Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 சிம்மம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022 சிம்மம்

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த கால கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தி சமுதாயத்தில் நல்ல நிலையினை அடைய முடியும். கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ல், கேது 4-ல் இவ்வாண்டு முழுவதும் சஞ்சரிக்க உள்ளதால் சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம் என்றாலும் குரு சனி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால் வலமான பலனை அடைவீர்கள்.

இவ்வாண்டில் குரு 7-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்

பொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். வர வேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசை போன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

படிப்பு

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்விக்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பெயரை பெற்று தரும்.  வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி

உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 10-ல் சூரியன், 10, 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மேன்மையால் வாழ்க்கை தரம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

ஆனி

உங்கள் ராசியதிபதி சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும் 10, 11-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் மூலம் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கையம்மனையும் முருகரையும் வழிபாடு செய்வது நல்லது.       

ஆடி

உங்கள் ராசிக்கு சனி 6-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சனி 6-ல் இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் திருப்திகரமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளுவும் குறையும். முருக வழிபாடு செய்வது சிறப்பு.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஐப்பசி    

உங்கள் ராசியதிபதி சூரியன் 3-ல் செவ்வாயுடன் இம்மாதம் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வினாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு செவ்வாய் 3-ல், சனி 6-ல், வரும் 4-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் தேவைக் ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம். 

மார்கழி

உங்கள் ராசிக்கு சனி 6-ல், குரு 7-ல் சஞ்சரிப்பது மிகவும் சாதகமான அமைப்பாகும். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சிவனையும், முருகரை வழிபடவும்.

தை

உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

மாசி

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். இம்மாதம் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். சிவ பெருமானை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9             நிறம் - வெள்ளை, சிவப்பு          கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் -  மாணிக்கம்          திசை - கிழக்கு       தெய்வம் - சிவன்

No comments: