Sunday, January 15, 2023

கும்பம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



கும்பம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கும்பம்  ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்தோடு மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது, தகுந்த இடைவேளையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கொள்வது நல்லது. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து தருவது தற்போதைக்கு நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருப்பது வீண் பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காது. தொழில் ரீதியாக அதிக முதலீடுகள் செய்யாமல், இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். பொதுவாக தொழில் அபிவிருத்திகளை தற்போதைய நேரத்திற்கு தவிர்ப்பது உத்தமம். அப்படி அவசியம் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது. அரசு வழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களது ஓய்வு நேரம் குறையும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் உண்டாகும். பெரிய வாய்ப்பு எதிர்பார்க்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மேலதிகாரியிடம் பேசுகின்ற பொழுதும் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் நிதானத்தோடு இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். வம்பு, வழக்குகளில் மிகவும் நிதானத்தோடு கையாள்வது நல்லது.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் வரும் 22-04-2023 வரை 2-ல் சஞ்சரிக்கக்கூடிய காலம் மட்டுமே உங்களுக்கு சாதகமான நேரமாகும். ஜென்மச்சனி நடக்கும் இக்காலத்தில் ஏப்ரல் 2023-க்கு பிறகு குரு 3, 4-ஆம் வீடுகளில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் உடனிருப்பவர்களே சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் முயற்சியால் நல்லது நடக்கும்.

சர்ப்ப கிரகமான ராகு வரும் 30-10-2023 வரை 3-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பாகும். இதன் காரணமாக ஒரு சில விஷயங்களில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். அக்டோபர் 2023-க்கு பிறகு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்று.

 

உடல் ஆரோக்கியம்

உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தர வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொள்வதும், எதிலும் பொறுமையோடு செயல்படுவதும் நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, எந்த ஒரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களால் மன நிம்மதி குறையும். பொருளாதார நெருக்கடிகள், சக்திக்கு மீறிய செலவுகளால் உங்களின் கையிருப்பு குறையக்கூடிய நிலை ஏற்படும். பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். கடன்கள் அதிகரிக்க கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிறு தடைக்கு பிறகு சுப காரியங்கள் கைகூடும்.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறருக்கு நீங்கள் கொடுத்த பணத்தை வாங்குவதில் தேவையற்ற சுணக்கங்களும், வீண் மனஸ்தாபங்களும் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டிய நேரமாகும். அதிக தொகையை கையாளுகின்ற பொழுது மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள் என்றாலும் அதிகப்படியான போட்டிகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. வேலையாட்கள் ஒரு புறம் வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். நீங்கள் செய்யும் பணிகளில் கவனத்தோடு இல்லாவிட்டால் தேவையற்ற சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அதிகப்படியான அலைச்சல், மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். பொறுப்புகள் அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலை அதனால் ஓய்வு நேரம் குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் உடல் உபாதைகளால் பணியில் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலை, அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்காமல் முடிந்தவரை பணியில் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்

உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளால் மக்கள் மத்தியில் நீங்கள் தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவை பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் ஆகும். கட்சி பணிகளுக்காக வீண் செலவுகள் ஏற்படும். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. போதிய நீர் இல்லாமலும் வேலையாட்கள் தரும் பிரச்சினையாலும் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களுடைய அத்தியாவசிய செலவுக்காக கடன் வாங்கக் கூடிய நிலை உண்டாகும். கால்நடைகள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படும்.

பெண்கள்

தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்று. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். பிள்ளைகள் வழியில் மனக்கவலைகள் உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சிலருக்கு கடன்கள் அதிகரிக்கும்.

கலைஞர்கள்

நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும். போட்டிகள் காரணமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தடைப்படும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். மற்றவரிடம் பேசுகின்ற போது நிதானத்தோடு இருப்பதும், கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் இருப்பதும் நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் மந்த நிலை ஏற்பட்டு நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் அடைவதில் தடைகள் உண்டாகும். வீண் சகவாசத்தை குறைத்துக் கொண்டு ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே அனுகூலமான பலன்களை அடைய முடியும். பெற்றோர், ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             17-01-2023 முதல் 14-03-2023 வரை

ஜென்ம ராசியில் சனி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் சில குறைபாடுகள் உண்டாகும். 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித் திறமையால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருந்தாலும் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். வெங்கடேச பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், 22-04-2023 வரை குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதும் உங்களுக்கு பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக ஈடுபடுவதன் மூலமாக எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

சனிபகவான் வக்ர கதியில்        18-06-2023 முதல் 04-11-2023 வரை

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அலைச்சல், டென்ஷன் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சட்ட சிக்கல்கள் சில விலகி மன நிம்மதி உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

ஜென்ம ராசியில் சனி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 2-ல் ராகு, 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்காது. நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நியாயப்படி கிடைக்க வேண்டிய பண வரவுகள் கூட தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் அதிகரிப்பதால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உடல் அசதி உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மையை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பண வரவில் தேக்கம் ஏற்பட்டு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்க தடங்கல் உண்டாகும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. வேலைக்கு செல்பவர்களுக்கு அலைச்சல், உடன் வேலை செய்பவர்களால் நெருக்கடி ஏற்படும் நேரமாகும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கெடுதியை குறைக்கும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி ஜென்ம ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலை ஆட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மட்டுமில்லாமல் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்க முடியும். 01-05-2024 முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்        30-06-2024 முதல் 15-11-2024 வரை

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் சற்று குறைந்து எதிர்பாராத ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு 8, 10, 12-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை விலகி படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒரு தீர்வு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலையும், அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். தூர பயணங்களை தள்ளி வைப்பது, நேரத்துக்கு சாப்பிடுவது நன்று. துர்க்கை வழிபாடு மேற்கொள்வதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றுவது கெடுதியை குறைக்கும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி ஜென்ம ராசியில் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ராகு 2-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. உங்களது பொருளாதார தேவைகள் தக்க நேரத்தில் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சிறிது காலத்துக்கு தள்ளி வைப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது, பேச்சை குறைத்துக் கொள்வது நன்று. ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும் என்றாலும் கூட்டாளிகள் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனமாக செயல்படுவதும், அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது. உக்கிர தெய்வங்களை வழிபட்டால் பிரச்சினைகள் குறையும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி பகவான் ஜென்ம ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டுகளை எடுத்துக் கொள்ளவும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் பொறுமையாக இருப்பது, விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய உடனிருப்பவர்களே இடையூறுகளாக இருப்பார்கள். வேலையாட்களையும், கூட்டாளிகளையும அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டு சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களை பேசாமல் இருப்பது உத்தமம். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, பைரவரை தரிசிப்பது நன்று.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8            கிழமை - வெள்ளி, சனி                       திசை - மேற்கு

கல் - நீலக்கல்           நிறம் - வெள்ளை, நீலம்                  தெய்வம் - ஐயப்பன்

No comments: