டிவரும்.
தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் கொடுக்கும். கடன்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது முடிந்த வரை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும், உடன் பணிபுரியும் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தாமத நிலை உண்டாவதோடு தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருப்பதாலும் பொருளாதார நிலை அனுகூலமாக இருப்பதாலும் மன நிம்மதி உண்டாகும்.
     சனி விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவானும் வரும் 20-11-2020 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை தன ஸ்தானமான  2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிலும் சற்று அனுகூலமான பலனை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து நெருக்கடிகள் குறையும். திருமண போன்ற சுப காரிய முயற்சிகளில் இருந்த தடை விலகி எளிதில் கைகூடும். சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் உத்தியோக ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச்சனி நடக்கும் இக்காலத்தில் சர்ப கிரகமான கேது லாப ஸ்தானத்தில் 23-09-2020 வரை சஞ்சரிப்பதும், ராகு வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் பலம் உண்டாகும்.

உடல்ஆரோக்கியம் 
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் அன்றாட பணிகளில் தெம்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற நெருக்கடிகள் தோன்றுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது-. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் ஒரளவுக்கு லாபம் காண முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். வீண் விரயங்கள் உண்டாகும். உங்களுக்கு ஏற்படக் கூடிய வீண் வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவினாலும் தேக்கமின்றி லாபம் காணமுடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கூட்டாளிகளிடமும், உடன்பணிபுரியும் தொழிலாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதுடன் கூடுதல் பொறுப்புகளும் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். பணயில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தானிருக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும்.
அரசியல்
கட்சியில் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் பேச்சுத் திறமையால் எதையும் சாதித்து விடுவீர்கள். எதிலும் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது உத்தமம். மக்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். உடனிருப்பவர்களால் பெயர், புகழுக்கு, பங்கம் ஏற்படலாம். மேடைப் பேச்சுகளில் நிதானத்தைக் கையாள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் கிடைக்க சிரமம் உண்டாகும். நீர் வரத்து குறைவதால் பயிர் விளைச்சல் சற்று பாதிக்கும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். உங்களிள் உடல் அசதியால் சரிவர பணிகளை செய்து முடிக்க முடியாது. எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போனாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே முன்னேறி விடுவீர்கள். இரவு பகலாக உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சற்று சோர்வடையும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். போட்டிகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று இழுபறிக்குப்பின் கிடைக்கும். சேமிப்பு குறையும்.
பெண்கள்
பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். ஆடை ஆபரணங்களும், நவீன பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். உடல் அசதி வயிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறலாம். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனம் தேவை. தேவையற்ற நட்புகள் உங்களை வேறு பாதைக்கு இழுத்துச் செல்லும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட்டு மன உளைச்சல்கள் ஏற்படும் என்றாலும் குரு- கேது இனைந்து லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். 5-ல் கேது சஞ்சரிப்பதால் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். துர்கையம்மனை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
உங்கள் ராசிக்கு 12-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். சர்ப்ப கிரகமான கேது 11-ல் இருப்பதால் பண கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சுபகாரிய முயற்சிகளில் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருட் தேக்கங்கள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். நீண்டநாட்களாக எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நனவாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிட்டும். நண்பர்களின் ஆதரவுகள் நற்பலனை உண்டாக்கும். கடன்கள் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும்.  துர்க்கையம்மனை வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் செயல்படுவது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குரு 20-11-2020 முடிய 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின முயற்சிக்கு பின்பு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல் சந்திரன் நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் ஒரு புறம் பண வரவுகள் இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதால் லாபம் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு சற்று சாதகமாக இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். ஜென்ம ராசியில் குரு, ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.  தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
உங்கள் ராசிக்கு 12-ல் சனிபகவான் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யலாம் என்ற எண்ணம் இருந்தால் அதனை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவு சற்று சாதகமாக இருக்கும். குரு பகவான் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
உங்கள் ராசிக்கு 12-ல் சனிபகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். இருப்பதை அனுபவிக்க இடையூறு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். அசையா சொத்து வகையில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மன நிம்மதி ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற உடல் சோர்வு, உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு உண்டாகும். குரு 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் அனுகூலப் பலனைத் தரும். உத்தியோகத்தில் இருந்த வேலைபளு குறையும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி மேல் வெற்றியை பெறுவீர்கள். சனிக்கு பரிகாரமாக ஆஞ்சநேயர் வழிபாடு அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கைகள் உண்டாகும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமைந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றியை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் 12-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் குரு 2-ல், ராகு 3-ல் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதால் அனுகூலமான பலனை அடைவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் தேடி வரும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். மறைமுக எதிரிகளை வெல்ல கூடிய பலமும் வலிமையும் ஏற்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து ஏற்றமிகு பலனை அடைவீர்கள். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பதும் நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது, நவகிரகத்தில் கேதுவை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8              கிழமை - வெள்ளி, சனி                              திசை - மேற்கு
கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                   தெய்வம் - ஐயப்பன்

No comments: