Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022

 பிலவ வருட பலன்கள் 2021-2022

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி நேயர்களே!  உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ஆண்டுகோளான குரு இவ்வாண்டில் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். 

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கண்டச்சனி நடைபெறுகிறது இதனால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது உங்கள் ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் காலம் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் தான் உங்கள் முயற்சிகளுக்கு ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. எதிலும் நீங்கள் முன் நீன்று செயல்பட்டால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல் படமாட்டார்கள். எதிலும் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளிடம் பேசும் போது பொறுமையுடன் பேசுவது நல்லது. 

இவ்வாண்டில் குரு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்

தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல் நிலை சோர்வடையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொண்டு எதிலும் கட்டுப்பாடுடன் செயல்பட்டால் தான் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை சமாளித்து அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாராநிலை

கணவன்- மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற உடன் இருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தக்க நேரத்தில் உதவிகள் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரித்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியான நிலையிருக்கும் எதிலும் திறம்பட செயல்படுவீர்கள்-. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலைபளு அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் செயல்களில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாக இருக்கும்.

கலைஞர்கள்

கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நிறைய பிரச்சினைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளுக்கு தீனி போடும் வகையில் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்களை உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை எற்ற இறக்கமாக இருக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லது நடக்க சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

படிப்பு

மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 10--ல் சூரியன், சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மூலம் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். வெளியூர் தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது முருகரை வழிபடுவது நல்லது.

வைகாசி

உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். முருகரை வழிபாடு நல்லது 

ஆனி

ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.  

ஆடி

ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் சனி, 8-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம்.  தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆவணி

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். 11-ல் ராகு சஞ்சரிப்பதால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அஞ்சநேயர் வழிபாடு உத்தமம்.        

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் குறையும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுப காரிய முயற்சியில் நன்மை உண்டாகும். பொன், பொருள், வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது. 

மார்கழி

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் வெளி மாநிலம் செல்லும் வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 8-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.

தை

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் எற்படாமல் தவிர்க்கலாம்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். சிவனையும் விநாயகரையும் வழிபாடு செய்வது நல்லது.

மாசி

உங்கள் ராசிக்கு 8-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். இம்மாத முற்பாதியில் செவ்வாய் 6-லும், ராகு 11-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன் மூலம் லாபத்தை அடைய முடியும். அசையும் அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். மாத முற்பாதியில் சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9     நிறம் - வெள்ளை, சிவப்பு   கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து          திசை - வடகிழக்கு        தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: