Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 மிதுனம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022 மிதுனம்

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட நபராக இருப்பீர்கள், இந்த பிலவ வருடத்தில் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் தன காரகன் குரு பிரதான காலம் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வளமான பலன்கள் நடக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்களும் கடந்த கால தேக்கங்கள் விலகி லாபங்களை ஈட்டும் வாய்ப்பும் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்பட்டு மன நிம்மதி ஏற்படும். சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.

இவ்வாண்டு முழுவதும் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடைபெறுவதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு 9-ல் இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.  பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது, உங்கள் பெயரில் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை.

இவ்வாண்டில் குரு 9-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அஷ்டமச்சனி நடப்பதால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலம் பெறுவீர்கள். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சாதகமாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.  கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்கள் தக்க நேரத்தில் உங்களை வந்தடைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து சென்றால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களின் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு

விளைச்சல் ஒரளவுக்கு சாதகமாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உரிய நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையில் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. புத்திர வழியில் இருந்த மனசஞ்சலங்கள் விலகி மன நிம்மதி ஏற்படும்.

படிப்பு

கல்வியில் நல்ல மதிப்பெண் எடுக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் ஆரோக்கிய பாதிப்புகளால் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். பொருளாதார மேன்மைகளால் கடன்கள் நிவர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். ஆஞ்நேயரையும், துர்க்கையும் வழிபடுவது நல்லது.

வைகாசி

உங்கள் ராசிக்கு குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

ஆனி

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி குடும்ப ஒற்றுமை குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ஆடி

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 6-ல் கேது, வரும் 4-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிரபாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். உத்தியோக ரீதியாக பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது துர்க்கையை வழிபடுவது நல்லது.

ஆவணி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய், 6-ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் வரவுகள் மகிழ்ச்சியை  அளிக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

ஐப்பசி    

உங்கள் ராசியதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் 6-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலை இருக்கும். பிள்ளைகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிவன், முருகரை வழிபாடு செய்வது நல்லது.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன், 6-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். வரும் 4-ஆம் தேதி முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தாராளமாகி உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். அம்மன் வழிபாடு நல்லது.

மார்கழி

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

தை

உங்கள் ராசிக்கு குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இம்மாதத்தில் செவ்வாய் 7-ல் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு, வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

மாசி

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் மேன்மைகளை அடையும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதனால் அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். செவ்வாய், சனி 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. முருகரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,      நிறம் - பச்சை, வெள்ளை,   கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்  திசை - வடக்கு              தெய்வம் - விஷ்ணு

No comments: