Thursday, November 12, 2020

வார ராசிப்பலன் - நவம்பர் 15 முதல் 21 வரை 2020

 

வார ராசிப்பலன் - நவம்பர் 15 முதல் 21 வரை 2020 

ஜப்பசி 30 முதல் கார்த்திகை 6 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்

 

ராகு

 

 

 

 

 சனி  

 

 

குரு 

 

    கேது 

சூரிய புதன்  சந்தி

   சுக்கி

 

 

 

 

 

 

 

 

 

கிரக மாற்றம்

16-11-2020 விருச்சிகத்தில் சூரியன் காலை 06.54 மணிக்கு

17-11-2020 துலாத்தில் சுக்கிரன் அதிகாலை 01.02 மணிக்கு

20-11-2020 மகரத்தில் குரு பகல் 01.23 மணிக்கு

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

துலாம்         13-11-2020 பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.

விருச்சிகம் 15-11-2020 பகல் 11.58 மணி முதல் 17-11-2020 பகல் 12.20 மணி வரை.

தனுசு            17-11-2020 பகல் 12.20 மணி முதல் 19-11-2020 பகல் 03.30 மணி வரை.

மகரம்          19-11-2020 பகல் 03.30 மணி முதல் 21-11-2020 இரவு 10.25 மணி வரை.

 

இவ்வாரத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் அலைச்சல், தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும் என்றாலும் புதன் 7-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21.

சந்திராஷ்டமம் - 15-11-2020 பகல் 11.58 மணி முதல் 17-11-2020 பகல் 12.20 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 9-ல் சனி சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வரும் 20-ஆம் தேதி ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் குரு 9-ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைந்து தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16.

சந்திராஷ்டமம் - 17-11-2020 பகல் 12.20 மணி முதல் 19-11-2020 பகல் 03.30 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதும் 16-ஆம் தேதி முதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18.

சந்திராஷ்டமம் - 19-11-2020 பகல் 03.30 மணி முதல் 21-11-2020 இரவு 10.25 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் சுகஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். வரும் 20-ஆம் தேதி ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் குரு 7-ஆம் வீட்டிற்கு செல்வதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் வருகின்ற நாட்களில் எளிதில் கைகூடும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20, 21.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகள் உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். முருக வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 15, 20, 21.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதும், வரும் 16-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை மற்றவர்களை நம்பி கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - - 15, 16, 17.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி அடைவீர்கள். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை சற்று உயரும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது, நாக சதுர்த்தி நாளில் சர்ப கிரகங்களை வழிபட்டால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வளமான பலன்களை அடையும் யோகம் உங்களுக்கு உண்டு. எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமை கேற்ப வேலை வாய்ப்பு அமையும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 20, 21.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். வரும் 20-ஆம் தேதி ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் ராசியதிபதி குரு 2-ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்கள் வாழ்வில் வருகின்ற நாட்களில் மறுமலர்ச்சி ஏற்படும். உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றம், தொழில் வியாபாரத்தில் லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். சனி பகவானை வழிபடுவது, சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 15, 18, 19.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் புதன், சுக்கிரன், 11-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு தற்போது இருக்கும் சிக்கல்கள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. சனி பகவான் வழிபாடு மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 20, 21.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். நாக சதுர்த்தி நாளில் சர்ப கிரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 19.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டு. வரும் 20-ஆம் தேதி ஏற்படும் குரு பெயர்ச்சி மூலம் ராசியதிபதி குரு பகவான் 11-ஆம் வீட்டிற்கு செல்வதால் தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல லாபம் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். முருக வழிபாடும் விஷ்ணு பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.

சந்திராஷ்டமம் -13-11-2020 பகல் 12.30 மணி முதல் 15-11-2020 பகல் 11.58 மணி வரை.

 

 

No comments: