Thursday, January 23, 2020

துலா ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


துலா ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படகூடிய ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 3-ல் சஞ்சரித்த சனி வரும் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குகிறது. இதனால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். இருப்பதை அனுப்பிக்க இடையூறு சுகவாழ்வு பாதிப்படையும். உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதாலும் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோன ஸ்தானமான 4, 5-க்கு சனி அதிபதியாகி மிக சிறந்த யோககாரகன் என்பதாலும் அதிக கெடுதலை ஏற்படுத்த மாட்டார். உடல் நிலையில் சோர்வு, மந்தநிலை, கை, கால் மூட்டுகளில் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.
      அர்த்தாஷ்டமச் சனியால் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் இக்காலங்களில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வரும் 20-11-2020 வரை 3-ஆம் வீட்டிலும், 20-11-2020 முதல் 20-11-2021 வரை 4-ஆம் வீட்டிலும், 13-04-2022 முதல் 22-04-2023 வரை 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறிது சுனக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் (கும்ப ராசியில்) 06-04-2021 முதல் 20-06-2021 வரையும் அதன் பின்பு 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சாரம் செய்ய உள்ள காலத்தில் பொருளாதார ரீதியாக அனுகூலப் பலனை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு இடையூறுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
தற்போது 3, 9-ல் சஞ்ரிக்கும் கேது, ராகு வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய 2-ல் கேது, 8-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதும், அதன் பின் 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதும் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படுத்தும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும்.

உடல்ஆரோக்கியம் 
உடல்நிலையில் சற்று மந்த நிலை, சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் கெடுதிகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் சற்றே குறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயங்களில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம்.
குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதாரநிலை ஒரளவுக்கு திருப்தியளிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. சுபகாரிய முயற்சிகள் தடைகளுடன் நிறைவேறும். வீடு, வண்டி, வாகனம் மூலம் சுப செலவு உண்டாகும். கடன்கள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபத்தில் சில தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரம் 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து லாபம் அடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் அதிகப்படியான அலைச்சலால் நிம்மதி குறைவு, உடல் அசதி ஏற்படும்.
உத்தியோகம் 
பதவி உயர்வுகளால் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற முடியும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மற்றவர்கள் வேலையை நீங்கள் எடுத்து செய்ய வேண்டி இருக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
அரசியல்
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தலைவர்களின் ஆதரவுகள் கிடைத்தாலும் உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளை தொடர்ந்து பெற முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசையும், அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதிகப்படியாக உழைக்க வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் சற்றே அனுகூலம் உண்டாகும்.
பெண்கள்
தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு பணியில் வேலைபளு அதிகரிக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி என்பதால் அசையா சொத்துகளால் வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சர்ப்ப கிரகமான கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். 3-ல் உள்ள குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உடல் நிலைகளில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் கேது 3-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையுடன் கிடைக்கும். அன்றாட பணியில் சில இடையூறுகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலும் உண்டாகும். பெருமாள் வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் 4-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடப்பதாலும் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. வரும் 20-11-2020 முதல் குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மந்தமான நிலைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். உறவினர்கள் உதவி கிடைத்து மன நிம்மதி உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் அஷ்டலட்சுமி வழிபாடு செய்வதும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் குரு சேர்க்கை பெற்று திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். அசையா சொத்து வகையில் செலவுகள், சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து லாபம் காண முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலையை எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் இருக்கும் சிக்கல்கள் சற்று குறைந்து முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை சந்திப்பர். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நனவாகும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்கள் பெயர், புகழ் உயரும். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் குரு பகவான் வரும் 20-11-2021 முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் சிறப்பாக இருந்து மன நிம்மதி ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபம் அடைய முடியும். சுபகாரிய முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து லாபம் காண முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. விநாயகரை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 5-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடபுடலாக கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது அஷ்டலட்சுமியை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
உங்கள் ராசிக்கு சனிபகவான் அதிசாரமாக பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் டென்ஷன் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சாதகமாக இருக்கும். ஜென்ம ராசியில் கேது, குரு 6-ல், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மன நிம்மதி குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறு உண்டாகும். தொழிலாளர்களிடம் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்ல நேரிடும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சிறிது அலைச்சல் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 6-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 12-07-2022 முதல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும். கடந்த கால பிரச்சினைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடமுடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, குரு 6-ல், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்தால் மட்டுமே அனுகூலமானப் பலனை பெற முடியும். பொருளாதார நிலையில் சற்று ஏற்ற இறக்கமான நிலையை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் முடிந்த வரை பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது நற்பலனை உண்டாக்கும். குரு ப்ரீதி, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 4,5,6,7,8                                நிறம் - வெள்ளை, பச்சை                கிழமை - வெள்ளி, புதன்
கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு           தெய்வம் - லக்ஷ்மி

No comments: