துலாம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள்,
சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை
கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இதுநாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த
கேது, ராகு தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020
முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப
கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க
உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்
அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால்
ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்
ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது
இருப்பது உத்தமம்.
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தஷ்டமச்சனி
நடைபெறுவதால் பொருளாதார ரீதியாக தேக்க நிலை, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். செய்யும்
தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை
அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள்
பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணி புரியும்
இடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாது இருப்பது
நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு குரு 4-ஆம் வீட்டில் வரும் 20-11-2020 முதல் 06-04-2021
வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில்
பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை (அதிசாரமாக கும்ப ராசியில்)
மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க
இருக்கும் காலத்தில் பண வரவுகளில் இருந்த தேக்க நிலை விலகி அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராத
வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களில்
நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு
புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக
சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள்
குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்க கூடிய வாய்ப்புகள்
அமையும். கடன்களும் ஒரளவுக்கு குறையும். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றங்களை
அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ள பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற
அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய
ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட
செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில்
கவனமுடன் இருப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்
கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும்
அசையா சொத்துக்கள் வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ
தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து
நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.
உத்தியோகம்
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு
சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர்
அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில்
தலையீடு செய்யாது இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்
பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும்
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமராக இருக்கும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால்
அலைச்சலும் அதன் மூலம் வீண் செலவுகளும் ஏற்படும் என்பதால் முடிந்த வரை தூர பயணங்களை
தவிர்த்து விடுவது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும்.
கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று தடைகள்
உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளால் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். அசையா
சொத்துக்களை பராமரிப்பதற்காக வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால்
மன நிம்மதி ஏற்படும்.
அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகள் சுமாராக
இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
பயணங்களால் அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது
நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில் கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில்
இருந்து தப்பிக்கலாம்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளை பொருளுக்கு சுமாரான
விலையே கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு படவேண்டி இருக்கும். தக்க
நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட
வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
முதலீடு விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது
மூலம் எதையும் எதிர் கொள்ள முடியும்.
கலைஞர்கள்
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு
வாழ்வு சுமாராக அமையும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும்.
பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச்
செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை
நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
பெண்கள்
கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் வழி உறவினர்களிடம்
பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவை விட செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை
குறைத்து கொள்வது நல்லது. மாணவ மாணவியர்
கல்வியில் கவனமாக செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு
ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி
இருக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு
மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை
உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை
உங்கள் ராசிக்கு ராகு 8-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 2-ல்
கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சாரம் செய்வதும்
சாதமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில்
நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சியில்
அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம்.
சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும். அசையும் அசையா
சொத்துக்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கிடைக்க
வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால்
சற்று மந்த நிலையை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில
கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக
இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள்
வீண் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம்.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் கேட்டை
நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால்
மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து
கொள்வது நல்லது. வரும் 06-04-2021 முதல் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிக்க இருப்பதால்
பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம்
கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின்
அனுகூலப்பலன் அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது
உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப்
பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும்.
நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள்
தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள்
கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 8-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 2-ல் அனுஷ
நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், 4-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்நீச்சல்
போட்டாவது எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை
உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு அதிசாரமாக 14-09-2021 முடிய
5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். உங்களுக்கு வரவுக்கு மீறிய
செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள்
கிடைக்கப் பெற்று எந்த பிரச்சினையும் சமாளித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை
தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால்
எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய
வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே
சரியாகி விடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால்
எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை
ஜென்ம ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல்
அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் சனி 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால்
குடும்பத்தில் நிம்மதி குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்றாலும் உங்கள்
ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2021 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால்
பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள்
சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும்
முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் நல்லது நடந்து மகிழ்ச்சி ஏற்படும்.
புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த
பாதிப்புகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெண்கள் சிக்கனமாக
செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில்
நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்
பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து
உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும்
சாதிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை
உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாதஷ்டம சனி நடப்பதும், ஜென்ம
ராசிக்கு ராகு 8-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 2-ல் விசாக நட்சத்திரத்திலும்
சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு ஆகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்
என்பதால் பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன்
செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.
தன காரகன் குரு 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும்.
கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப்
பெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில்
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம். எந்தவொரு
காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில்
திறம்பட செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8
நிறம் - வெள்ளை,
பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை - தென் கிழக்கு
கல் - வைரம்
தெய்வம் - லட்சுமி
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால்
சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி
கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது,
சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம்
கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள்,
கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம்
ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு
அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும்
வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை
பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்,
அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம்
செய்வது நல்லது.
No comments:
Post a Comment