Thursday, November 11, 2021

கன்னி ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

கன்னி  ராசி - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(20-11-2021 முதல் 13-04-2022)

கணித்தவர்

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

ஆசிரியர் –பாலஜோதிடம் வார இதழ்





கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பிறரது மனம் புண்படாத வகையில் அனைவரிடமும் அன்பாய்ப் பழகும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரித்த ஆண்டு கோளாளான குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பெருளாதார ரீதியாக அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விதத்திலும் நெருக்கடிகள் ஏற்படாத அளவிற்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உடன் இருப்பவர்களே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் மற்றவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.  மன நிம்மதியான நிலை இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.

            தொழில் வியாபார ரீதியாக மறைமுக எதிர்ப்புகள், சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் உங்களின் தனி திறமையால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறிது தேக்க நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காண முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தினால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருந்து படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள் என்றாலும் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழி சொல்களை எதிர் கொள்ள நேரிடும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் மூலம் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.

 

தேகஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை சந்தித்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பயணங்களால் உடல் அசதி இருந்தாலும் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை தரம் உயரும்

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் சிறிது மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பாராத பணவரவுகள் மூலம் பொருளாதார நிலை உயர்வடையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். தேவையற்ற மறைமுக எதிர்ப்பால் வீண் வம்பு ஏற்படும்.

தொழில் வியாபாரிகளுக்கு

குரு பகவான் 6-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகளையும், போட்டி மற்றும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டாலும் சனி 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் திறமையுடன் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து பொருட் தேக்கம் இல்லாமல் லாபத்தை அடைவீர்கள். எதிலும் சற்று நிதானித்துச் செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றத்தை எளிதில் அடைய முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்படும். வீண் பழிச்சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளை உண்டாகும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு வெற்றி கொள்ளக் கூடிய ஆற்றல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலைகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் தோன்றி மறையும். சேமிப்புகள் சற்று குறையும்.

அரசியல்வாதிகளுக்கு

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு குறையும் என்றாலும் எதையும் சமாளித்து பெயரையும் புகழையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உடன் இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண் வம்பு, தேவையற்ற எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும்.

படிப்பு

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படக் கூடிய காலம் என்றே சொல்லலாம். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்த்தால் ஒரளவுக்கு கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கேது 3-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும். 

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். கேது 3-ல், சனி 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகளில் அமரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் சி-றுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் சனி 5-ல், கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய வலிமையைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை பாதிப்படையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். ராகு 9-ல் சஞ்ரிப்பதால் பயணங்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது மூலம் உங்களுக்கு உள்ள வேலைபளு குறையும்.

 

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள், புத்தகங்கள் மற்றும் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது, ஏழை எளிய பிராமணர்களுக்கு முடிந்த தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                         நிறம் - பச்சை, நீலம்       கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை         திசை - வடக்கு                  தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: