பிலவ வருட பலன்கள் 2021-2022 மேஷம்
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எதையும் வெளிப்படையாக பேசும்
குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு என்
மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஆண்டு கோள் என
வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் பிரதான காலம் சஞ்சாரம்
செய்வதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் நிறைவேறும்.
இது வரை தடைப்பட்ட சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும்.
மணமானவர்களுக்கு ஆழகிய புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு, வண்டி,
வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபங்கள் கிடைக்கும்.
எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை அடைய முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு
கிடைத்து அதன் மூலம் உங்களின் கடந்த கால பிரச்சினைகள் குறையும்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும்
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எந்த ஒரு
செயல் செய்வது என்றாலும் சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது. வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது, எதிலும்
நீங்கள் முன் நின்று செயல்படுவது மூலம் போட்ட முதலீட்டை எடுத்து லாபம் காண முடியும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.
அதிகாரிகளிடம் பேசும் போது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு இவ்வாண்டு சர்ப்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால்
பேச்சில் பொறுமையுடன் இருப்பது, குடும்பத்தில் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண்
கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது
நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. வெளியூர்
மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
இவ்£வாண்டில் குரு 11-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு சகலவிதத்திலும் நற்பலனை
ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம்
தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில்
சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை
ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஆரோக்கியத்தில்
அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் உடல் நலத்திலும் சற்று
கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக
கை கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைய முடியும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க
கூடிய யோகம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும் காலம் என்பதால் அனுசரித்து
செல்வது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக
நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும்.
உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள் என்பதால் கவனமாக செயல்பட்டால்
அனுகூலங்களை அடைய முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபங்கள்
கிடைக்கும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகள்
சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின்
ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
செய்யும் பணியில் வேலைபளு இருந்தாலும் நல்ல நிலை ஏற்படும். எதிர்பார்க்கும்
பதவிகள் கிடைக்க உடன் இருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவு
மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று
வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் பேச்சிற்கு
மதிப்பும் மரியாதை இருக்கும் என்றாலும் உடன் இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது
நல்லது. கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம்
ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சிறு இடையூறுகளுடன் அனுகூலங்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில்
கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை
வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளிகள் மூலம் சில நேரங்களில் நிம்மதி குறைவு ஏற்படும்.
சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள்.
கலைஞர்கள்
பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.
முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக்
கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மன
சஞ்சலங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள்
கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி உறவில் வீண் பிரச்சினைகள்
ஏற்படும். உறவினர்கள் செய்யும் செயலால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் அனுசரித்து
செல்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
படிப்பு
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப்
பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி
செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்கும். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கைகூடும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள்.
வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த
உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
சிவ வழிபாடு செய்யவும்.
வைகாசி
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும்,
11-ல் குரு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள்
சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத்
தரம் உயரும். சூரியன், ராகு 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள்
ஏற்படும். கணவன்- மனைவி பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்களால் பிரச்சினைகள் தோன்றினாலும்
விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது
நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். அஷ்டலட்சுமி
வழிபாடு செய்வது நல்லது.
ஆனி
மாத கோளான சூரியன் 3-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில்
வெற்றி, நினைத்தது நடக்கும் யோகம் இம்மாதத்தில் உண்டு. பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும்.
சிறப்பான பணவரவால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் சேரும். குடும்பத்
தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும்.
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள்
தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய
வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு
விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும்.
முருக வழிபாடு செய்வது நல்லது.
ஆடி
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சூரியன், குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால்
எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும்
முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த
நிலை உடல் அசதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது,
எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்-
வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழிலில் போட்டிகளை எதிர்கொண்டே
லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும்.
துர்கை வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.
ஆவணி
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன்
இருந்து நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் ஏற்றங்களை அடைய முடியும். குடும்பத்தில்
பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது
நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும்.
கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார்
உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை
தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். கிடைக்கும்
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
புரட்டாசி
உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று 6-ல்
சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். கடந்த கால நெருக்கடிகள் குறையும்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலை சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள்
அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும்
வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல
வரன்கள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும்.
கடன்கள் குறைந்து கண்ணியமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து
செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள்
கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால்
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கம். குரு, சனி 10-ல் இருப்பதால் எதிலும் சிக்கனத்துடன்
செயல்படுவது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு
கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும்
ஒரளவுக்கு இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம்
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில்
வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் ஓரளவுக்கு எதிர்பார்த்த
லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
கார்த்திகை
உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பது குடும்பத்தில்
நிம்மதியை குறைக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி ஒற்றுமை
குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வரும் 4-ஆம் தேதி முதல் குரு
11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப்
பணியாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலில் நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில்
சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பல பெரிய மனிதர்களின் உதவியும்
ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள்
குறையும் சிவ வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி
உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லா
வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை
தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில்
நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி
வரும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள்
உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப்
பெறுவர். விநாயகரை வழிபடுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தை
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு
வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான பதவி உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில்
வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார
மேன்மை யாவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும்,
அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும்
நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
மாசி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு
ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து
நடந்து கொள்வது உத்தமம். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும்.
செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின்
ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். முருக வழிபாடு
செய்வது நல்லது.
பங்குனி
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில்
குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.
கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில்
நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி
அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக்
காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள்
உற்சாகத்தினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்
செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
No comments:
Post a Comment