Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - மகரம்

 

புத்தாண்டு பலன் - 2022 - மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே, நண்பர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் சமமாக பழகும் குணமும் எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் தாங்கி கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வரும் 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜெனம் ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. எதிலும் நிதானமாக செயல்பட்டால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்வில் ஏற்றங்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்த மாட்டார் என்பதால் எதை எதிர் கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.

வரும் 2022-ல் ஆண்டில் 13-04-2022 முடிய ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏப்ரல் வரை பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அளிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். சொந்த பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் முடிந்த வரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனி திறமையால் எதையும் சமாளித்து போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். வேலையாட்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் வாய்ப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாய பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

சர்ப கிரகங்களான கேது உங்கள் ராசிக்கு ஆண்டு தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சி மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சலையும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளையும் ஏற்படுத்தலாம் என்பதால் முடிந்த வரை வேலைபளுவை குறைத்து கொள்வது நல்லது.

திருக்கணிதப்படி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கும் காலத்தில் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் சிறிது குறைந்து ஒரு சில ஆதாயங்களை அடையும் யோகம் உண்டாகும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முடியும். அதிக அலைச்சல் காரணமாக கை கால் மூட்டுகளில் வலி உடல் அசதி உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க முடியாது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் காரணமாக சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

இவ்வாண்டு தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். நெருங்கியவர்கள் உதவி தக்க நேரத்தில் கிடைப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு, வழக்கு பிரச்சினைகளில் சற்று இழுபறியான நிலை ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். ஆண்டின் முற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் போட்ட முதலீட்டை எடுத்து முன்னேற முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் வேலைபளு சற்று அதிகரிக்கும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அனைவரிடமும் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.

அரசியல் வாதிகளுக்கு

பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி இருந்தாலும் அதற்கு ஏற்ற வருவாய் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் சற்று ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களைப் பெருவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பத்திரிக்கை நண்பர்களால் அனுகூலமான பலனை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராகத் இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும் என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். ஆண்டின் முற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிட்டும். பங்காளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.

பெண்களுக்கு

பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

படிப்பு

கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். நல்ல நட்புக்களாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது, மாத முற்பாதியில் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-01-2022 காலை 08.24 மணி முதல் 22-01-2022 மாலை 04.48 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். செவ்வாய் 12-ல், சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். ஆஞ்சநேயர் வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் - 16-02-2022 பகல் 03.14 மணி முதல் 18-02-2022 இரவு 10.46 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்ற குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். எதிலும் திறம்பட செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-03-2022 இரவு 11.33 மணி முதல் 18-03-2022 காலை 06.32 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகளை பெற முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 12-04-2022 காலை 08.34 மணி முதல் 14-04-2022 மாலை 03.54 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 5-ல் புதன், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் உண்டாகும். சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் வீண் பேச்சை குறைத்தால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 09-05-2022 மாலை 05.07 மணி முதல் 12-05-2022 அதிகாலை 01.32 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 4, 5-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 05-06-2022 இரவு 12.24 மணி முதல் 08-06-2022 காலை 10.03 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. இம்மாத முற்பாதியில் 5-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. முருகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 03-07-2022 காலை 06.30 மணி முதல் 05-07-2022 மாலை 04.50 மணி வரை மற்றும் 30-07-2022 பகல் 12.12 மணி முதல் 01-08-2022 இரவு 10.30 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து செல்வது மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 26-08-2022 மாலை 06.32 மணி முதல் 29-08-2022 அதிகாலை 04.15 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீண் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 23-09-2022 அதிகாலை 02.03 மணி முதல் 25-09-2022 பகல் 11.20 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு இம்மாதம் 9, 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். ஜென்ம சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 20-10-2022 காலை 10.30 மணி முதல் 22-10-2022 இரவு 08.05 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற முடியும். வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் - 16-11-2022 மாலை 06.58 மணி முதல் 19-11-2022 அதிகாலை 05.28 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்பட்டாலும், 3-ல் குரு, 12-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ஆஞ்சநேயரை வணங்குதல் உத்தமம்.

சந்திராஷ்டமம் - 14-12-2022 அதிகாலை 02.32 மணி முதல் 16-12-2022 பகல் 02.03 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8  நிறம் - நீலம், பச்சை         கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்         திசை - மேற்கு        தெய்வம் - விநாயகர்

 

No comments: