Sunday, January 15, 2023

கன்னி - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



கன்னி - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமும் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்ற மிகுந்த பலன்கள் நடக்கும். நீண்ட நாளைய கனவுகள் தற்போது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அனைத்து செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான நிலை ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீராத வம்பு, வழக்குகளில் கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். புதிய வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் பூர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்க கூடிய அமைப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பண பரிமாற்ற விஷயங்களில் அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி வெற்றி காண்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஆதாயங்களை அடைவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளையும், உதவிகளையும் பெற முடியும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும்.

சனி 6-ல் சஞ்சரிக்கக்கூடிய இந்த தருணத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 22-04-2023 வரை 7-ஆம் வீட்டிலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் இக்காலங்களில் உங்களின் பொருளாதார நிலை மேலும் சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு, கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் குறிப்பாக வரும் 30-10-2023 வரை 2-ல் கேது, 8-ல் ராகுவும் அதன் பின்பு வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகுவும் சஞ்சரிப்பது நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடு ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல்நிலை மிகச் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளும் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக தாராள தன வரவுகள் ஏற்பட்டு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளை தற்போது குறைத்துக் கொள்ள முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பண பரிமாற்ற விஷயங்களில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பகை பாக்கிகள் தற்போது கிடைத்து கடன்கள் குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அதிக லாபத்தை ஈட்ட முடியும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெற முடியும். வெளியூர், வெளி மாநில தொடர்புகள் மூலமாக ஒரு மிகப்பெரிய அனுகூலத்தை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

உங்களுக்கு கடந்த கால மனக்கவலைகள் எல்லாம் விலகி பல்வேறு வளமான பலன்களை பெரும் நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். வேலை ஆட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வெளி நபர்களால் இருந்த தொந்தரவுகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவியை அடையக்கூடிய யோகம், விரும்பிய இடமாற்றத்தை அடையும் வாய்ப்பு ஏற்படும். புதிய வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி பணியில் ஒரு சுமூகமான நிலையும், மன நிம்மதியுடன் பணி புரியக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.

அரசியல்

நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக குறைந்து, இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தலைவர்களுடைய ஆதரவு உங்களுக்கு இருப்பதால் மக்கள் மத்தியில் உங்களின் பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் செயல்களை குறித்த நேரத்தில் எளிதில் செய்து முடிக்க முடியும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கி விவசாயத்தில் புதிய உக்தியை கையாள்வீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

பெண்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கடன் தொல்லைகள் எல்லாம் விலகி சுபிட்சமான நிலை உண்டாகும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கலைஞர்கள்

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து உங்கள் திறமைகளை வெளிக்காட்ட முடியும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது சிறப்பான ஒரு விடிவு காலம் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் விலகி நீங்கள் ஒரு நல்ல நிலையை அடையும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. போட்டி தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் யோகம் உண்டு. பெற்றோர் ஆசிரியர் ஆதரவு சிறப்பாக இருக்கும். உயர்கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த கல்வி வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             17-01-2023 முதல் 14-03-2023 வரை

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆண்டுக் கோளான குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுடைய தேவைகள் பூர்த்தியாவதுடன் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இட மாற்றங்களை பெறுவீர்கள். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. துர்க்கை வழிபாடு நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி உங்கள் ராசிக்கு 6-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையும் வாய்ப்பு உண்டு. பணம் பலவகையில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் சட்ட சிக்கல்கள் குறைந்து நல்ல வளர்ச்சி உண்டாகும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது, பயணங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஏப்ரல் 22 க்கு பிறகு குரு 8-க்கு செல்ல இருப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது உத்தமம். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு கெடுதியை குறைக்கும்.

சனிபகவான் வக்ர கதியில்                                18-06-2023 முதல் 04-11-2023 வரை

சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் நிதானமாக செயல்பட்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். நேரத்துக்கு சாப்பிடுவது மூலம் தேவையற்ற உடம்பு பாதிப்புகளை தவிர்க்க முடியும். வீடு, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும் என்றாலும் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, அம்மன் வழிபாடு கெடுதியை குறைக்கும்.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பண வரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நவீனமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கெடுதிகள் குறைந்து நல்ல வளர்ச்சி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். நவீன யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சுப காரிய முயற்சிகள் கைகூடும். சர்பேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி ராகு நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் வருகின்ற நாட்களில் நடக்கும். உங்களுடைய கனவுகள் நிறைவேறும். பொருளாதார ரீதியாக ஒரு சிறப்பான நிலை ஏற்பட்டு அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உச்சநிலையை எட்டுவீர்கள். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் குறையும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சந்தரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ராகு காலத்தில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி பகவான் பொன்னவன் என போற்றப்படும் குருவீன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். 01-05-2024 முதல் 9-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். வீடு, மனை போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் மறைந்து ஒரு உயர்வான நிலையை எட்ட முடியும். கணவன்- மனைவியிடையே அனுசரித்து செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                    30-06-2024 முதல் 15-11-2024 வரை

சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் ஏற்றங்களை பெற முடியும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து சமுதாயத்தில் ஒரு உயர்வான நிலையை எட்டுவீர்கள். தொழில், வியாபாரம் நல்ல லாபத்தை தருவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். பண பரிமாற்ற விஷயங்களில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் கூடக்கூடிய ஒரு உன்னதமான நிலை உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஜென்ம ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் சிறிது நெருடல் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி பகவான் சுப கிரகமான குருவீன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் 9-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சமும், மகிழ்ச்சியும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் சிலருக்கு வீடு, மனை போன்றவற்றை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட அதிகப்படியான லாபங்களை அடைய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் கையாண்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் மூலம் அனுகூங்கள் உண்டாகும். ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8             நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை            திசை - வடக்கு         தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: