Thursday, November 5, 2020

தனுசு - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

தனுசு  - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும் நிலை, வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பேச்சில் நிதானமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபமடைய முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருட் தேக்கங்கள் விலகி தொழில் வளர்ச்சி ஏற்பட்டு உங்களது லாபம் அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வழி ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக முயற்சி  ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் நல கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். எல்லாப் பணிகளிலும் புதுத் தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கடந்த கால கவலைகள் மறைந்து மனதில் உற்சாகம் பிறக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்த கால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து சென்றால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் விலகி  நிம்மதியாக இருக்க முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகளால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். வம்பு வழக்குகள் விலகி சாதகப் பலனை உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து பல்வேறு வகையில் வளர்ச்சிகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் இது நாள் வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலன் ஏற்படும். மறைமுக எதிர்ப்புக்களும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் பண வரவுகளும் ஆடர்களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் எதிர்பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும். புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.

பெண்கள்

உடல் நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். அழகான புத்திர பாக்கியம் பெற்றெடுப்பர். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். பொதுவாக பேச்சில் பொறுமையுடன் இருந்தால் பல்வேறு வெற்றிகளை அடைய முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை வாங்கும் யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகைகள் கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக் கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

 

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 06-01-2021

குருபகவான் சூரியன் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறக்கூடிய காலம் என்பதால் கடந்த கால கசப்புகள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் பெற முடியும். கடந்த கால வேலைபளு குறைந்து பணியில் உங்கள் திறமைகள் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் மூலமாக லாபங்கள் பெருகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

குரு பகவான் திருவோண நட்சத்திரத்தில் 07-01-2021 முதல் 04-03-2021

குருபகவான் தன ஸ்தானமான 2-ல் திருவோண நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். ராகு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன பொருட் சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். பூர்வீக சொத்துக்களால் கூடுதல் லாபம் உண்டாகும். வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள். கடந்த கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற வாய்ப்புகளை பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை அடைவார்கள்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-03-2021 முதல் 05-04-2021

உங்கள் ராசியதிபதி குருபகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடன்கள் அனைத்தும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும் நிலை, திறமைகளை வெளிபடுத்தும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வாழ்க்கை தரம் உயரும்.

குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் 06-04-2021 முதல் 20-06-2021

உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரித்து ஏழரைச் சனி நடப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது பணவிஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் ஏற்படும் எந்த சிக்கல்களையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும் வாய்ப்பு, பெரிய மனிதர்களின் உதவியால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த தேவையற்ற செலவுகள் படிப்படியாகக் குறையும். உற்றார் உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பொதுவாக கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 18-10-2021 முதல் 20-11-2021

குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உடல் நிலையில் புதுத்தெம்பும், உற்சாகமும் பிறக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொதுவாக பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலைகள் விலகி வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடைய முடியும்.

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவதாலும், சனிப்ரீதியாக அனுமனையும் விநாயகரையும் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதியையும் வழிபட்டால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, எள் தீபமேற்றுவது, கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது உத்தமம்.

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - மஞ்சள், பச்சை                      கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                                தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: