புத்தாண்டு பலன் - 2022 - மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம்
1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான
அறிவு ஆற்றலால் பலரை வழி நடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வரும் 2022-ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டில்
8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு விஷயத்திலும்
ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்
செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-
உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் நற்பலன்களை அடைய முடியும்.
சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல்
வரும் 12.04.2022 முடிய சஞ்சரிப்பதாலும் அதன் பின்பு ஏற்படும் சர்ப்பகிரக மாற்றத்தின்
மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க
கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும்.
ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு
பாக்கிய ஸ்தானமான 9-ல் 13-04-2022 முடிய சஞ்சரிப்பதால் முதல் மூன்று மாதங்கள் உங்களின்
பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஆண்டின்
தொடக்கத்தில் மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக நீங்கள்
எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான்
வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக
இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள்
ஏற்படும் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை
தவிர்ப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த
லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால்
அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் காலம் என்பதால் உங்கள் பணியில்
கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.
திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும்
சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல்
சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் நெருக்கடிகள் குறைந்து
உங்களுக்கு பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது
நல்லது. அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்
இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில்
ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை
அடைவீர்கள்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க
வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது
நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து
கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள முடியும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் நல்லது நடக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக
இருக்கும். ஏப்ரலுக்கு பிறகு சற்று தேக்கங்கள் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில்
சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது
போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார ரீதியாக
இருக்கும் நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும்
அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள்
ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்
போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும்
காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள்,
பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின்
ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். பதவி உயர்வுகளை ஆண்டின் தொடக்கத்தில்
அடைய முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த
சம்பள பாக்கிகள் கைக்கு வரும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு
படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை
தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க
நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது,
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட
வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள்
மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
சரியான நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காததால் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட நேரிடும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால்
அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும்
எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
சுபகாரியம் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால்
அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
படிப்பு
கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை
ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற
நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்
பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும்
மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமாக
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில்
அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டு
கொடுத்து செல்வது மூலம் அமைதியை நிலைநாட்ட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்
அனுகூலப் பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான
வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 03-01-2022 மாலை 06.52 மணி முதல் 05-01-2022
இரவு 07.53 மணி வரை மற்றும் 31-01-2022 அதிகாலை 05.46 மணி முதல் 02-02-2022 காலை
06.45 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால்
பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல்
போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து
சுபகாரியங்கள் கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 7-ல், சூரியன் 8-ல் மாத முற்பாதியில்
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்தாலும் வேலையாட்களை அனுசரித்து
செல்வது பிரச்சனைகளை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த
உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால்
அலைச்சல் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 27-02-2022 பகல் 02.22 மணி முதல் 01-03-2022
மாலை 04.31 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும்
சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள்
ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்
ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்
கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் அமையும். கூட்டாளிகளும்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 26-03-2022 இரவு 08.28 மணி முதல் 28-03-2022
இரவு 11.54 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு இம்மாதத்தில் சூரியன், புதன்
10,11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் போன்றவற்றை
வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்
மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆன்மீக
தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான
பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்
கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது
நல்லது.
சந்திராஷ்டமம் - 23-04-2022 அதிகாலை 01.52 மணி முதல் 25-04-2022
அதிகாலை 05.30 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு ராகு 11-ல், மாத முற்பாதியில்
சூரியன் 11-ல், மாத பிற்பாதியில் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள்.
சனி அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள்
சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்-
வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது
உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு
சிறப்பாக இருக்கும். விஷ்ணுவை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 20-05-2022 காலை 08.45 மணி முதல் 22-05-2022
பகல் 11.12 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு, 10, 11-ல் செவ்வாய்,
மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள்
ஏற்படும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள
வேண்டியிருக்கும். பணவரவுகள் ஒரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் மாத முற்பாதியில்
12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள்
அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது
உத்தமம்.
சந்திராஷ்டமம் - 16-06-2022 மாலை 05.55 மணி முதல் 18-06-2022
மாலை 06.42 மணி வரை.
ஜுலை.
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய்,
ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும்
என்றாலும் குரு 10-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்
உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால்
முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில்
எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை
இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது
நல்லது.
சந்திராஷ்டமம் - 14-07-2022 அதிகாலை 04.32 மணி முதல் 16-07-2022
அதிகாலை 04.15 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும்,
மாத முற்பாதியில் 11-ல் செவ்வாய், பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு
என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்
போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள்
சாதகமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் மேலோங்கும். பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில்
தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடைப்படும். பூர்வீக சொத்துகளால்
அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும்.
உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நிம்மதி ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 10-08-2022 பகல் 02.58 மணி முதல் 12-08-2022
பகல் 02.50 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசியதிபதி புதன் 4-ல், ராகு 11-ல்,
மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள்
கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில்
அனுகூலப்பலன் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில்
சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது
உத்தமம்.
சந்திராஷ்டமம் - 06-09-2022 இரவு 11.37 மணி முதல் 09-09-2022
அதிகாலை 00.40 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 4-ல் சூரியன்,
12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் புதன், சுக்கிரன்
4, 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. உடல் சோர்வு, மந்தநிலை உண்டாகும். குடும்பத்தில்
உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும்.
பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வண்டி வாகனங்கள்
மூலம் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம்
சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு
செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 04-10-2022 காலை 06.01 மணி முதல் 06-10-2022
காலை 08.27 மணி வரை மற்றும் 31-10-2022 பகல் 11.23 மணி முதல் 02-11-2022 பகல்
02.15 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் புதன்,
சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும்
அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். பணவரவுகள் ஓரளவு
சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில்
வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் நிமம்தி குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள்
போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். உத்தியோகத்தில்
உள்ள நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். மறைமுக எதிர்ப்புகள்
மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 27-11-2022 மாலை 06.05 மணி முதல் 29-11-2022
இரவு 07.50 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு,
7-ல் புதன், சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும்.
உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம்
செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்
பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை
தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-12-2022 அதிகாலை 03.30 மணி முதல் 27-12-2022
அதிகாலை 03.30 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8, நிறம் - பச்சை, வெள்ளை,
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம் திசை
- வடக்கு தெய்வம் - விஷ்ணு
No comments:
Post a Comment