Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 துலாம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து எல்லா வகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும்.

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் உங்களுக்கு அதிக கெடுதிகளை செய்ய மாட்டார். உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். வேலைபளு காரணமாக நேரத்திற்கு உணவு உன்பதில் இடையூறுகள் ஏற்படும்.

இவ்வாண்டில் ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது. பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் பொறுமையுடன் சிந்தித்து பேசுவது நல்லது.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல்வேறு அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டிய நிலை ஏற்படும். போட்ட முதலீட்டை எடுக்க அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் வேலையை நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் சம்பள உயர்வு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் எதிலும் கண்ணும் கருத்துடன் செயல்பட்டால் தான் ஏற்றங்களை அடைய முடியும்.

இவ்வாண்டில் குரு 5-ல் சஞ்சரிப்பது உங்கள் வாழ்வில் வலமான பலனை தரும் அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் தேவையற்ற இடர்பாடுகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு  நலமாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றி ஒற்றுமை குறையும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தேவையற்ற போட்டிகள் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தூர பயணங்கள் காரணமாக உடல் அசதி ஏற்படும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். வெளியூர் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். சில நேரங்களில் குடும்பத்தை விட்டு வெளி இடங்களில் சென்று தங்கி பணி புரிய நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை தந்தாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். நல்ல பதவிகள் கிடைக்கும் என்றாலும் உடன் இருப்பவர்கள் தேவையற்ற இடையூறுகளை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு முன்னேற்றம் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு அலைச்சலுக்கு பிறகு வெற்றி கிட்டும். நீர் வரத்து சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வேலையாட்களை சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்க சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். மற்றக் கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டி போகும். எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் தக்க நேரத்தில் வந்து சேரும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு  பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

படிப்பு

கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகப் பலன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவனையும் அம்மனையும் வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் குரு 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவியால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அஷ்டலட்சுமியையும், சிவனையும் வழிபாடு செய்வது நல்லது.

ஆனி

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சூரியன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்கள் சற்று குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.         

ஆடி

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் வரும் 4-ஆம் தேதி முதல் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும்.  அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

ஆவணி

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தின் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களை பெற முடியும்.  உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.  

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். முருகரை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ஐப்பசி    

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி 4-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரும் 4-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றர் உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் இருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நற்பலனை தரும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் ஏற்படும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.  

தை

குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் வரும் 3-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் 4-ல் இருப்பதால் அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிவனை வழிபாடு செய்வது நல்லது

மாசி

உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்கள், தாராள தனவரவுகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி 4-ல், சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பங்குனி

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் குரு 5-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8         நிறம் - வெள்ளை, பச்சை  கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்         திசை - தென் கிழக்கு       தெய்வம் - லக்ஷ்மி

No comments: